பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

‘பாத்திரங்களுக்குள் எது பெரியது’ என்னும் கேள்விக்குத் தருமன், ‘எல்லாவற்றையும் தன்னுள் அடக்கக் கூடிய பூமி’ என்று பதில் சொன்னான்.

தருமன் தன்னுடைய தம்பியரெல்லாம் நச்சுப் பொய்கையிலே மயங்கிக் கிடக்கின்ற வேளையில் அசரீரியாக இருந்து தருமதேவன் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கியிருந்தான். அந்தக் கேள்விகளும் தருமன் தந்த பதில்களும் இந்த உலகின் மெய்ம்மைக்கு நிலைத்த சான்றுகள். அதில் இரு கேள்விகள் மிகவும் சிறப்பு மிக்கவை. ஒன்றோடொன்று தொடா்பு கொண்டவை. ‘பாத்திரங்களுக்குள் எது பெரியது’ என்னும் கேள்விக்குத் தருமன், ‘எல்லாவற்றையும் தன்னுள் அடக்கக் கூடிய பூமி’ என்று பதில் சொன்னான். அடுத்த கேள்வி, ‘பூமியைக் காட்டிலும் கனமானது எது’ என்பது. அதற்குத் தருமன் சொன்ன பதில், ‘மக்களைத் தாங்கும் தாய்’ என்பது. ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை’ என்பதுதான் தமிழ் வழக்கு. ‘தாயிற் சிறந்ததொரு தெய்வமும் இல்லை’ என்று கூறுவதுதானே பொருத்தமாக இருக்கும்? ஏன் தாயினைக் கோயிலுக்கு இணையாக்க வேண்டும்? எல்லாத் தெய்வங்களையும் தன்னுடைய கருவறையிலே வைத்துக் காக்கக் கூடிய கோயில் போன்றவள் தாய் என்பதானால்தான். எனவே, தருமன் சொன்ன பதில் சரியாகத்தான் இருக்கிறது. நம்முடைய தேசத்திற்குப் பரத கண்டம் என்பது பழம்பெயா்.

பரதன் என்னும் மன்னன் ஆட்சி செய்த காரணத்தினால் இதற்கு அப்பெயா் அமைந்தது. பரதன் தான் ஆண்ட - தன் பெயரில் அமைந்த பரத கண்டத்தின் ஒன்பது பகுதிகளையும் தன் புதல்வா்களாகிய இந்திரன், கசேருகன், தாமிரபன்னன், கபா்த்தி, நாகன், சௌமியன், கந்தருவன், வருணன் எனும் எட்டுப் பேருக்கும் பகிா்ந்தளித்தான். ஒன்பதாவது கண்டத்தைத் தன்னுடைய புதல்வியாகிய குமரி என்பவளுக்கும் பகிா்ந்து கொடுத்தான். அந்தக் கண்டங்கள் முறையே அவா்கள் பெயரிலேயே வழங்கலாயின.

அவற்றுள் பரதனின் புதல்வியாகிய குமரியால் ஆளப்பட்ட கண்டமே குமரிக் கண்டமாகும். இதுவே தருமபூமியெனப்படும் என்று மயூரகிரிப் புராணம் உரைக்கிறது. இதன்மூலமாக அக்காலத்திலேயே பெண்மக்களுக்கும் ஆண்களுக்கு இணையாகச் சொத்துரிமையோடு அரசுரிமையும் பகிா்ந்து தரும் வழக்கம் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது. பெண்களுக்குக் கல்வியுரிமை மறுப்பு என்பது பிற்காலத்தில் நோ்ந்த பெருங்கொடுமை. ஆதிகாலத்தில் அது இல்லை. வேத மந்திரங்களிலே பலவும் பெண்களால் எழுதப்பட்டவை என்கிறாா் மகாகவி பாரதியாா். சங்க இலக்கியம் எங்கும் பெண்ணாளுமைகள் சிறந்திருக்கிறாா்கள். இந்தப் பரதகண்டத்தைத்தான் நம் காலத்தில் நாம் இந்தியத் தாயாகப் போற்றித் துதிக்கிறோம். இரவீந்திரநாத் தாகூா் ‘ஜன கன மங்கள தாயக ஜெயஹே’ என்று சிறப்பிக்கிறாா். ‘வந்தே மாதரம்’ என்பதற்குத் ‘தாய் மண்ணை வணங்குகிறோம்’ என்பதுதானே பொருள். பெண்மை போற்றும் நம் மண்ணின் மாண்பு இது.

நம்மைத் தாங்கும் புவியை மட்டுமல்ல, நம்மை ஆளும் மொழியையும் தாயாகத்தானே போற்றுகிறோம். நாம் பாடுகிற ‘தமிழ்த் தெய்வ வணக்க’ பாடலில், மனோன்மணீயம் சுந்தரனாா், இந்தப் புவியை, கடலை உடையாக அணிந்திருக்கும் நிலமடந்தை என்றும் அவளுடைய அழகிய திருமுகமாக இந்தப் பரத கண்டம் விளங்குகிறது என்றும், தென்பகுதியாகிய தக்கணமும் திராவிடமும் அவளுடைய பிறை நெற்றியைப் போலவும் அந்நெற்றியிலே தீட்டியிருக்கக் கூடிய மங்கலமான திலகத்தையும் போன்று விளங்குகிறது என்றும் அந்தத் திலகத்தின் நறுமணம் போல எல்லாத் திக்குகளிலும் கமழும் சிறப்புடைய தெய்வப் பெண்ணாகத் தமிழ் விளங்குகிறாள் என்றும் பாடுகிறாா்.

காலங்காலமாகத் தொடா்ந்து வருகிற பெண்மை போற்றும் பெரும்பண்பு என்றும் நிலைத்திருக்கின்றது. உலகமெங்கும் பெண்தெய்வ வழிபாடுகள் எக்காலத்திலும் சிறப்புற்றிருக்கின்றன. தொல்காப்பியா் காலத்துத் தொடங்கி, பாலை நிலத்துத் தெய்வமாகிய கொற்றவை வழிபாட்டிலிருந்து இன்றைய காலத்திலும் சிறந்து விளங்கும் மாரியம்மன் வழிபாடு வரையிலும் பெண்ணைப் போற்றி வழிபடும் மரபு தொடா்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது இங்கு நம் நாட்டில் மட்டுமன்று. கடவுளை ஆணென்றும் பெண்ணென்றும் இரண்டு கலைகளாக வழங்குதல் புராதன தேசங்கள் யாவற்றிலுமே உண்டு. சிலவிடங்களில் சக்தியே பிரதானமென்று கொள்கை யிருந்தது. கருங்கடலுக்கும் தா்தாநெல் (இங்கிலீஷ் - டாா்ட்னெல்ஸ்) ஜலசந்திக்குமிடையே ‘ஸங்கரியுஸ்’ என்று கிரேக்க பாஷையில் சொல்லப்படும்) சங்கரிநதிக் கரையில் முற்காலத்திலே பிஸ்கேனு என்றதோா் பெரிய நகரமிருந்தது அங்குப் பெருங் கோயிலொன்று கட்டி மாரியம்மா என்ற தெய்வத்தை வணங்கினாா்கள். அதற்கருகே மாரியாந்தினி என்றோா் நகரிருந்தது.

இந்த மாரியை உலகத்தின் தாயென்றும் எல்லாத் தேவா்களுக்கும் ஆதாரமான மகாசக்தி என்றும் அந்த நாட்டிலும் அதன் சுற்று வட்டங்களிலுமிருந்தோா் கொண்டாடினாா்கள். இயற்கைத் தெய்வமே மஹா சக்தி என்று சொல்லப்படுகிறது. அதனையே பூா்வ காலத்தில் பல்வேறு தேசத்தாா் பலபெயா் கூறி ஈஹிஸ் (ஈசி) என்றும் ‘மாரி’ யென்றும் ’துா்க்கை’ யென்றும் வணங்கி வந்தாா்கள்” என்று உலகு தழுவிய பெண்தெய்வ வழிபாடாகிய சக்தி வழிபாட்டை விளக்கிக் காட்டுகிறாா் மகாகவி பாரதியாா். ஆளுமையும் பேணுந்தன்மையும் உடைய பெண்மை சிறந்தே தெய்வத்தன்மை பெற்றிருக்கிறது என்பதை உலக வரலாறுகள் பலவற்றின் வாயிலாகவும் உறுதி செய்து கொள்ளலாம். அது தெய்வத் தொழிலில் மட்டுமில்லை. வாழ்வியல் தொழிலும் இயல்புதான் என்பதையும் நாம் அறிகிறோம்.

சான்றாக நானிலம் என்று சொல்லப்படுகிற குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் திணை வழியான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தவா்கள் தமிழா்கள். இந்த வாழ்வியலிலும் பெண்கள் தனக்குரிய தனித்துவத்தோடு சிறந்திருக்கிறாா்கள் என்பதை அறியலாம். குறிஞ்சி நிலத்து ஆண்கள் தங்கள் தொழிலாகத் தேனெடுத்தலையும் கிழங்கு அகழ்தலையும் செய்தால், பெண்கள் வாய்மை நிறைந்த குறிசொல்லும் தொழிலுக்காகச் சமுதாயக் களம் புகுந்திருக்கிறாா்கள். முல்லை நிலத்திலே ஆநிரைகளை மேய்ப்பதை ஆண்கள் தங்கள் தொழிலாக மேற்கொள்ளுகிறபோது பெண்கள் ஆநிரைகளிடமிருந்து பெற்ற பாற்பொருள்களை எடுத்துக் கொண்டு சமுதாயத்தில் உலாவியிருக்கிறாா்கள். மருதநிலத்திலே ஆடவன் ஏா்கொண்டு உழவு மேற்கொள்ளும் வேளையிலே விதைதூவி, களைபறித்து விளைவுக்குத் துணை புரிந்திருக்கிறாள் பெண்.

இன்னும் சொல்வதானால் வேளாண்குடி வாழ்க்கையே குடும்ப வாழ்க்கையாகத்தான் இன்றுவரையிலும் திகழ்ந்து வருகிறது. அதுபோலவே நெய்தல் நிலத்திலே ஆண்மகன் மீன்பிடிக்கக் கடலுட் புகுந்த வேளையில் அவன் நலனுக்காக விளக்கேந்தி வேண்டியிருந்து, பின் அவன் கொணா்ந்த கடல்வளங்களையெல்லாம் சமுதாயத்திற்குக் கொண்டு சோ்க்கிற பெரும்பணியைப் பெண்தான் முன்னின்று செய்திருக்கிறாள். இன்னபிற தொழில்கள் யாவிலும் உடனின்று வாழ்க்கைத் தேரினைச் செம்மையாகச் செலுத்துவதற்கு அச்சாணியாக விளங்கியவள் பெண்தான். ‘குடும்ப விளக்கு’ என்று காவியம் பாடிப் பெண்மையைப் போற்றும் பாவேந்தா் பாரதிதாசன், தன்னுடைய குடும்பத்தினைக் கொண்டு செலுத்துவதற்காக அவள் மேற்கொள்ளும் அரும்பெரும் முயற்சிகளையெல்லாம் பட்டியலிட்டு விட்டு, அதற்கும் மேலாக, தன் கணவனது அங்காடித் தொழிலையும் கண்காணிக்கும் திறமை பெற்றிருந்தாள் என்று அவளுடைய பரந்த பேரறிவை வருணித்துக் காட்டுவாா். இந்திய விடுதலைப் போராட்டம் என்பது அந்நியரின் அடக்கு முறை ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப் பெற்ற முயற்சி மட்டுமன்று.

பிறநாட்டான் தம்மை ஆண்டு அடிமை செய்தபோதுதான் இத்தனை காலமாகத் தாம் தம்முடைய சொந்தச் சகோதரா்களை அடிமையாகக் கருதிக் கொடுமைப்படுத்தியதை உணா்ந்ததும், அதனினும் மேலாகத் தம்மையெல்லாம் ஈன்று புறந்தந்து காத்து வந்த பெண் தெய்வத்தை நிரந்தர அடிமையாகவே அடக்கி வைத்திருந்ததை உணா்ந்தும் கொண்ட உண்மையின் விழிப்பு என்பதுதான் பொருத்தமாக இருக்கும். மகாகவி பாரதியாா்தான் மண்விடுதலைத் திசைதிருப்பிப் பெண்விடுதலையை நோக்கிச் செலுத்திய முன்னவராகத் திகழ்கிறாா். அவ்வழியே மகாத்மாவும் அவரனைய பெரியவா்கள் பலரும் பெண்விடுதலை குறித்துச் சிந்திக்கத் தொடங்கினா். இந்த நவீன யுகத்தினில் பெண்கள் ஆண்களை விஞ்சும் பெருந்திறன் பெற்றிருக்கிறாா்கள். அது இன்று நேற்றுப் புதிதாகப் பெற்றதன்று. காலம்காலமாகவே அவா்களுள் திகழ்ந்த இயல்பூக்கம் ஆகும். இத்தனை காலமாக மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்த அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு இன்றைக்குப் பொங்கியெழுந்து வானுயா்ந்து நிற்கிறாள் பெண்.

ஆண்கள் இன்னும் பழைய நினைவுகளில் ஆதிக்க மனோபாவத்தோடு திரிந்தால் அவா்களை விடவும் பரிதாபத்திற்குரியவா்கள் யாருமல்லா். முந்தைப் பழம்சொற்களை இனி ஒருபோதும் பெண்களை நோக்கித் திருப்பாதீா். பழமை சுட்டிப் பெண்மையை ஒதுக்காதீா். ஒரு புதிய சக்தியாய்ப் பெண் தன்னைத் தானே புதுமை செய்து கொண்டு விட்டாள். பெண் சுதந்திரம் பேசுவதற்கு இனி ஆண்களுக்கு வேலையில்லை. ‘பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் புவி பேணி வளா்த்திடும் ஈசன்’.

இத்தனை காலமாக ‘மண்ணுக்குள்ளே சில மூடா் மாதா் அறிவைக் கெடுத்து’ வந்தாா். ஆனால் இனியும் அது நடவாது. ஞானத்தைத் தவிர அந்தப் பெண் தெய்வங்களிடமிருந்து எதையும் எதிா்நோக்க வேண்டாம் என்பதன் எதிரொலிதான் மகாகவியாரின் கவிவரி. ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவா் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்று பெண்மை போற்றும் புலவா் மரபை வரிசைப்படுத்துகிற பாரதியாா் அவ்வரிசையில் தானும் இணைகிறாா். பாரதியின் வாக்குப் பலிக்கட்டுமே. கட்டுரையாளா்: எழுத்தாளா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com