தேவை நல்ல மனநிலை!

நம் நாட்டின் மிகப்பெரிய பிரச்னைகளைக் கையிலெடுத்து ஆராய்ந்து தீர்த்து வைக்காமல் சம்பந்தப்பட்ட அனைவருமே சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை மட்டும் மிகப்பெரிய அளவில் விவாதித்து மகிழ்கிறோம்.

நம் நாட்டின் மிகப்பெரிய பிரச்னைகளைக் கையிலெடுத்து ஆராய்ந்து தீர்த்து வைக்காமல் சம்பந்தப்பட்ட அனைவருமே சுவாரஸ்யமான பல நிகழ்வுகளை மட்டும் மிகப்பெரிய அளவில் விவாதித்து மகிழ்கிறோம்.

பல ஊடகங்களிலும் ஒரு பிரச்னை பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு, பின் அடுத்த பிரச்னை ஒன்று கையிலெடுக்கப்பட்டு விளம்பரமாகும்போது முந்தையப் பிரச்னையைப் பற்றி யாருமே கவலைப்படுவது கிடையாது என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒரு அம்சம்.

சமீபத்தில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்ட மனநோய் நினைவு நாளில், உலக சுகாதார மையம் இந்தியாவின் மொத்த மக்களில் 5.8 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனும் தகவலை அளித்துள்ளது.

இந்த கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் சுமார் ஏழு லட்சம் பேர் தீவிரமான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுமார் 70 லட்சம் பேர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில், சுமார் 25,000 பேர் "டிமென்சியா, அல்சீமியர்ஸ்' எனப்படும் தீவிர ஞாபக மறதி வியாதிகளால் மூளை பாதிக்கப்பட்ட நிலையில் நம் மாநிலத்தில் உள்ளனர். தீவிரமான மனநோய் பாதிக்கப்பட்ட ஏழு லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக இருந்து வருகிறார்கள். ஆனால், மனநிலை பாதிக்கப்பட்டு, அது தெரியாமலேயே 70 லட்சம் பேர் உள்ளனர் என்ற பிரச்னையை எப்படி நாம் கையாள வேண்டும் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை எனலாம்.

ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் ரூபாய் வருமானம் பெறும் ஒரு முதலாளி நல்ல முறையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் இருந்தால், அவர் மனநோய் பாதிக்கப்பட்டவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல கோடி ரூபாய்கள் லஞ்சம் பெற்ற ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி தன் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் 74 பங்களாக்களை வாங்கியிருந்தது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

நம் நாட்டிலேயே மிகப்பெரிய செல்வந்தர்களான டாடா, பிர்லா, அம்பானி போன்றவர்கள் கூட தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இத்தனை பங்களாக்களை வாங்கியிருக்கிறார்களா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கும்.

நம்மிடம் எவ்வளவு பணம் சேர்ந்திருந்தாலும், சென்னையில் ஒன்று, கோடை வாசஸ்தலமான ஊட்டியிலோ, கொடைக்கானலிலோ ஒன்று, நாம் பிறந்த ஊரில் ஒன்று, நமது குழந்தைகளுக்கு ஒவ்வொன்று என 10-15 பங்களாக்களை வாங்கலாம்.

ஆனால் 74 பங்களாக்களை ஓர் ஆசாமி வாங்கினால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரே. இதுபோலவே, கொல்கத்தா நகரின் முடுக்கு சந்து ஒன்றில் வசிக்கும் ஒரு முனிஸிபல் ப்ளானிங் எஞ்சினீயர், கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க லஞ்சம் வாங்கி தனது 15 ஆண்டு வேலையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளைச் சேர்த்து, தனது வீட்டு தரை ஓடுகளை அகற்றியும், குளியறையிலும் பதுக்கி வைத்துள்ளார். அதைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறையினர் அப் பணத்தை எண்ணி முடிக்க இரண்டு நாள்கள் ஆயினவாம்.

மொத்தம் 20 கோடியே 90 லட்சம் ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தனவாம். ஆனால், இவரது முதல் மாடி வீட்டின் கீழே அவர் உபயோகிக்கும் பழைய மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இவரது மகனும் மகளும் பஸ்ஸில் ஏறி தங்கள் பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று வருவார்களாம். இவர் இவ்வளவு பணத்தை வைத்திருக்கும் ஒருவர் என்பது இவரது குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்கள் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.

ஆக, உபயோகிக்க முடியாத பணத்தை கள்ளத்தனமாக சேர்த்து பதுக்கி வைத்து காப்பது மனநிலை பாதிக்கப்பட்ட இவரது நிலைமையையே காட்டுகிறது. இதுபோல் எண்ணற்ற உதாரணங்களை நாம் சுட்டிக்காட்ட முடியும்.

சென்னை கீழ்ப்பாக்கம், பார்னபி சாலையில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகைக்கு 36 வயது ராஜஸ்தான் இளைஞர் தனது 34 வயது மனைவியுடன்  குடியிருந்து வந்தார். இவர்களுக்கு 14 வயது நிரம்பிய மகளும், ஏழு வயது மகனும் இருந்தனர். கடந்த சில மாதங்களாக குடிப் பழக்கத்துக்கு ஆளான கணவனுக்கும் அவரது மனைவிக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மாதம் 7-ஆம் தேதி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கணவனுடன் மனைவி தகராறு செய்ததால் இவர்களுக்குள் அதிக சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் பெரிய அளவில் மனநிலை பாதிக்கப்பட்ட மனைவி, சில நாள்களுக்கு பின் முடிவெடுத்துள்ளார். தனது இரண்டு குழந்தைகளும் தான் இறந்த பின் வாழ்வது கடினம் என எண்ணி அவர்களை தனது பாவாடை நாடாவில் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விட்டார்.

தானும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இரவு வீட்டிற்கு வந்த கணவன் இறந்து கிடந்த குழந்தைகளையும், வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்த மனைவியையும் கண்டு அதிர்ச்சியடைந்து மனைவியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். சிகிச்சையின் பலனாக உயிர் பிழைத்துள்ளார் மனைவி.

தங்கள் கணவர்கள் மது அருந்துவதைச் சகிக்காத மனைவிகள் எல்லோரும் கணவனுடன் அடிதடி சண்டை செய்வதும் இல்லை, குழந்தைகளைக் கொல்வதும் இல்லை.

பல குடும்பங்களில் மனைவி, கணவன் மது அருந்துவதற்கு வசதியாக, மது பாட்டிலுடன் சோடா, தண்ணீர், சிறு தின்பண்டங்கள் ஆகியவற்றை வழங்குவது உலகெங்கும் காணக் கூடியதே. அப்படியே கணவன் மது அருந்துவது பிடிக்காவிடில் அவனிடம் அன்பொழுகப் பேசி முயற்சிப்பது, அவனது தாய், தந்தையர், சகோதர சகோதரிகள் மற்றும் பெற்றோரிடம் இது பற்றி பேசச் செய்வது கூட சகஜம். அதைவிட்டு குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயல்வது மனநிலை பாதிப்பே!

நமது நண்பர்களில் பலரும் நம்மீது கடுமையான பொறாமையை ஏற்படுத்திக் கொண்டு மனநிலை பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் வாழ்க்கை நமக்கு தரும் அனுபவம் ஆகும். கிராமப்புறங்களில் துவங்கி, கல்லூரிகளிலும், பட்டிணங்களில் பல பெரிய வேலைகளில் அமர்ந்திருப்பவர்கள்கூட தங்கள் பகுத்தறியும் திறனை இழந்து பொறாமையால் மனநிலை பாதிக்கப்படுகிறார்கள் எனலாம்.

உதாரணமாக, நமது கிராமத்தில் நம்முடன் பள்ளியில் பயின்ற ஒரு மாணவ சிநேகிதர் தன் படிப்பை முடித்த பின் ஒரு சாதாரண வேலையில் சேர்ந்து தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வார். அவருடன் படித்த ஒருவர் தன் மேல்படிப்பை தொடர்ந்து பின் அரசில் உயரதிகாரியாக ஆகலாம்.

