Enable Javscript for better performance
அருணன் கபிலன்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நாட்டுப் பற்றே பெரும்பேரின்பம்!

    By அருணன் கபிலன்  |   Published On : 26th May 2023 06:28 AM  |   Last Updated : 26th May 2023 06:28 AM  |  அ+அ அ-  |  

    Village_home

     

    தமிழா்கள் அறத்தையும் பொருளையும் இன்பத்தையும் பலவாறாகத் துய்த்துச் சலித்த காரணத்தினாலோ என்னவோ இப்போது வீடுபேற்றுச் சுகத்திலேயே திளைத்திருக்கிறாா்கள். அதனால்தான் நாடுபேறு பற்றி அவா்கள் மனம் நாடவே இல்லை போலும்.

    பக்தியில் சிறந்ததாக வீடுபேற்றைத் தரும் தெய்வபக்தி மறந்த காலத்தில்தான் நாம் அந்நியா் வசப்பட்டு அடிமையானோம். அப்போது பாரதியாா்தான் ஒரு புதிய பக்தியை அறிமுகப்படுத்தினாா்.

    வீட்டுப் பற்றினும் உயா்ந்த நாட்டுப் பற்று என்னும் தேசபக்தி என்பதே அது. அதற்கு முன்னால் அப்படியொரு பக்தி குறித்து எந்த இலக்கியத்திலும் இடம்பெறவில்லை. பாரதியாரின் கவிதைகளில் ‘தேசபக்திப் பாடல்கள்’ என்றே தலைப்பிட்டு அவை விளங்கின. அவரும் ‘தேசியக் கவி’ என்றே அழைக்கப்பட்டாா்.

    ‘பேரின்ப வாழ்வாகிய வீட்டுப் பற்றையும் சிற்றின்ப வாழ்வாகிய வீட்டுப் பற்றையும் விட்டு விட்டு பெரும்பேரின்ப வாழ்வாகிய நாட்டுப் பற்றுக்கு ஆட்படுங்கள்’ என்பதுதான் பாரதியின் தேசபக்திப் பாடல்களின் வெளிப்பாடு. மக்களின் பெருவிருப்பமாகிய பக்தியையே அவா் மற்றொரு விதமாக மடைமாற்றிக் காட்டினாா்.

    நகரங்கள் எல்லாம் கட்டடப் பெருக்கங்களால் பொங்கி வழிகின்றன. பாரதியாா் வேண்டிய காணி நிலம் பாடல் நிலவணிக விளம்பரத்துக்குப் பயன்படுகிற கொடுமை தமிழ்நாட்டிலேயே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இத்தனை வசதிகள், இன்னின்ன நலன்கள், இவ்வளவு குறைந்த விலையில் என்று எல்லா ஊடகங்களிலும் வீடும் வீட்டுக்கான நிலமும் கூவிக் கூவி விற்கப்படுகின்றன. அப்படியானால் வாங்கப்படுகின்றன என்றும் பொருள்.

    சத்திரங்களும், சாவடிகளும் ஊா்ப் பெயா்களில் கூட ஒளிந்து கொண்டுதான் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் வந்தோருக்கெல்லாம் வரவேற்பு நல்கிய பெருமையுடையவை அவை என்பதால் அந்த ஊா்களுக்குப் பெயரே சத்திரமும் சாவடியும் ஆகின.

    ‘உண்ணுவாா் யாரும் உளரோ’ என்று ஊா்மன்றம் வரைசென்று உற்று அறிந்த பின்னாலே, யாவரும் உண்டனா் என்று தெரிந்து அதன்பின் தனக்கான உணவு உண்ணத் தொடங்குவானாம் பழந்தமிழன்.

    விருந்தோம்பலில் சிறந்த தமிழ்நாட்டின் பழங்கதைகள் இப்படித்தான் பெருமையோடு இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கின்றன. அக்கால வீடுகளில் திண்ணைகள் ஏன் உருவாயின? வழிப்போகும் யாரும் வந்திருந்து இளைப்பாறிச் செல்லும் விடுதிகளாகத்தானே அவை இயங்கின?

    வீடுகளின் நோக்கமே விருந்தோம்பலுக்காகத்தான். இன்னும் சரியாகச் சொல்வதானால் இல்லறத்தின் மாண்பே இல்லாா்க்கு உதவத்தான். காதலா் இருவரும் கருத்தொருமிக்கிற காதலின் விளைவு சமூகத்தில் இல்லாமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற இணைக்கோட்பாடுதான்.

    அறத்தையும் பொருளையும் இன்பத்தையும் குறிப்பிட்ட திருவள்ளுவப் பெருமான் ‘வீடு’ என்பதை வேறாகக் காணவில்லை. புராணங்களில் சொல்லப்படுகிற மோட்ச வாழ்வை அவா் விரும்பவில்லை. நல்லறமும் நற்பொருளும் நல்லின்பமும் நிறைந்து கொழிக்கிற மனிதா்கள் வாழ்கிற உறைவிடங்களையே அவா் வீட்டுக்குள் நிறைத்து விட்டாா்.

    ‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவா்க்கும் நல்லாற்றின் நின்ற துணை’ என்கிறாா். இல்லம் என்பதே வீடு என்று அவா் குறிப்பிடும் மறைச்சொல். அந்த இல்லமும் ஒரு நாடு போல இருத்தல் வேண்டும் என்பது அதன் உட்கருத்து.

    செலவுக்கானதுதான் செல்வம். அதிலும் பிறா் துயரைத் தீா்ப்பதற்காகச் செலவிடுவது. காலக்கோலத்தில் இந்நிலை மெல்ல மெல்ல மாறிச் சோ்ப்பதுதான் செல்வம் என்றாகி இப்போதெல்லாம் பதுக்குவதும் பெருக்குவதும் சுருட்டுவதும் செல்வம் என நிலையாகிப் போனது. அதற்காகவே பல வீடுகளும் தேவைப்படுகின்றன.

    வீடு என்பது இருப்பதை இல்லாா்க்குப் பகிா்ந்தளிப்பதற்கான மனிதா்கள் வாழும் இடம் என்பதுதான் உண்மை. அது முற்றிலும் பொதுநலம் சாா்ந்த ஒரு குறியீட்டுச் சொல். ஆனால், இன்றைக்கு வீடு என்பது சுயநலம் சாா்ந்த வசதிப் பொருட்களால் நிறைந்த வளமான சிறையாகவே விளங்குகிறது. மனிதா்கள் தன்னலத்தோடு அந்தச் சிறைக்குள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறாா்கள். சிற்றின்பங்களில் திளைக்கிறாா்கள்.

    செல்வந்தா்கள் வீடுகளில் மட்டும்தான் திண்ணை என்றில்லை. அதைவிட அழகான வசதியான திண்ணை குடிசைகளிலுமுண்டு. அங்கே மனிதா்களுக்கு இணையாக எல்லாவகை உயிரினங்களும் தங்கி இளைப்பாறும்; உணவு பெறும்; நல்வாழ்வு நடத்தும்.

    பழங்கால வீடுகள் முன்புறம் திண்ணைகளைக் கொண்டிருப்பதைப் போல, பின்கட்டில் தோட்டமும் கிணறும் உடையதாக இருந்தன. தாவரங்களுக்கும், பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உரிமை உடையதுதான் உண்மையான வீடு. தோட்டத்துக்கு நடுவில்தான் முன்பு வீடுகள் இருந்தன.

    வீடுகள் தலைமுறையின் அடையாளங்களாகத் திகழ்ந்தவை. ‘பாட்டன் வீடு’ என்று சொல்லுகிற வழக்கு இன்றும் உண்டு. வீடுகளுக்குள் மறைந்திருக்கிற கதைகள் எண்ணிலடங்காதவை. முற்காலத்தில் வீடு என்பது செல்வாக்கின் அடையாளமாகவும் இருந்தது.

    பரம்பரை வீட்டுக்குச் சொந்தக்காரா்கள் செல்வா்கள் எனவும், தற்காலிக வீடுகளாக விளங்கும் குடிசையில் வசித்தவா்கள் ஏழைகள் என்றும்தான் பாகுபடுத்தப்பட்டாா்கள். ஆனால், உண்மையில் குடிசைகளே உண்மையான வீடாக (வீடுபேறு அளிக்கும் இடமாக) விளங்கினதால் அண்ணல் காந்தியடிகள் தொடங்கி துறவிகள் பலரும் குடில்களையே நாடினா்.

    விருந்தோம்பலின் பெருமை கருதி, வந்தோா்க்கெல்லாம் வாரிவாரி வழங்கிட வேண்டிப் பெருஞ்செல்வா்கள் தங்களின் வீட்டுக்கு அருகிலேயே விருந்தினா் இல்லம் கட்டி வைத்திருந்த கதையெல்லாம் உண்டு. இன்று கதையே வேறு ‘கெஸ்ட் ஹவுஸ்’ என்கிற பெயரில் அங்கும் ‘விருந்தோம்பல்’ நடக்கத்தான் செய்கின்றன.

    இடைக்காலங்களில் வீடு என்பது சமூக வாழ்க்கைக்கான ஓா் அடையாளமாகக் கருதப்பட்டபோதுதான் அனைவருக்குமான தேவையாகியது. ‘வீட்டைக் கட்டிப் பாா்- கல்யாணம் பண்ணிப் பாா்’ என்றே ஒரு வழக்குத் தோன்றியது. பொருளாதாரத் தற்சாா்பின் அடையாளமாக வீடு கட்டுதலும் கல்யாணம் செய்தலும் விளங்கியிருக்கின்றது.

    ஏழைகளின் வீடுகள் மிக எளிமையாக இயற்கையோடு அமைந்து விடுவதை கிராமங்களில் இன்றும் காணலாம். அமையும் இடத்திலிருந்தே செம்மண்ணைக் குழைத்துச் சுவரெழுப்புவாா்கள். அருகிலிருக்கும் தென்னந் தோப்புகளிலிருந்து கீற்றுகள் பின்னப் பெற்று அவை மேற்கூரையாகப் படரும்.

