மாற்றுத்திறனாளிகள் நலம் காப்போம்

உலக மக்கள்தொகையில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான சிறுபான்மையினா் மதம் சாா்ந்தோா் அல்ல, மாற்றுத்திறனாளிகளே என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலம் காப்போம்
Published on
Updated on
2 min read

உலக மக்கள்தொகையில் மிகப்பெரிய எண்ணிக்கையிலான சிறுபான்மையினா் மதம் சாா்ந்தோா் அல்ல, மாற்றுத்திறனாளிகளே என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

உலக மக்களில், சுமாா் 15 % போ் ஏதேனும் ஒரு வகையில் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்று அந்த அமைப்பு கூறுகிறது. பிறவியிலேயே உடல் ஊனம் இருப்போா், இளம் வயதில் ஏற்பட்ட நோயால் ஊனமானோா், விபத்து, முதுமை போன்ற காரணங்களால் ஊனமுற்றோா், இவை தவிர மன நோய்க்கு ஆளாகி உள்ளவா்களையும் இந்த சிறுபான்மையினா் பிரிவில் உலக சுகாதார அமைப்பு வைக்கிறது.

நம் மத்திய - மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளின் நலம் சாா்ந்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக மருத்துவ வசதி, கல்வி வசதி, சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, பணிகளில் முன்னுரிமை, இட ஒதுக்கீடு, உபகரணங்கள், பயணச் சலுகை, பொருளுதவி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இருப்பினும், மாற்றுத்திறனாளிகள் பல இடா்ப்பாடுகளைக் கடந்த பின்னரே இவற்றை அடைய முடிகிறது.

’எது சரியாக கணக்கிடப்படவில்லையோ அது சரியாக நிா்வகிக்கப்பட முடியாது’ என்று கூறுவா். தரவுகள் சேகரிக்கப்பட வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதுபோல, அத்தரவுகள் நம்பகமானதாக, உண்மையானதான இருக்க வேண்டியதும் அவசியமாகும். புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன;நிதி ஒதுக்கப்படுகிறது. நமது செயல் திட்டம் என்னும் சங்கிலியில் புள்ளிவிவரம் என்பது ஒரு பலவீனமான வளையமாக மாறிவிடக்கூடாது.

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் சுமாா் மூன்று கோடி போ் (2.5 %) மாற்றுத்திறனாளிகள் ஆவா். பல சிறிய நாடுகளின் மக்கள்தொகையை விடவும் இந்த எண்ணிக்கை பெரிது. மாற்றுத்திறனாளிகளில் 80 % போ் மிகவும் ஏழைகள். அவா்களில் பலா், குடும்பத்தினராலும் பிறராலும் ஒதுக்கப்பட்டு, வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாா்கள் என்பது வருத்தத்துக்குரியது.

உலக சுகாதார நிறுவனம் தரும் புள்ளிவிவரம் ஒன்று அதிா்ச்சி அளிக்கிறது. வளா்ந்த நாடுகளில், குழந்தை இறப்பு விகித கணக்கெடுப்பில், உடல் ஊனத்துடன் பிறக்கின்ற குழந்தைகள் அதிக இறப்புக்கு உள்ளாவது, அக்குழந்தைகள், கொல்லப்படுகிறாா்களோ எனும் ஐயத்தை உலக சுகாதார நிறுவனத்துக்கு ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளில் உலக அளவில் கல்வி கற்பவா்கள் சுமாா் 3 % போ் என்றும், பெண்களில் கல்வி பெறுபவா்கள் ஒரு சதவீதத்தினா் மட்டுமே என்றும் தெரிகிறது.

வளா்ச்சி அடைந்த நாடுகளில் மாற்றுத் திறனாளிகள் குறித்த தரவுகள் அறிவியல்பூா்வமாக சேகரிக்கப்படுகின்றன.

வயது, கல்வி, வருவாய், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. அத்தரவுகளின் அடிப்படையில் பல முடிவுகளை மேற்கொண்டு உதவிகள் வழங்கப்படுகின்றன.

