

பணம் செலுத்தினால்தான் சிகிச்சையை ஆரம்பிப்பீர்களா? என பிரபல தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், நோயாளியின் உறவினர் எழுப்பிய கேள்வி, அங்கே நின்றிருந்த பயிற்சி மருத்துவரைத் துளைத்துக் கொண்டிருந்தது.
நிர்வாகத்தின் மீது காட்ட வேண்டிய கோபத்தை, பயிற்சி மருத்துவர் மீது திருப்புவது வேதனையானது. ஆனாலும், அந்தப் பயிற்சி மருத்துவர் பொறுமையாக பதில் அளித்துவிட்டு, மற்றொரு நோயாளியைப் பார்க்கச் சென்று விட்டார். நான்கரை ஆண்டுகால படிப்பு, ஓராண்டு கட்டாயப் பயிற்சி என ஐந்தரை ஆண்டுகளை முடித்துவிட்டு சேவையாற்ற வரும் இவர்களுக்கு 8 மணி நேர பணிக்கு தனியார் மருத்துவமனைகள் தருவதோ சொற்ப ஊதியம்தான். இந்தச் சூழல்நிலையில், மருத்துவப் படிப்பு மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்ததுமே, நீட் பயிற்சி மையங்களில் மாணவர்கள் பலரும் சேர்க்கப்படுகிறார்கள். அவர்களின் விருப்பம், திறமை என்ன என்பது குறித்து சிந்திக்காமல், சமூகத்தில் தங்கள் அந்தஸ்தை உயர்த்திக் காட்டுவதற்காகவே, மருத்துவராக்க வேண்டும் என்ற அழுத்தத்தை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிக்கிறார்கள்.
ஒரே வகுப்பறையில் படித்த இரண்டு நண்பர்களில், ஒருவர் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்து, 22 வயதில் படிப்பை முடித்து முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்கிறார். அவருக்கு தொடக்கத்திலேயே நல்ல ஊதியம் கிடைக்கிறது.
ஆனால், அவருடன் படித்து, மருத்துவக் கனவுடன் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொண்ட மற்றொரு மாணவரின் நிலையோ தலைகீழ். எம்பிபிஎஸ் முடித்து, கட்டாயப் பயிற்சி முடித்து, மீண்டும் முதுநிலை நுழைவுத் தேர்வுக்குப் படித்து, ஒரு சிறப்பு மருத்துவராக வெளியே வரும்போது அவருக்கு வயது 30-ஐ தொடுகிறது.
தனது பள்ளி நண்பர் வீடு, கார் என வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்குச் சென்றிருக்கும் அதே வேளையில், 30 வயதைக் கடந்த இந்த மருத்துவர், தனது வாழ்க்கையை அப்போதுதான் தொடங்குகிறார்.
அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர், படித்து முடிக்க ரூ. 50 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகிறது. 2024-25-ஆம் கல்வியாண்டின் தரவுகளின்படி, இந்தியா முழுவதும் சுமார் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.
இவ்வளவு பெரிய போட்டிக்களத்தில் வெற்றி பெற்று, கோடிகளில் செலவு செய்து படித்த மருத்துவருக்கு, கார்ப்பரேட் மருத்துவமனைகள் நிர்ணயிக்கும் தொடக்கநிலை ஊதியம் மாதம் ரூ. 35,000 முதல் ரூ.45,000 வரை மட்டுமே. வங்கிக் கணக்கின்படி பார்த்தால், கல்விக் கடனுக்கு மாதம் 45,000 ரூபாய் தவணை செலுத்த வேண்டிய நிலையில், 30,000 ரூபாய் ஊதியத்தை வைத்துக் கொண்டு இவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சலும், சமூகப் பொருளாதார அழுத்தமும் விவரிக்க இயலாதது. ஏராளமாக செலவு செய்து எம்பிபிஎஸ் முடித்தாலும், முதுநிலை மருத்துவப் படிப்பு இல்லாவிடில் அவர்கள் ஒரு முழுமையான மருத்துவராக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. சாதாரண காய்ச்சலுக்குக்கூட சிறப்பு மருத்துவர்களை நாடும் போக்கு உள்ளது.
இதனால், எம்பிபிஎஸ் முடித்தவுடன் முதுநிலை மேற்படிப்பு என்னும் அடுத்தகட்ட போட்டிக்குள் மருத்துவ மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 120-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பணிச்சுமை, மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் குறைவு என்பதும், தமிழக அரசு பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகை ஆறுதல் அளிக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மருத்துவர்கள் படித்து முடித்து வருகின்றனர். அரசு மருத்துவர் பணியிடங்கள் போதிய அளவில் நிரப்பப்படாததால், 90 சதவீத மருத்துவர்கள் கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்களில் பணிக்குச் சேர வேண்டியுள்ளது. சொந்தமாக கிளினிக் வைக்கலாம் என்றால், அதற்கு முதலீடு தேவைப் படுகிறது.
ஒரு பொறியாளருக்கோ, ஒரு திறன்சார் தொழிலாளிக்கோ வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தைப் போல, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் அல்லது சிறு நகரங்களில் கிளினிக் அமைக்க விரும்பும் இளம் மருத்துவர்களுக்கு, பிணையில்லா கடன் மற்றும் வரிச் சலுகைகளை வழங்க வேண்டும்.
மருத்துவம் ஒரு சேவைதான்; அதைச் செய்பவரும் வாழ்வாதாரம் தேவைப்படும் ஒரு மனிதரே என்பதை உணர்வதுதான் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆரோக்கியத்துக்கான அடித்தளம். மருத்துவத் துறையில் வெற்றி பெற்ற மருத்துவர்கள் பலரும் உள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. அதேநேரத்தில், மருத்துவக் கல்வி மீதான சமூகத் தின் கண்மூடித்தனமான மோகமும், பெற்றோரின் அழுத்தமும், வணிகமயமான கல்விச்சூழலும் மாற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.