வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையால் 1949-ஆம் ஆண்டு இந்த மகத்தான நாளில், நமது புனிதமான அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
Updated on
3 min read

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையால் 1949-ஆம் ஆண்டு இந்த மகத்தான நாளில், நமது புனிதமான அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2015-ஆம் ஆண்டுமுதல், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 26- ஆம் தேதியை அரசமைப்புச் சட்ட தினம் - சம்விதான் திவஸ் என்று கொண்டாடத் தொடங்கினோம். இது இப்போது நமது தாய்நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கொண்டாட்டமாக மாறிவிட்டது.

அசாதாரண தலைவர்களான பாபா சாஹேப் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர், டாக்டர் ராஜேந்திர பிரசாத், என். கோபாலசாமி அய்யங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், துர்கா பாய் தேஷ்முக் மற்றும் பிற சிறந்த தலைவர்கள் இந்த அரசமைப்பை அதன் ஒவ்வொரு பக்கத்திலும், நமது தேசத்தின் ஆன்மாவைக் காணும் வகையில் உருவாக்கினர்.

அரசியல் நிர்ணய சபையால், பாரதத் தாயின் மிகச் சிறந்த தலைவர்கள் சிலரால் நமது அரசமைப்பு வரைவுபடுத்தப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது சுதந்திரத்துக்காகப் போராடிய நமது பல லட்சக்கணக்கான மக்களின் கூட்டு ஞானம், தியாகம் மற்றும் கனவுகளை உள்ளடக்கியது.

வரைவுக் குழுவின் சிறந்த அறிஞர்களும், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களும் கோடானுகோடி இந்தியர்களின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற ஆழமான சிந்தனைகளைப் பங்களித்தனர். அவர்களின் தன்னலமற்ற பங்களிப்புகள் பாரதத்தை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக ஆக்குகின்றன.

நமது அரசமைப்பு அறிவார்ந்த, நேரடி அனுபவங்கள், தியாகங்கள், நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களில் இருந்து பிறந்தது. நமது அரசமைப்பின் ஆன்மா, பாரதம் ஒன்று என்பதையும், என்றென்றும் ஒன்றாக இருக்கும் என்பதையும் நிரூபித்துள்ளது.

நடைமுறை மற்றும் நிறைவான அணுகு முறையை ஏற்றுக்கொள்வதன் மூலம், பல வளர்ச்சிக் குறிகாட்டிகளில் நாம் சிறப்புற்றுச் செயல்பட முடிந்தது.

எங்கோ ஓரிடத்தில் இருந்த நாம், இப்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதார தேசமாக விளங்குகிறோம். மிக விரைவில் நாம் மூன்றாவது பெரிய பொருளாதார தேசமாக மாறுவோம். அதனால்தான் உலகம் இப்போது நம்மை நோக்கிப் பார்க்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழை மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு வரலாற்றுபூர்வ சாதனை. எண்மத் தொழில்நுட்பங்களின் உதவியுடன், 100 கோடி மக்கள் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளனர். சாத்தியமற்றதைச் சாத்தியமாக்கியுள்ளோம்.

இந்த ஆண்டு, சர்தார் வல்லபபாய் படேல், பகவான் பிர்சா முண்டா ஆகியோரின் 150-ஆவது பிறந்த நாளையும், நமது தேசப்பற்று நிறைந்த தேசியப் பாடலான வந்தே மாதரத்தையும் நினைவுகூர்ந்தோம்.

நமது விடுதலைப் போராட்ட வீரர்களின் வலியும் தியாகமும் நமக்கு உத்வேகம் அளித்தன. மேலும், வருங்காலத் தலைமுறையினருக்கும் அவை தொடர்ந்து ஊக்கமளிக்கும். இது நமது இந்திய இளம் நெஞ்சங்களில் தேசபக்தி, பெருமை மற்றும் விசுவாச உணர்வை வளர்த்தெடுக்கின்றன.

பாரதத்தைப் பொருத்தவரை, ஜனநாயகம் புதிய கருத்தாக்கம் அல்ல.

வடக்கில் வைஷாலியிலும், தெற்கில் சோழர் ஆட்சிக்கால குடவோலை முறையிலும் ஜனநாயகம் தழைத்தோங்கியதை வரலாறு வெளிப்படுத்துகிறது. எனவேதான், பாரதத்தை "ஜனநாயகத்தின் தாய்' என்று அழைக்கிறோம்.

குடிமக்களின் விழிப்புமிக்க பங்களிப்பு இல்லாமல் எந்தவொரு ஜனநாயகமும் தழைக்காது. நமது தாய்நாடான பாரதத்தில், ஒவ்வொரு குடிமகனும், அவர்கள் பணக்காரராக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, எப்போதும் ஜனநாயகத்தை வலுப்படுத்த பங்களிப்பை வழங்குகிறார்கள்.

அரசமைப்பின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு 2024 -இல் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல்களில் பதிவான அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் சதவீதம், ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. அண்மையில் நடைபெற்ற பிகார் தேர்தலில், குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வாக்களித்தது மிகவும் ஆரோக்கியமான அறிகுறியாகும்.

