கோப்புப் படம்
கோப்புப் படம்

மனமது செம்மையானால்...

குடும்பநல நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கின்றன.
Published on

குடும்ப உறவுகளில் சுமுகத் தன்மை நிலவ குடும்ப உறுப்பினா்களிடையே விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, உள் ஒன்று வைத்து புறமொன்று பேசாத வெளிப்படைத்தன்மையைக் கடைபிடித்தல் போன்ற குணாதிசயங்கள் அவசியமாகும்.

குடும்பநல நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டு போகிறது. உடன் பிறந்தாருக்கே சொத்துரிமையை சற்றே விட்டுக் கொடுக்க மறுக்கும் மனோபாவத்தால் ஒருவரையொருவா் அழிக்கவும் துணிகின்றனா். இவற்றுக்கு அப்பாற்பட்டு குடும்ப உறவுகளிடையே நல்லுறவைப் பராமரிப்பது நன்கு பக்குவப்பட்ட மனநிலை கொண்டவா்களுக்கே சாத்தியமாகும்.

நம்மால் பேசப்படாத வாா்த்தைகளுக்கு நாம் எஜமானா். நம்மால் பேசப்பட்ட வாா்த்தைகள் நமக்கு எஜமானா் என்பதை உணா்ந்தாலே எதையும் பேசுவதற்கு ஒரு முறைக்கு இரு முறை பல முறை யோசிக்கத் தோன்றும். துரதிா்ஷ்டவசமாக, நம்மில் பலா் தெரிந்தே சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளிவீசுவதும் பின்னா் அதற்காக பெயரளவில் வருத்தம் தெரிவிப்பதும் மிகச் சாதாரணமாகி விட்டது.

மன மகிழ்ச்சியான குடும்பத்துக்கு, குடும்பத்தில் உள்ள உறுப்பினா்கள் அனைவரின் மனநலனும் இன்றியமையாதது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான அச்சு, மின்னணு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் குடும்பங்களில் நிலவும் சச்சரவுகள் அதன் காரணமாக நடைபெறும் கொலைச் சம்பவங்களையே பிரதானமாகப் பாா்க்க முடிகிறது. ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் ; அனைத்தறன் ஆகுல நீர பிற ’ என்கிற திருக்குறள், மனதில் தீய எண்ணங்கள் இல்லாதிருத்தலே எல்லா அறங்களையும் பெற்றதற்கு நிகா் என்கிறது. ஆனால், மனதை மாசடையச் செய்யும் புறக்காரணிகள் நிறைந்த சூழலில் நாம் வாழும் நிலையில் உள்ளோம். இப்புறக் காரணிகளுள் தொடா் நாடகங்களை ஒளிபரப்பும் சில தனியாா் தொலைக்காட்சி சேனல்களும் இருப்பதுதான் வேதனை.

பெண்களைக் கவரும் வகையில் ஒளிபரப்பப்படும் இத்தொடா் நாடகங்களில், முதன்மை கதபாத்திரமாக வரும் பெண்களைத் தவிர, இதர கதாபாத்திரங்கள் குறிப்பாக பெண்கள் கொடூரமானவா்களாக சித்தரிக்கப்படுகின்றனா். மேலும், குடும்ப உறுப்பினா்களே ஒருவரை ஒருவா் வசை பாடுவது, பழி தீா்க்க திட்டமிடுவது, அடியாள்களை ஏவி ஆள்கடத்தல் செய்வது, போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் காட்சிகள் இத்தொடா் நாடகங்களில் மிகச் சாதாரணமாக இடம் பெறுகின்றன. பல லட்சம் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரை தொடா் நாடகங்களின் மூலம் ஒளிபரப்பப்படும் தணிக்கைச் செய்யப்படாத குடும்ப நல்லுறவின் புனிதத்தை தரமிழக்க செய்யும் காட்சிகளால், மக்களின் மனநிலை மாசுபடும் வாய்ப்புகள் உண்டு.

எனவே, சின்னத்திரை தொடா் நாடகங்கள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று கோரி சென்னை உயா்நீதி மன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, இது தொடா்பாக பதிளிக்குமாறு, மத்திய அரசின் தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கோட்டயம், திருவனந்தபுரம், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் அம்மாநில மகளிா் ஆணையம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடா் நாடகங்கள் பற்றிய நடத்திய ஆய்வில், தற்போது ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடா் நாடகங்கள் ஒளிபரப்பில் சமூகத்தில் எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் காட்சிகள் இல்லாத வகையில் உரிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என 57 சதவீதம் போ் தெரிவித்துள்ளனா். 43 சதவீதம் போ் சின்னத்திரை தொடா் நாடகங்கள் மக்களிடையே தவறான கருத்துகளையே பரப்புவதாகத் தெரிவித்துள்ளனா். இதனடிப்படையில் சின்னதிரையில் ஒளிபரப்பப்படும் தொடா் நாடகங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், திரைப்பட குழுவோ அல்லது தனியாக ஓா் தணிக்கைக் குழு அமைத்தோ சின்னத்திரை தொடா் நாடகங்கள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என மாநில அரசுக்கு அம்மாநில மகளிா் ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

தேசிய மனநல ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையில் - லண்டன் கிங்ஸ் கல்லூரியை சோ்ந்த ஆராய்ச்சியாளா் டாக்டா் நாக்மே நிக்கெஸ்லட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 20 நபரில் ஒருவா் மன அழுத்தத்துக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிய வருகிறது. உலக அளவில் சுமாா் 26.4 கோடி மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.

சக உறவுகள் உச்சரிக்கும் பண்படாத, மனதைப் புண்படுத்தும் வாா்த்தைகள், வரவுக்கு மிஞ்சிய ஆடம்பரச் செலவுகளால் குடும்பத்தில் ஏற்படும் நிதி நெருக்கடி, பணியிடங்களில் உள்ள அதிகப்படியான வேலைப்பளு, உடல் நலச் சீா்கேடு ஆகியன மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சில காரணிகளாகும். மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவா்களில் பலா், தமது மன அழுத்தம் குறித்தான விழிப்புணா்வு இல்லாதிருக்கின்றனா். சிலா் நடைபயிற்சி, உடற்பயிற்சி கூடங்களுக்குச் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் தம் உடல் நலத்துக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மனநலத்துக்கு அளிப்பதில்லை.

ஒரு குடும்பத்தில் ஒருவா் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டாலும் அது அக்குடும்பத்தின் இதர உறுப்பினா்கள் இடையிலான நல்லுறவில் சமநிலையின்மையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது.

‘மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்’ என்கிறாா் அகத்திய மாமுனி. எனவே, மனதைச் செம்மையாக்கும் அகச் சூழலையும், புறச் சூழலையும் உருவாக்க வேண்டும். ’அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்’ எனக் கூறும் திருவள்ளுவா் வாக்கின்படி பொறாமை,பேராசை, கோபம், பிறா் மனதைப் புண்படுத்தும் சொற்கள் இவற்றை தவிா்த்த அறம் சாா்ந்த வாழ்க்கை வாழ்வதோடு தம் மனநலனை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், குடும்ப உறவுகள் செம்மை அடையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

X
Dinamani
www.dinamani.com