மற்றொருவர் பிற்காலங்களில் அரசியலில் சேர்ந்து எம்.எல்.ஏ., எம்.பி. போன்ற பதவிகளையோ, அமைச்சர் பதவியைக்கூட பெறலாம். சாதாரண வேலையில் சேர்ந்த நமது கிராமத்து நண்பர், உயரதிகாரியாகி விட்டவரையும், அமைச்சராகி விட்டவரையும் கண்டு பொறாமைப்பட்டு, வேறெதுவும் செய்ய முடியாமையால் மனநிலை பாதிக்கப்படலாம்.

டாக்டர் ராகேஷ் சட்டா எனும் மனநோய் பேராசிரியர், "இதுபோல் மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்தினர் நம்முடன் சாதாரண மக்களைப் போல் உலவுகிறார்கள்' என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்.

இவர்களின் மன அழுத்தம் மனநோயாக மாறலாம். அவ்வாறு மாற்றம் பெற்றவர்கள் ஒருவார காலத்திற்குள் தற்கொலைகள் செய்து கொள்ளும் நிலைமையும் உருவாகும் என கூறுகிறார்கள் மனநோய் மருத்துவர்கள்.

இதைவிடவும் மேலாக, டாக்டர் சித்தார்த் சர்க்கார் எனும் மனநோய் மருத்துவர் கூறுவது மிகவும் கவனிக்கத்தக்கது. தற்கொலைகளை தொலைக்காட்சிகளும் மிகப்பெரிய அளவில் கையிலெடுத்து தற்கொலை செய்தவர்கள் பக்கம் நியாயம் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது மனநிலை பாதிக்கப்பட்ட வேறு சிலரும் தற்கொலை செய்ய தூண்டும்.  தலைநகரின் ஜானக்புரி மாவட்ட மையத்தில் நிறைய பேர் தற்கொலை செய்ததும், தில்லி மெட்ரோ ரயிலில் நிறைய பேர் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டதும் இதற்கான உதாரணங்கள் என எடுத்துக்காட்டப்படுகின்றன.

தமிழ்நாட்டில் வேலைப் பளுவினால் உயரதிகாரிகளின் துன்புறுத்தல்களாலும் டி.எஸ்.பி.,  தீயணைப்புப் படை கான்ஸ்டபிள், வனப் பாதுகாவலர், போக்குவரத்து பேருந்து காவலர் என பலர் வரிசையாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவர்களின் உயரதிகாரிகளின் கீழ், இவர்களைப்போல் பலர் வேலையிலிருந்த போதும், இவர்கள் மட்டும் தற்கொலை செய்தது இவர்களின் பாதிக்கப்பட்ட மனநிலையின் வெளிப்பாடே என்பது திண்ணம்!

எனவே, தற்கொலை நிகழ்வுகளை பெரிய அளவில் பிரசாரம் செய்வதை ஒளிக்காட்சிகள் நிறுத்திக் கொண்டால் மனநிலை பாதிக்கப்பட்ட பலரை காப்பாற்றும் செயலாக அது அமையும் என்கிறார் அகில இந்திய மருத்துவநிலைய மனநோய் மருத்துவர் பிரதாப் சரண்.

குழந்தைகளை நல்ல மனநிலையுடன் வளர்ப்பதில் பெற்றோரும், பள்ளி மாணவர்களை தைரியசாலிகளாகவும், பகுத்தறியும் குணாதிசயங்களுடன் வளர்க்கும் வகையில் ஆசிரியர்களும், கல்லூரியில் நிறைய புத்தகங்களைப் படித்து பயனடையும் வித்தையை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டிய அவசியமும் அவசரமும் உருவாகியுள்ளது.

இதில் அரசும் முழுக் கவனத்தை செலுத்தி புதிய சமூக திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துதல் அவசர அவசியமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com