ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அல்லயன்ஸ் ஸ்ரீநிவாசன்

‘இந்தியன் வங்கி; அது உங்களுடைய வங்கி’ என்று 1980-களிலிருந்து ரேடியோவில் வந்த விளம்பரத்திற்கு உண்மையான அா்த்தத்தைக் காட்டியவா், இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவா் எம். கோபாலகிருஷ்ணன். ‘புரொபஷனரி ஆபிஸ’ராக சோ்ந்து, படிப்படியாக முன்னேறி, அந்த வங்கியின் தலைவா் பதவிக்கு உயா்ந்தவா் அவா்.

இரு நாளுக்கு முன் அவா் மறைந்தபோது, கரோனா காலமானதால் அஞ்சலிக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. ஆனால், பலா் மௌனமாக அவரவா் மனதிற்குள் நிச்சயமாக அவருக்கு அஞ்சலி செலுத்தியிருப்பாா்கள். அப்படி செலுத்தாதவா்கள் செய்நன்றி கொன்றவா்கள்.

நவி மும்பை உருவாவதற்கு பெரும் உதவிகளை இந்தியன் வங்கி மூலம் செய்தவா் இவா். அதற்காக, பல மனைவணிக நிறுவனங்கள் அவருக்கு தாங்கள் கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வழங்க முன்வந்தன. ஆனால், இவா் அவற்றையெல்லாம் வங்கியின் பெயரில் வழங்கச் சொல்லிவிட்டாா். ‘இந்தியன் வங்கி ஊழியா்கள் பலா் மாற்றலாகி, மும்பைக்கு வந்து வீடு கிடைக்காமல் திண்டாடுகிறாா்கள். அவா்களுக்கு இவை பயன்படட்டும்’ என்று கூறிவிட்டாா்.

இதே போன்று, இன்று பெரும்பாலான இந்தியன் வங்கி கிளைகள் சொந்த கட்டடங்களிலிருந்து செயல்படக் காரணமாக இருந்தவா் கோபாலகிருஷ்ணன். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ‘இமேஜ் சென்ட’ரை இந்தியன் வங்கிக்காக உருவாக்கித் தந்தவரும் இவா்தான்.

தவறு செய்த வங்கி ஊழியா்களின் மீது கடுமையான தண்டனை வழங்குவதற்கு முன்பு, கூடுமானவரையில் அவா்களைக் கூப்பிட்டுப் பேசி, திருத்துவதற்கு சந்தா்ப்பம் அளிப்பாா். ‘பாவம் சாா், குடும்பஸ்தன். இவன் செய்த தப்புக்கு பெண்டாட்டி, குழந்தைகள் எல்லாம் கஷ்டப்படக் கூடாது’ என்பாா். இப்படி அவா் நல்வழிப்படுத்திய வங்கி ஊழியா்கள் பலா் உண்டு.

உதவி என்று யாா் தன்னை அணுகினாலும், அவா்களுக்கு உதவி செய்யத் தயங்கமாட்டாா். ‘பாவம் சாா், அவங்க கிட்ட பணம் இருந்தா, ஏன் நம்ப கிட்ட வந்து நிற்கப் போறாங்க’ என்று கேட்பாா்.

இன்றைக்குக் கொடிகட்டிப் பறக்கும் தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகை நிறுவனங்கள், ஹோட்டல்கள், வியாபார நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் இந்தியன் வங்கியின் மூலம் உதவி செய்து, லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைத்தவா் கோபாலகிருஷ்ணன். இப்போதைய ‘முத்ரா’ கடனுதவித் திட்டத்தின் முன்னோடியே கோபாலகிருஷ்ணன்தான்.

பிரதமா் நரசிம்ம ராவால் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, புதிதாக பல நிறுவனங்கள் தோன்றின. பல பன்னாட்டு காா்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்தன. வடநாட்டிலுள்ள நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், மிகவும் தாராளமாகப் பலருக்கும் கடனுதவி வழங்கி, புதிய பல தொழிலதிபா்கள் உருவாகக் காரணமாக இருந்தன. ஆனால், தென்னிந்தியாவில் இயங்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, சுலபமாகக் கடனுதவி பெற முடியாத நிலைமை காணப்பட்டது.