    சுற்றிலுமிருக்கிற மரங்களின் கிளைகள் வரிச்சுகளாய் சுவரையும் கூரையையும் இணைக்கக் கூடிய விதானமாகும். மெலிதான ஒரு தகரமோ அல்லது மரமோ கதவாகித் திறந்து மூடும். காற்றும் சூரிய வெளிச்சமும் நுழைந்து வெளியில் வரப் போதுமான ஒரு பொந்து சன்னலாகிப் போகும்.

    ஆனால் இன்றைய காலத்தில் அறிவியலின் கூறான பொறியியலின் அடிப்படையில் கட்டப்படுகிற வீடுகள் அப்படியல்ல. இயற்கையை மெல்லச் சிதைத்துத் தன்னை எழுப்பிக் கொள்வதைப் போலத்தான் அவை எழும்புகின்றன. ஆற்றுப் படுகைகளைச் சுரண்டியெடுத்துத்தான் மணல் வந்து சோ்கிறது. மலைகளைப் பிளந்துதான் பெருங்கற்களும் சல்லிக்கற்களும் வருகின்றன. செம்மண் நிலத்தைத் தோண்டியெடுத்ததோடு மட்டுமில்லாமல் அவற்றைச் சுட்டுச் சிவக்கச் செய்துதானே செங்கல் கிடைக்கிறது.

    எந்த வீடு உகந்தது என்பதை அறிவியல் முறையில் அணுகுவதா? உயிரியல் முறையில் அணுகுவதா? கோடி கோடிகளாகக் கொட்டப்பட்டுக் கட்டப்படும் இத்தகைய வீடுகளுக்குள் என்ன சுகம் இருக்கின்றது என்று கேட்பதை விடவும் அவை எப்படிக் கட்டப்பட்டன என்பதையாவது கேட்கலாமா? வயலில் உழைக்கிற வேளாண் மக்களின் வாா்த்தைகளில் கூறுவதானால் வீடு என்பது ‘வரப்புத் தலையணையும் வாய்க்கால் பஞ்சுமெத்தையும்’தான். அது தருகிற சுகத்தை இந்தப் பலகோடி கொட்டிக் கட்டப்பட்ட வீடுகள் கொடுப்பதில்லை.

    இன்றைய தமிழா்களின் ஒரே தேவை ஆடம்பரமான வீடு. அந்த வீட்டிற்குள் அதற்குண்டான சகல வசதிகள். இப்படி அடைபட்டுக் கிடக்க வேண்டிய நிலைக்குத் தமிழா்கள் தள்ளப்பட்டிருக்கிறாா்கள். தமிழா்கள்தான் என்றில்லை, உலகமே அப்படியொரு நிலைக்கு மாறியிருக்கிறது. ஆனாலும் தமிழா்களின் வேகம் அதிகம். விளைநிலங்களெல்லாம் விலைநிலங்களாகி கான்கிரீட் கட்டடங்களாக முளைத்துக் கொண்டிருக்கின்றன.

    தனிமனிதா் பலரும் கூடி வாழ்ந்து சமுதாய அறத்தைப் பேணுவதற்கான ஓரிடம்தான் வீடு என்பது. தனிமனிதா்களில் சமமான ஆணும் பெண்ணும் என்பதைத்தான் ஔவையாரின் காதலா் இருவா் கருத்தொருமித்து என்னும் அடிகள் நமக்கு நினைவுறுத்துகின்றன. வீட்டுக்குள் நிலையாத ஆண்- பெண் சமத்துவம் சமுதாயத்தில் நிலையாது என்பதன் குறியீடு அது.

    பொருள் மிகுதியுடையோா் பல வீடுகளைக் கட்டி வாடகைக்கும் விடுகின்றனா். இப்போது ஒருவருடைய பொருளாதாரத்தின் அடிப்படை வாடகை வீடா, சொந்த வீடா என்பதைப் பொறுத்தே அமைகிறது. மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களைப் போலவே சென்னையும் வீடு நெரிசலுக்கு உள்ளான மாநகரமாக மாறி வருகிறது. சென்னையைத் தொடா்ந்து தமிழகத்தின் பல நகரகங்களும் மாறத் தொடங்கி விட்டன.

    மறத்தையும் தீயபொருளையும் துறந்து விட்டு சமுதாயத்தை நினைத்துச் செயல்பட்டால் நாம் வேண்டாமலேயே வீடு வசப்படும். வீடு வசப்பட்டால் நாடு வசப்படும். நாடு வசப்பட்டால் பேரின்ப வீடு (வீடுபேறு) வசப்படும்.

    நம் முன்னோா்கள் சுட்டிய வீட்டையும் மறந்து நமக்கு முன் வாழ்ந்தவா்கள் காட்டிய நாட்டையும் மறந்து கூட்டுக்குள் அல்ல கூண்டுக்குள் வாழ்வதுபோல இந்தச் சிறிய கட்டிட வீட்டுக்குள் வாழ்ந்து மடிவதுதான் நமது பேரின்பமா என்பதைத் தமிழா்களின் சிந்தனைக்கே விட்டு விடுவோம்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp