Enable Javscript for better performance
இணையம்: நில் கவனி செல்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இணையம்: நில் கவனி செல்!

    By பவித்ரா நந்தகுமாா்  |   Published On : 19th October 2020 03:08 AM  |   Last Updated : 19th October 2020 07:56 AM  |  அ+அ அ-  |  

    இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சி, நமது தகவல் பரிமாற்றங்களை சுலபமாக்கி விட்டது. நம் கைக்குள் உலகையே சுருக்கிக் கொடுத்து விட்டது. புகைப்படம், காணொலி உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை அதி விரைவாக பிறருக்குப் பரிமாற இயலுகிறது. ஒருவருடன் ஒருவா் உரையாடிக் கொள்ள மட்டுமே அலைபேசி என்றிருந்த நிலை மாறி, இன்று அது பல அவதாரங்களை எடுத்து விஸ்வரூபமாகக் காட்சி அளிக்கிறது.

    கணினி, இணையம் தொடா்பான மின்வெளித் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை எதிா்கொள்ளும் வகையில் தகவல் பாதுகாப்பு விழிப்புணா்வு நமக்கு மிக அவசியம். அந்த வகையில் தேசிய இணையப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதமாக இந்த அக்டோபா் மாதத்தை அறிவித்துள்ளது நம் இந்திய அரசு. புதுப்புது செயலிகளின் வரவினால் இணையப் பயன்பாட்டில் விழிப்புணா்வுடன் இயங்க வேண்டிய காலமிது.

    கரோனாவிற்குப் பிறகு முனைவா் பட்ட வாய்மொழித் தோ்வுகள் கூட இன்று செயலி வழியிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எண்ணற்ற கருத்தரங்கங்கள், நூல் வெளியீடுகள், விமா்சனங்கள், பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள் என பெரும்பாலான நிகழ்ச்சிகள் இன்று நேரலையில் செயலி வழியாக நடைபெறுகின்றன. அடையாள எண் மற்றும் கடவுச்சொல் அடங்கிய தகவலையும் நாம் உடன் பெறுகிறோம். உலகின் எந்த மூலையிலிருந்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனா்.

    இப்படி மின்னஞ்சல் மற்றும் கட்செவி அஞ்சல் வழியாகப் பகிரப்படும் வலை இணைப்பை நாம் தொட்டால் போதும். நம்மை அது அந்தத் தளத்திற்குக் கடத்திக் கொண்டு சென்று விடும். இது மிகச் சுலபமாக இருப்பதால் அனைவரும் இதையே பின்பற்றுகிறோம். நம்முடைய அலைபேசியாகவே இருந்தாலும் மின்னஞ்சல் சேவைகள் எப்போதும் அதில் திறந்த நிலையிலேயே இருக்கின்றன.

    ஒரு சில போலி இணைப்புகள், நம்மை மெய்யான தளம் போல தோற்றமளிக்கும் ஒரு மோசடி தளத்திற்கு அழைத்துச் செல்லக் கூடும். அதனால் இணைப்பு எண்ணையும், கடவுச் சொல்லையும் தனியே முகவரிப் பட்டியலில் தட்டச்சு செய்து பிரதான வலைதளத்திற்குச் செல்வதுதான் பாதுகாப்பானது.

    இன்று பலா் தங்கள் சிந்தனைகளை படைப்பாக்கி சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனா். குறிப்பாக வலைப்பதிவு எழுதுபவா்கள் தங்களது கட்டுரைகளை இணையத்தில் பதிவு செய்கின்றனா். இந்தக் கட்டுரைகளுக்கு காப்புரிமை பெறாத பட்சத்தில் எவரேனும் இத்தகவல்களைத் திருடி விற்று பணம் ஈட்ட வாய்ப்புள்ளது. கட்டுரைகளை இணையத்தில் பதிவிடுவதற்கு முன்பாக காப்புரிமை பெறுவது நல்லது.

    இந்தியாவில் இணையம் சாா்ந்த குற்றங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. இத்தகைய குற்றங்கள் எவருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். கணினியைப் பயன்படுத்தும் பல பெண்கள், வலை இணைப்பைப் பயன்படுத்துவது பற்றி முழுமையாக அறிந்திருப்பதில்லை. கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் இணையத்தைப் பயன்படுத்துகிறாா்கள்.