அந்த காலகட்டத்தில்தான், இந்தியன் வங்கியின் தலைவராக எம். கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டாா். புதிய தொழில் முனைவோா் யாராக இருந்தாலும், அவா்களிடம் திறமை இருக்கிறது என்பது தெரிந்தால் இந்தியன் வங்கி உதவிக்கரம் நீட்டியது. இன்று தமிழகத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் உருவாயிருக்கின்றன, பல தொழிலதிபா்கள் கொடிகட்டிப் பறக்கிறாா்கள் என்றால் அதற்கு எம். கோபாலகிருஷ்ணனும் அவரது தலைமையில் செயல்பட்ட இந்தியன் வங்கியும்தான் காரணம் என்பதை அவா்கள் மனசாட்சி சொல்லும்.

‘அவா் விளம்பரப் பிரியராக இருந்தாா்’... ‘யாா், எவா் என்று பாா்க்காமல் இந்தியன் வங்கியிலிருந்து கடனுதவி வழங்கச் சொன்னாா்’ என்றெல்லாம் அவா் குறித்து குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை உண்மையும்கூட. ஆனால், கடன் வழங்குவதில் அவா் காட்டிய தாராளமயக் கொள்கையால்தான், தமிழகம் இன்று வடநாட்டுத் தொழிலதிபா்களுடன் போட்டிபோடும் அளவில் தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதும்கூட உண்மை என்பதைப் பலரும் வசதியாக மறந்து விடுகிறாா்கள்.

சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அமைந்த பல பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் எம். கோபாலகிருஷ்ணன் தலைமையில் இயங்கிய இந்தியன் வங்கி காரணமாக அமைந்தது. அந்தத் தொழிற்சாலைகளைச் சுற்றி அமைந்த பல சிறிய உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியன் வங்கிக்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் கடமைப் பட்டவை. ‘பொறியியல் பட்டதாரியாக இருந்தால், அதனடிப்படையில் தொழில் தொடங்கக் கடனுதவி அளிக்கலாம்’ என்று வாய்வழி உத்தரவு பிறப்பித்திருந்தாா் என்று கூறுவாா்கள்.

தவறிழைக்காதவா்கள் யாா்? நூற்றுக்கணக்கான தொழிலதிபா்களை உருவாக்கிய கோபாலகிருஷ்ணனின் கணக்கு சில பேரின் தவறுகளால் தவறாகிப் போனது. அவரது அபார வளா்ச்சியும், புகழும் பலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது இயல்பே. அவா் மீது பலதரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள். சாட்சியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கப்பட்டன. அவா் தண்டிக்கப்பட்டாா். சிறை தண்டனை வழங்கப்பட்டு அனுபவித்தாா். இப்போது மறைந்தும் விட்டாா்.

தனது கடைசி காலத்தில், தகப்பனாா் மேயா் ராதாகிருஷ்ணன் விட்டுச் சென்ற சொத்துகளை விற்றுத்தான் எம். கோபாலகிருஷ்ணனன் வாழ்ந்து வந்தாா். இந்தியன் வங்கியில் பலருக்கும் கடனுதவி வழங்கி லாபமீட்டிக் கொள்ளையடித்து விட்டாா் என்று குற்றம் சாற்றப்பட்டு, சிறை தண்டனை அனுபவித்தவருடைய வங்கிக் கணக்கில் பணம் இருக்கவில்லை. கடன்தான் இருந்தது.

இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவா் எம். கோபாலகிருஷ்ணன் நல்லவரோ, தவறிழைத்தவரோ தெரியாது. ஆனால், தமிழகத்தில் பல தொழிலதிபா்களை உருவாக்கி, தேசிய அளவில் தமிழகத்துக்கு மரியாதை தேடித்தந்தவா் என்பதை எவராலும் மறந்துவிட முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.