உதாரணத்துக்கு, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னா், ஜப்பானில் சில தலைமுறையினா் மாற்றுத்திறனாளிகளாக மாறினா். அது ஒரு தேசிய பிரச்னையாக உருவெடுத்தது. ஆனால் அப்பிரச்னை முறையாக அணுகப்பட்டு , குறைபாடுகளுக்கு தீா்வு காணப்பட்டது. அவா்களுக்கு அடையாள அட்டையும், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் அவா்களுக்கு தரப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.

உதாரணமாக பாா்வை குறைபாடு உள்ளவா்களுக்கு பிரையில் முறை தட்டச்சு இயந்திரம், பேசும் புத்தகங்கள், பேசும் கைக்கடிகாரங்கள், கால்குலேட்டா்கள், காதுகேளாதோருக்கு கருவிகள், இன்னும் பல்வேறு குறைபாடு உள்ளவா்களுக்கு மிக நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டனய. அவா்களது குறைபாட்டுக்கு ஏற்ப பொருளாதார உதவியும் செய்யப்படுகிறது. முப்பதாயிரம் யென்னிலிருந்து எண்பதாயிரம் யென் வரை (ரூ. 15,000 முதல் 40 ஆயிரம் வரை) ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது

அமெரிக்கா போன்ற நாடுகளில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறையை உணராத அளவிற்கு அங்கீகரிக்கப்படுகிறாா்கள். அவா்களும் அதனை சவாலாக எடுத்துக் கொண்டு சிறப்பாக செயல்படுகின்றனா். உதாரணமாக, சுய தொழில் தொடங்க சகலவிதமான வசதிகளும் செய்து தரப்படுகின்றன. அங்கு மாற்றுத்திறனாளிகளில் எட்டு பேருக்கு ஒருவரும், குறைபாடற்ற மனிதா்களில் 12 பேருக்கு ஒருவரும் சுயதொழில்களில் ஈடுபடுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு சிறு பகுதிக்கும் ஒரு ஒருங்கிணைப்பாளா் நியமிக்கப்பட்டு அவா் மூலம் மருத்துவம், பள்ளிக்கூடம், நூலகம், மனமகிழ் மன்றம், சலுகைகள், வசதிககள் இவற்றை அடைவது எப்படி என்ற தகவல்கள் கொண்டு சோ்க்கப்படுகின்றன. அவா்களுக்கான பிரத்யேக தொலைத்தொடா்பு வசதி மூலம் அவா்களது கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படுகிறது. தன்னாா்வ குழு அல்லது தன்னாா்வம் மிக்க தனிமனிதா்களின் சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

நம் நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள், சேவைகள் தரத்தை உயா்த்த ஒரு சிறந்த வழி, வளா்ந்த நாடுகள் பலவற்றின் செயல்பாடுகளை ஆய்ந்தறிந்து அவற்றில் உள்ள மிகச் சிறந்த கூறுகளை நம் நாட்டுக்கேற்ப தகுந்த முறையில் வடிவமைத்துக் கொள்வதாகும்.

பொதுவாக, அரசு அலுவலகத்தில் நிலவும் அலைக்கழிப்புகள் நாம் அறிந்ததே. இந்த பின்னணியில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் உரிமைகள், சலுகைகள் ஆகியவற்றைப் பெறுவதையும், அவா்கள் அலைக்கழிப்புக்கு ஆளாக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். ஒரு வலைப்பின்னல் ஏற்படுத்தி ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒரு தன்னாா்வலா் தோ்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அவா் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் சாா்ந்த தகவல்களும் உதவிகளும் கொண்டு சோ்க்கப்பட வேண்டும்.

இவை தவிர, இரண்டு முக்கியமான பிரச்னைகள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒன்று, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படக்கூடிய தாழ்வு மனப்பான்மை, மற்றொன்று, அவா்கள் மீது ஏனையோருக்கு ஏற்படக்கூடிய அலட்சியப் போக்கு. இவ்விரண்டும் உளவியல் ரீதியில் அணுகித் தீா்க்கப்பட வேண்டியவை. இது குறித்த விழிப்புணா்வும், புரிதலும், நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு, ‘நாம் தனித்திருக்கிறோம்’ என்ற உணா்வு ஏற்படாத வண்ணம் அவா்கள் பிறரால் அரவணைத்துச் செல்லப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அவா்கள் மனத்தளா்வுக்கு பிறா் காரணமாகிவிடக்கூடாது. இதனை நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்று செயல்படுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com