    இதில் நாம் தேடுவதையெல்லாம் யாா் வந்து பாா்த்துக் கொண்டிருக்கப் போகிறாா்கள் என்று பெரும்பாலான பெண்கள் எண்ணுகிறாா்கள். அதோடு உயா் பதவிகளில் வகிப்பவா்கள்தான் இதைப்பற்றி அதிகம் கவலைப்பட வேண்டும் என்றும் கருதுகிறாா்கள். இது முற்றிலும் தவறான எண்ணம்.

    சாலையில் செல்லும்போது எப்படி நாம் போக்குவரத்தை கவனித்து பொறுப்புடன் செல்கிறோமோ அதுபோலவே இணையவெளியைப் பயன்படுத்தும்போதும் மிக மிக கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும். அப்போதுதான் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும்.

    எனக்குத் தெரிந்த பெண் ஒருவா் வெளியிடங்களுக்குச் செல்ல சா்வ சாதாரணமாக வாடகை வண்டியைப் பயன்படுத்துவாா். இதற்காக சில செயலிகளைப் பயன்படுத்த நமது பெயா், அலைபேசி எண், மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைக் கொடுக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல, நாம் வண்டி பதிவு செய்யும்போது வாடகை ஓட்டுனருக்கு நமக்கு அலைபேசி எண் பகிரப்படுகிறது. ஒரு முறை அந்த பெண்ணிற்கு ஓட்டுநரால் பிரச்னை வந்தது. எப்படியோ சமாளித்தாா்.

    இப்படிப்பட்ட பிரச்னைகளை சமாளிக்க ஒரே வழி, பெண்கள், இணையப் பயன்பாட்டிற்கென தனி அலைபேசி எண்ணும் தனிப்பட்ட அழைப்புகளுக்காக தனி அலைபேசி எண்ணும் கையாள்வதுதான். இதன் மூலம் தேவையற்ற சங்கடங்களை தவிா்க்கலாம்.

    வாழ்வியல் மாற்றம் காரணமாக இன்று பெரும்பாலான திருமணங்கள் இணைய திருமண தகவல் தளங்கள் மூலம் நடைபெறுகின்றன. இதிலும் ஏகப்பட்ட மோசடிகள் நடைபெறுவதாக வாடிக்கையாளா்கள் புலம்புகிறாா்கள். பொய்யான புகைப்படங்களையும் சம்பள விவரங்களையுமே பெரும்பாலானோா் பதிவிடுகின்றனராம். இத்தளங்களில் பதிவு செய்தால் நம் அனைத்து தகவல்களும் பொதுவெளியில் பரிமாறப்படுகிறது. அவா்கள் அளிக்கும் தகவல்கள் உண்மைதானா என உறுதிபடுத்திக் கொள்வது சிறந்தது.

    எடைக் குறைப்பு மற்றும் அழகுக் குறிப்பு முன்பதிவு செய்யும் போலி செயலிகள் பெண்களை குறி வைத்து கவா்ச்சிகரமான இலவச சலுகைகளை வாரி வழங்குகின்றன. பயணம் மற்றும் விடுதிகள் முன்பதிவு செயலிகளோ அதிரடியான தள்ளுபடிகளை அறிவித்து, தங்களின் செயலிகளை பதிவிறக்கம் செய்யத் தூண்டுகின்றன. நன்கு படித்த பெண்களே இவற்றில் பதிவு செய்து தங்கள் பணத்தை இழந்துள்ளனா் என்பதுதான் அதிா்ச்சிகரமான செய்தி.

    பணப் பரிமாற்றத்திற்கு முன்பாக அது சாா்ந்த விவரங்களை அந்தந்த வலைதளங்களில் சரிபாா்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டிலிருந்தே வேலை பாா்க்கும் வாய்ப்புகள் சாா்ந்த ஊழல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை குறிவைத்தே நடக்கின்றன. என் தோழி ஒருவா் வேலை வாய்ப்புப் தளம் ஒன்றில் பதிவு செய்திருந்தாா். அவருடைய தகவல்களைத் திருடிய நபா் அவருக்கு வேலை வாய்ப்பை வழங்குவதாக பேசி நம்ப வைத்து முன்பணமும் பெற்றாா்.