நம் அனைவரின் சார்பாக, அரசியல் நிர்ணய சபையின் பெண் உறுப்பினர்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அவர்களுக்கு நமது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன். ஹன்சா மேத்தாவின் பொன்மொழிகளை இங்கே மேற்கோள் காட்டுகிறேன், "நாங்கள் கேட்பது - சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி'.

2023-இல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டம், அரசமைப்பு நிர்ணய சபையின் பெண் உறுப்பினர்கள் மற்றும் நமது தாய் நாட்டின் பெண்களின் பங்களிப்புக்கு ஒரு பொருத்தமான மரியாதையாகும். இந்தச் சட்டம் மிகவும் சக்திவாய்ந்த நாடாக நமது தேசம் மாறுவதற்கான தேசக் கட்டமைப்பில் நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பங்களிப்பை வழங்க சம வாய்ப்பை வழங்கும்.

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக, பழங்குடி சமூகங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. விடுதலை இயக்கத்தில் பழங்குடி சமூகங்கள் மற்றும் அவர்களின் தலைவர்களின் குறிப்பிடத்தக்க பங்கையும் தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது.

விடுதலை இயக்கத்தில் பழங்குடித் தலைவர்கள், அந்த சமூகத்தின் தியாகம் மற்றும் போராட்டங்களை நினைவுகூர்ந்து அங்கீகரிக்க, பழங்குடியினர் கௌரவ தினத்தை 2021 -ஆம் ஆண்டுமுதல் நாம் கொண்டாடத் தொடங்கியுள்ளது பெருமைக்குரிய விஷயம்.

பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சமூகத்தின் பிற நலிவடைந்த பிரிவினரின் சமூக நீதி மற்றும் பொருளாதார அதிகாரமளிப்புக்கான நமது வலுவான அர்ப்பணிப்பை நமது அரசமைப்பு பிரதிபலிக்கிறது.

நமது அரசமைப்பைப் பற்றி நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம். அது உள்ளடக்கிய உணர்வைக் கொண்டுள்ளது. அதன் முகப்புரையில் இடம்பெற்றுள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் லட்சியங்கள், ஜாதி-மதம்-பாலினம்- மொழி-பிராந்தியம் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு குடிமகனும் பாரத மண்ணில் ஒரு சரியான இடத்தைப் பெறுவதை உறுதி செய்கின்றன.

அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகள், பதினோரு மாதங்கள், நமது தாய் நாட்டுக்கு ஒரு மைல்கல் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு பொதுவான குறிக்கோளுடன் விவாதித்தனர். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கொண்டிருந்த அதே உணர்வுடன், இந்த அமிர்த காலத்தில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாம் பாடுபட வேண்டும்.

உலக அளவில் மாறிவரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலையில், வாழ்க்கையின் பல துறைகளில் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. அவற்றில் தேர்தல் சீர்திருத்தங்கள், நீதித் துறை சீர்திருத்தங்கள் மற்றும் நிதிச் சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியமானவை.

ஒரே தேசம் - ஒரே வரி, சரக்குகள் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்றவை மக்களின் வளத்தையும் வணிகம் செய்வதையும் எளிதாக்கியுள்ளன.

இது சிக்கலான பல்நோக்கு வரி முறையையும், நாட்டில் உள்ள அனைத்துச் சோதனைச்சாவடிகளையும் ஒரே இரவில் அகற்ற வழி வகுத்தது. இது சாதாரண மக்கள் மீது அரசு அதீத நம்பிக்கை வைத்திருந்ததை நிரூபித்தது.

இதேபோல், ஜன் தன், ஆதார், மொபைல் (ஜேஏஎம்) ஆகியவை நமது கோடிக்கணக்கான குடிமக்களின் வாழ்க்கை முறையை எளிமைப்படுத்தியுள்ளன. நேரடி பணப் பரிமாற்றம் (டிபிடி) நாட்டின் தொலைதூரப் பகுதியில் வாழும் கடைசிக் குடிமகனை நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்துள்ளது.

அரசுக்கும் பயனாளிக்கும் இடையில் யாரும் இல்லை.

வளர்ச்சியடைந்த பாரதத்தின் லட்சிய இலக்கை அடைய நாம் அனைவரும் நவீன தகவல் தொழில்நுட்பங்களை ஆக்கபூர்வமான மனதுடன் பயன்படுத்த வேண்டும்.

மக்களின் பங்களிப்பு இல்லாமல், எந்த நாட்டையும் சிறந்ததாக மாற்ற முடியாது. கடமை உணர்வுடன் நமது பொறுப்புகளை நாம் நிறைவேற்ற வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளாக, அது நாடாளுமன்றமோ, மாநில சட்டப்பேரவைகளோ, உள்ளாட்சி அமைப்புகளோ எதுவானாலும் சரி, மக்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்ற உரையாடுவது, விவாதிப்பது மற்றும் கலந்துரையாடுவது நமது தலையாய கடமையாகும்.

இந்த நாளில் அற்புதமான நமது அரசமைப்பின் மதிப்புகளுக்கு ஏற்ப வாழ நமக்கு நாமே உறுதி ஏற்றுக்கொள்வதுதான் அதற்கு அளிக்கும் மிகச் சிறந்த மரியாதையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com