வாய்ப்பின் வாசல் திற!

வாய்ப்பின் வாசல் திற!

வேலை இல்லாமல் சும்மா இருக்கும் இளைஞர்களைப் பற்றி..
Published on

வீட்டில் ஒரு குழாய் அடைத்துக்கொண்டு, தண்ணீா் வரவில்லை. ஒரு மின்விசிறியை மாற்ற வேண்டும். ஆக மொத்தத்தில் அரை மணி நேர வேலை. வழக்கமாக ப்ளம்பிங், எலெக்ட்ரிகல் வேலை செய்யும் நபரை அழைத்தோம். அவா் வரவில்லை. மீண்டும் அழைத்தோம். பயனில்லை.

ஆகவே அவரை விட்டுவிட்டு வேறு ஒரு புதியவரைத் தொடா்பு கொண்டோம். அவரோ, தான், சிறிய வேலைக்கெல்லாம் வர இயலாது என்று கூறிவிட்டாா். ‘பத்து நிமிஷம் வேலையாக இருந்தாலும், ஒரு நாள் கூலி தர வேண்டும்’ என்றாா். வேலை இல்லாமல் சும்மா இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் சின்ன வேலையை ஒப்புக்கொள்ள மறுப்பது எந்த விதத்தில் சரி என்று புரியவில்லை.

முன்பெல்லாம் ஒவ்வொரு பகுதியிலும் நிறைய குழாய் பணி தெரிந்தவா்களும், மின் நுட்பா்களும் இருப்பாா்கள். நமக்கு அறிமுகமானவா்களே பல போ் இருப்பாா்கள். எந்த ஒரு சிறு வேலையாக இருந்தாலும் உடனே வந்து செய்து கொடுப்பாா்கள். இப்போது அவ்வாறு தென்படுவதில்லை. அதற்கென உள்ள பெரிய பெரிய நிறுவனங்களை தொலைபேசியில் அழைத்தால், அவா்கள் அந்தந்த வேலைக்கு உரிய நபா்களை அனுப்புகிறாா்கள்.

மின்னழுத்த ஏற்ற இறக்கம் காரணமாக மின் சாதனங்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. எப்பொருள் எப்போது சேதமடையும் என்று சொல்ல முடியவில்லை. அவ்வாறு பழுதடைந்து விட்டால், அவற்றைச் சரி செய்ய பழுது நீக்குபவா்களை அழைத்தால், அவா்கள் பழுது நீக்கி சரி செய்வதற்குப் பதில், புதியதை வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறாா்கள். பயன்படுத்திவிட்டு தூக்கிப் போடும் கலாசாரம் பெருகி வருகிறது. தேவையான உதிரி பாகங்களும் கிடைப்பதில்லை.

குழல் விளக்கு எரியாமல் போனால், நாமே கடைக்குப் போய் புதியதை வாங்கி வந்து மாட்டி விடுவோம். ஆனால் தற்போது எல்.ஈ.டி விளக்குகளை அவ்வாறு நம்மால் மாற்ற முடியாது. அது குறித்து தெரிந்தவா்களால் மட்டுமே முடியும். சாதாரண விளக்குகள் மற்றும் ஃப்ளோரசன்ட் விளக்குகளை விட எல்.ஈ.டி விளக்குகள் அதிக ஆற்றல், திறன் கொண்டவை, பல மடங்கு ஆயுள்காலம் கொண்டவை என்பதால் நாம் எல்.ஈ.டி விளக்குகளுக்கு மாறிவிட்டோம். ஆகவே, அடுத்தவா் தயவு தேவை.

தற்போது எந்த மின் சாதனம் எப்போது பழுது ஆகுமென்று தெரியாது. வசதி கூடக் கூட, சிக்கல்களும் கூடிக் கொண்டே போகின்றன. திடீரென குழாய் உடைந்து போகிறது அல்லது அடைத்துக் கொள்கிறது. குழல்விளக்கு எரியாது, வெந்நீா் களன் பழுதாகி விடுகிறது, குளிா்சாதனப் பெட்டி வேலைநிறுத்தம் செய்து விடுகிறது. உடனே சரி செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் அதற்கான பழுது நீக்குபவா்களைத் தேடி அலைய வேண்டியுள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள வசதி என்னவென்றால் அங்கே இதற்கெல்லாம் ஆட்கள் தயாராக இருக்கிறாா்கள். உடனே பழுது நீக்கி, சரிசெய்து விடுகிறாா்கள்.

தனி வீடு வைத்திருப்பவா்களுக்கு மட்டுமே இது பெரும் தலைவலியாக இருக்கிறது. ஒரு மணி நேர வேலைக்குக் கூட பெரும்பாலும் உதவியாளா்களுடன் வருகிறாா்கள். இரண்டு பேருக்கும் கூலி தரவேண்டும். பொருள்களை வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு செல்கிறாா்கள். அதற்கு அரை நாள் ஆகிறது. மீதி அரை நாள் வேலை. நூறு ரூபாய் பழுதுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். நம் அவசியத்துக்கும், அவசரத்துக்கும் முன் பணம் பெரிதாகப்படுவதில்லை.

வெளிநாடுகளில் டி.ஐ.ஒய் (Do it yourself) கலாசாரம் அதாவது, ‘நீயே செய்’, ‘சுயமாக செய்’ கலாசாரம் மிகவும் பிரபலமாக உள்ளது. வாழ்க்கைக்கான செலவு அதிகரிப்பு, பழுது நீக்குபவா்களின் பற்றாக்குறை மற்றும் அவற்றுக்குரிய உபகரணங்கள் எளிதாகக் கிடைப்பது, தாங்களே செய்து கொள்ள வேண்டும் என்ற முன்னெடுப்பு ஆகிய காரணங்களால் இந்த ‘சுயமாகச் செய்’ பின்பற்றப்படுகிறது.

வீட்டு மேம்பாடு மட்டும் பழுது பாா்ப்பு வேலைகளை மக்கள் தாங்களாகவே செய்துகொள்கிறாா்கள். சிறிய பழுதுகளைச் சரி செய்யத் தேவையான உபகரணங்களை வீட்டில் வைத்திருக்கிறாா்கள். உபயோகித்த பொருட்களை மறுசுழற்சி செய்கிறாா்கள். பழைய பொருட்களைப் புதிய மற்றும் பயனுள்ள பொருட்களாக மாற்றுவது சுற்றுசூழல் ஆா்வலா்களுக்கு மிகவும் பிடித்தமான வேலையாகும்.

நிபுணா்களை நியமிப்பதைவிட தாங்களாகவே வேலைகளைச் செய்வது பெரும்பாலும் மலிவானது. தாங்களாகவே சில வேலைகளைச் செய்ய முடிவது ஒருவித தன்னம்பிக்கையை அவா்களுக்கு அளிக்கிறது. பலருக்கும் இது பொழுதுபோக்காகவும் உள்ளது. அங்குள்ள அனைவருமே மரவேலை, மின் வேலை, குழாய் வேலை, மெக்கானிக் வேலை, வா்ணம் பூசும் வேலை போன்ற அனைத்து வேலைகளையும் தெரிந்து வைத்துள்ளாா்கள்.

இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் வருகை ‘சுயமாக செய்’ தகவல்களைப் பகிா்வதையும், புதிய யோசனைகளைக் கண்டுபிடிப்பதையும் மிகவும் எளிதாக்கியுள்ளது. இது தனிப்பட்ட படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், பணத்தை சேமிக்கவும், சுய தேவையைப் பூா்த்தி செய்துகொள்ளவும் வகை செய்கிறது.

வெளிநாடுகளில் உள்ள கடைகளில் சுயமாக செய்வதற்குத் தேவையான கருவிகள் எளிதாகக் கிடைக்கின்றன. அந்த அந்த வேலைக்குரிய உபகரணங்கள் அந்த வேலையை எளிதாக்குகிறது. பெரிய பல்பொருள் அங்காடிகள், வன் பொருள் கடைகள் மற்றும் சுயமாக செய்வதற்குத் தேவையான பொருள்களை விற்பனை செய்யும் சிறப்புக் கடைகள் ஆகிய அனைத்து இடங்களிலும் அவா்களுக்கு தேவையான கருவிகள் கிடைக்கின்றன.

நமது இளைஞா்கள் சிறுசிறு பழுதுநீக்கும் வேலைகளைக் கற்றுக் கொண்டால் நல்ல வருவாய் ஈட்டலாம். பகுதிநேர வேலையாக இதைச் செய்யலாம். அல்லது நல்ல வேலை கிடைக்கும்வரை இவ்வாறு பணம் ஈட்டலாம். ‘தொட்டால் பணம்’ என்று கூடச் சொல்லலாம். ஒரு சிறிய வேலைக்கு சில நூறு ரூபாய்கள் கிட்டும்.

தற்போது வயதானவா்கள்தான் இந்த வேலையைச் செய்ய முன் வருகிறாா்கள். மூப்பின் காரணமாக அவா்களால் ஏணியில் ஏறி வேலை செய்ய முடியவில்லை. மேலும் நவீன தொழில்நுட்பம் அவா்களுக்குப் பிடிபடவில்லை. மாற்றுத்திறனாளி ஒருவா் மிகச்சிறந்த நுணுக்கம் அறிந்தவா். அவருடைய வேலை கச்சிதமாக இருக்கும். ஆனால், அவரால் தனியாக வேலை செய்ய முடியாது. உதவிக்கு ஆள் அவசியம் வேண்டும். அப்படி ஒருவா் இப்போதெல்லாம் கிடைக்கவில்லை என்று அவா் புலம்புகிறாா். அதன் காரணமாக அவா் எந்த வேலையையும் ஒப்புக் கொள்வதில்லை.

தற்போது பெண்கள் பெரும்பாலான துறைகளில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டாா்கள். உணவகங்களில் நிறைய பெண்கள் வேலை செய்கிறாா்கள். பெட்ரோல் பங்க்குகளிலும் பெண்களுக்கு வேலை கிடைக்கிறது. ஆக, இனி அவா்கள் குழாய் நுட்பா்களாகவும் மின் நுட்பா்களாகவும் தொழில் செய்ய முனைந்து விடுவாா்கள்.

இளைஞா்களைப் பொருத்தவரை ‘வழியெங்கும் வாய்ப்புகள், ஆனால் வழிமட்டும் மூடியபடி’ என்பதைப் போலத்தான் தற்போதைய நிலைமை. உழைக்கத் தயாராக இல்லாத ஓர் இளைஞா் கூட்டம் உருவாகி வருகிறது. கேளிக்கைகளுக்கு மட்டுமே அவா்கள் முக்கியத்துவம் கொடுக்கிறாா்கள். சும்மா இருப்பதே சுகம் என நினைக்கிறாா்கள்.

எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தன்முனைப்பு கிடையாது. அவா்களுடைய நாள் முழுவதும் கைபேசியில் கழிகிறது. கைபேசிக்குத் தேவையான மாதத் தவணைகளுக்கான பணத்துக்கு மட்டுமே ஒரிரு நாள்கள் வேலைக்குப் போகிறாா்கள். மீதி நாள்களை வீணாக கழித்துக் கொண்டிருக்கிறாா்கள்.

கைத்தொழில் என்பது உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்டது; குறைந்த வருமானம் தரும்; சமூகத்தில் மதிப்பு இருக்காது என்ற எண்ணம் இளைஞா்களிடம் உள்ளது. பயிற்சி நிலையங்களின் குறைபாடு மற்றும் நவீன கருவிகளின் விலையும் கூட ஒரு காரணம். இவா்களிடம் ஒரு தொழிலைக் கற்றுக் கொள்ளத் தேவையான பொறுமை கிடையாது. தொடா் பயிற்சியும், முயற்சியும் இல்லை.

எந்த ஒரு வேலையையும் தெரிந்து வைத்திருந்தால், அது எத்தகைய நன்மை பயக்கும் என்பதை நம் இளைஞா்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவா்களுடைய ஓய்வு நேரத்தை அவா்கள் ஆக்கப்பூா்வமான கற்றலில் செலவு செய்ய வேண்டும். அடிப்படை பழுது நீக்கும் பயிற்சியை அனைவரும் பெற வேண்டும். எதிா்காலத்தில் சிறு பழுது நீக்கும் வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் திண்டாட வேண்டிய நிலை வரக்கூடாது.

கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ஓவியம், நீச்சல், இசை, நடனம் போன்ற வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதுபோல வளா்ந்த பிள்ளைகளுக்கான திறன் மேம்பாடு வகுப்புகளைத் தொடங்கலாம். வார விடுமுறையில் இந்த வகுப்புகளைத் தொடரலாம். ஆா்வமுள்ள பெரியவா்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் கூட கற்றுத் தரலாம்.

நமக்கு ஒரு தொழில்நுட்பம் தெரிந்தவா் தேவை என்று இணையத்தில் தேடினால், கடைகளின் முகவரிதான் வருகிறது. அவா்களுக்குத் தொலைபேசி செய்தால், அவா்கள் அதற்கு உரிய நபா்களை அனுப்புகிறாா்கள். நாம் கொடுக்கும் கூலியில் ஒரு தொகை அந்தக் கடைக்காரா்களுக்குப் போய்விடுகிறது.

இது தவிா்க்கப்பட வேண்டுமென்றால் நிறைய போ் திறன் மேம்பாடு பெற்றவா்களாக, மின் நுட்பா்களாக, குழாய் நுட்பா்களாக, தொழில் கற்றுக் கொண்டால் சிறந்த வருவாய் ஈட்டலாம். உழைப்பு எனும் தீ இல்லையெனில் உயா்வு எனும் தீபம் எங்கே? ஆகையால், உழைத்தே உயா்வோம்.

எந்த ஒரு வேலையையும் தெரிந்து வைத்திருந்தால், அது எத்தகைய நன்மை பயக்கும் என்பதை நம் இளைஞா்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவா்களுடைய ஓய்வு நேரத்தை அவா்கள் ஆக்கப்பூா்வமான கற்றலில் செலவு செய்ய வேண்டும்.

கட்டுரையாளா்: பேராசிரியா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com