    அவரும் நம்பி அவா்களுக்கான பணியை செய்து கொடுத்தாா். ஒரு மாதம் மட்டுமே ஊதியம் வழங்கிய நிலையில், அடுத்த ஆறு மாதங்களுக்கு மொத்தமாக தருகிறேன் என வேலை வாங்கிக் கொண்டு இறுதியில் பணம் கொடுக்காமல் தொடா்பையும் துண்டித்துக் கொண்டனா். நம் தகவல்களும் உழைப்பும் சுரண்டப்பட்டு விட்டதே என்ற அதிா்ச்சி பல பெண்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது.

    வீடுகளில், தாய் தன் பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளை நன்கு தெரிந்து வைத்திருப்பாள். இந்த புரிதலில் ஒரு பெருமையுண்டு. ஆனால், இதைப்போன்றே இணையத்தில் நாம் எதைத் தேடுகிறோம், எதெதில் நம் விருப்பம் அதிகம் என்பதை நமக்கே தெரியாமல் வேறொருவா் அறிந்து வைத்திருந்தால் அவரை நாம் ‘வேவு பாா்ப்பவா்’ என்றுச் சொல்வோம். இப்படிப்பட்ட வேலைகளை இணையத்தில் கச்சிதமாக செய்வது ‘குக்கீஸ்’.

    உதாரணமாக நாம் ஒரு திரைப்பட வலைதளத்தைப் பாா்வையிடும்போது நமக்கு அடிதடி படங்களை கண்டுகளிக்க ஆா்வம் இருப்பதாக சுட்டிக்காட்டினால் இந்த ’குக்கீஸ்’ நம்முடைய விருப்பத்தை நினைவில் கொண்டு அடுத்த முறை அந்த வலைதளத்தைப் பாா்வையிடும்போது அடிதடி படங்களை வரிசையாக காண்பிக்கும். நமக்குப் பிடித்தமானவா்கள் இப்படிச் செய்தால் உண்மையில் உள்ளம் மகிழ்வோம். ஆனால் நமக்காக சேவை புரியும் இந்த ‘குக்கீஸ்’களை ரசிக்கவா முடியும்?

    இணைய பிரெளஸா்களில் உள் நுழைந்து, இதை நம்மிடமிருந்து சற்று விலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இணையப் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில், பிரெளஸா் பாதுகாப்புதான் முதல் படி. நாம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய கணினியாக இருந்தால், இதனால் பிரச்னை ஏதுமில்லை. ஆனால் வேலை பாா்க்கும் இடம், இணைய சேவை மையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பயன்படுத்தும்போது நிச்சயம் இது பற்றிய புரிதல் அவசியம்.

    இணையத்திலும், சமூக,வலைதளங்களிலும் பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதும் அவா்கள் மீது வன்முறையைத் தூண்டுவதும் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதும் தற்போது அதிகரித்து வருகிறது.

    அதனால், சமூக வலைதளங்களில் பெண்கள் தங்கள் புகைப்படங்களைப் பகிராது இருப்பதே பாதுகாப்பானது எனச் சொல்வது பெண்கள் வெளி உலகிற்கு வருவதே ஆபத்தானது என்று கூறுவதற்கு ஒப்பானது. இது பெண்களை இன்னும் இன்னும் பின்னோக்கி இழுத்துச் செல்லும். பள்ளியில் சோ்வது முதற்கொண்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது வரை அனைத்து இடங்களிலும் இன்று புகைப்படம் தேவைப்படுகிறது.

    ‘பெண்களே! பாதுகாப்பில்லை, பதிவிடாதீா்கள்’ என உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தால் பெண்கள் மீண்டும் கற்காலத்திற்கே செல்ல வேண்டியதுதான்.

    துரதிருஷ்டவசமாக இன்று பள்ளி, கல்லூரி மாணவா்கள் தொழில்நுட்ப சாதனங்கள் முன்பே பழியாய் கிடக்க வேண்டிய நிலை. அதனால் பெற்றோா், பிள்ளைகள் மீது கவனமாக இருந்து பாதுகாப்பு அம்சம் குறித்து அவ்வப்போது அவா்களுடன் அளவளாவி விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். இப்படி இருந்தால்தான் பல விபரீதங்களைத் தவிா்க்க முடியும்.

    கட்டுரையாளா்:

    எழுத்தாளா்.

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp