காட்சிப் பொருளாகும் கொண்டாட்டங்கள்!

முன்பெல்லாம் திருமண வீடுகள் என்றால், அங்கு மனிதர்களின் அன்யோன்யம் வாசலில் இருந்தே தொடங்கிவிடும். ஆனால் இன்று, ஒரு திருமண மண்டபத்துக்குள் நுழைந்தால் நாம் காண்பது உறவுகளின் நெருக்கத்தை அல்ல; மாறாக, நிழற்படக் கருவிகளின் ஒளிக்கற்றைகளைத் தேடி அலையும் மனிதர்களைத்தான்.
காட்சிப் பொருளாகும் கொண்டாட்டங்கள்!
IANS
Updated on
2 min read

தமிழர் பண்பாட்டு வரலாற்றில் திருவிழாக்களும் இல்லச் சடங்குகளும் வெறும் களியாட்டங்கள் அல்ல; அவை சமூகப் படிநிலைகளில் சிதறிக் கிடக்கும் உறவுகளை ஒரு புள்ளியில் பிணைக்கும் கண்ணுக்குத் தெரியாத இழை. ஊர் கூடித் தேர் இழுப்பதும், பந்தி விசாரிப்புகளும் ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சியை உரசிப் பார்க்கும் தருணங்கள். ஆனால், இன்றைய சமூக ஊடக யுகத்தில் கொண்டாட்டங்களின் ஆன்மா நசுக்கப்பட்டு, அவை வெறும் காட்சிப் பொருள்களாகவும், போலியான பாவனைகளாகவும் மாறி வருவது நம் காலத்தின் பண்பாட்டுத் துயரம்.

முன்பெல்லாம் திருமண வீடுகள் என்றால், அங்கு மனிதர்களின் அன்யோன்யம் வாசலில் இருந்தே தொடங்கிவிடும். ஆனால் இன்று, ஒரு திருமண மண்டபத்துக்குள் நுழைந்தால் நாம் காண்பது உறவுகளின் நெருக்கத்தை அல்ல; மாறாக, நிழற்படக் கருவிகளின் ஒளிக்கற்றைகளைத் தேடி அலையும் மனிதர்களைத்தான்.

நிச்சயதார்த்தம் முதல் வளைகாப்பு வரை அனைத்தும் இன்று ஒரு நாடக மேடைபோல மாற்றப்பட்டு விட்டன. மணமக்களின் அக உணர்வுகளைவிட, நிழற்படக் கலைஞரின் கோணங்களே முதன்மை பெறுகின்றன. தாலி கட்டும் புனிதமான அந்த விநாடியில்கூட, உற்றார் உறவினர்களின் வாஞ்சையான பார்வையைவிட, அறிதிறன்பேசிகளின் செயற்கை வெளிச்சமே அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறது. இது உறவுகளின் சங்கமம் என்பதைவிட, பிம்பங்களின் சந்தை என்றே சொல்லத் தோன்றுகிறது.

இன்றைய கொண்டாட்டங்கள் வாழ்வதற்காக அல்ல; பதிவிடுவதற்காக மட்டுமே என்று மாறிவிட்டது. ஒரு மங்கல நிகழ்வுக்குச் செல்பவர்கள், அங்குள்ளவர்களிடம் நலம் விசாரிப்பதைக் காட்டிலும், அங்குள்ள அலங்காரங்களையும் உணவுகளையும் சமூக ஊடகங்களிலும், தங்கள் வாட்ஸ் } ஆப்பிலும் நிலைத்தகவலாக பதிவிடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மெழுகுவர்த்தி அணைக்கப்படும்போது, அங்கிருப்பவர்கள் பாடும் வாழ்த்துப் பாடல் உண்மையான மகிழ்ச்சியில் ஊற்றெடுப்பதில்லை. அது காணொலியில் சரியாகப் பதியப்பட வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் ஒரு போலி ஒத்திகையாகவே இருக்கிறது. ஒளிப்படக் கருவி அணைக்கப்பட்ட அடுத்த விநாடியே, அந்த அறையில் மெüனம் குடியேறுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் பதிவுக்கு எத்தனை பாராட்டுகளும், விருப்பக் குறியீடுகளும் கிடைத்தன என்று எண்ணத் தொடங்கிவிடுகின்றனர். இது கொண்டாட்டத்தின் நேரடி அனுபவத்தை முற்றிலுமாகச் சிதைத்து விடுகிறது.

பந்தி விசாரிப்பு என்பது தமிழ்ப் பண்பாட்டின் ஆகச்சிறந்த அடையாளம். பரிமாறுபவரின் அன்பும், உண்பவரின் திருப்தியும் அங்கு உரையாடல்களாக மாறும். ஆனால் இன்று, இலை போடப்பட்டவுடன் கைகள் முதலில் அறிதிறன் பேசியைத்தான் தேடுகின்றன. அந்த உணவின் சுவையை நாவால் அறியும் முன்பே, அகிலம் அறியச் செய்கிறார்கள்.

முன்பெல்லாம் உணவின் தரமும் ருசியும் பேசப்படும்; இன்று அந்த உணவைப் படம் பிடித்த கோணம் பேசப்படுகிறது. பந்தியில் அருகருகே அமர்ந்திருப்பவர்களிடம் ஒரு புன்னகையைப் பரிமாறிக் கொள்ளக்கூட நேரமில்லாமல், கண்ணுக்குத் தெரியாத இணைய நண்பர்களுக்குப் பதில் சொல்வதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். இது பந்தி கலாசாரத்தின் மற்றொரு கோணமாக மாறிவிட்டது.

கிராமத்து திருவிழாக்களில் ஜாதி, மத பேதமின்றி மக்கள் ஒன்றுகூடிய மந்தை கலாசாரம், இன்று வாட்ஸ்} ஆப் குழு கலாசாரமாகச் சுருங்கிவிட்டது. ஊர்த் திருவிழாக்களில்கூட, முன்னின்று வேலை செய்பவர்களைவிட, தற்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். பாரம்பரியக் கலைகள் அவற்றின் கலைத் தன்மைக்காக ரசிக்கப்படாமல், இணையப் பக்கங்களை அலங்கரிக்கும் "பின்னணி இசை'யாக மாற்றப்படுவது பண்பாட்டுச் சிதைவின் உச்சம்.

கொண்டாட்டங்கள் என்பவை ஒருவருக்கொருவர் அன்புடன் நலன் விசாரித்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் களம். ஆனால், இன்று ஒரு துக்க வீட்டில்கூட கைப்பேசியில் படம் பிடிப்பவர்களைக் காண முடிகிறது. உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்த கண்ணீரும், புன்னகையும் இன்று வெறும் குறியீடுகளின் கூடாரங்களாகிவிட்டன.

உறவினர்களுடன் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த காலங்கள்போய், இப்போது படங்களை மட்டும் அனுப்புங்கள், அப்புறம் பேசலாம் என்று சொல்லும் இயந்திரத்தனமான மனிதர்களாக நாம் மாறிவிட்டோம்.

இந்தத் தொடர் ஓட்டத்தில், அடுத்த தலைமுறைக்கு உறவுகளின் பெயரோ அல்லது அவற்றின் ஆழமோ தெரியாமல் போகும் அபாயம் உள்ளது.

இந்த மாற்றத்துக்குப் பின்னால் ஓர் ஆபத்தான உளவியல் ஒளிந்திருக்கிறது. "தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்பதைவிட "தான் மகிழ்ச்சியாக இருப்பதாக மற்றவர்களுக்குக் காட்டிக்கொள்வதில்' மனிதர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மற்றவர்களின் அங்கீகாரத்துக்காக வாழத் தொடங்குவது ஒரு சமூகத்தின் ஆன்ம பலத்தைக் குறைத்துவிடும்.

நிஜமான அன்யோன்யம் குறைந்து, மேலோட்டமான தொடர்புகள் அதிகரிப்பது மனிதர்களைத் தனிமைக்குள் தள்ளுகிறது.

தொழில்நுட்பம் என்பது நம் வாழ்வை எளிதாக்க வேண்டுமே தவிர, நம் உணர்வுகளை ஆக்கிரமிக்கக் கூடாது. நிழற்படங்கள் எடுப்பதைக் குறைத்துவிட்டு, மனிதர்களை நேரில் பார்ப்போம். திரைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பதை விடுத்து, நிஜ உலக உரையாடல்களில் ஈடுபடுவோம். குழந்தைகளுக்கு உறவுகளின் உன்னதத்தை வாழ்த்தும் விதமாக நம் நேரத்தைச் செலவிடுவோம்.

வெறும் பதிவுகளுக்காகக் கொண்டாடப்படும் எந்த ஒரு நிகழ்வும் வரலாற்றில் நிற்காது; நினைவுகளில் மட்டுமே வாழும் தருணங்கள் என்றும் அழியாது. ஆரவாரமான விளக்குகளும், நிழற்படக் கருவிகளும் அணைந்த பிறகு மிஞ்சப் போவது என்னவோ நாம் பகிர்ந்துகொண்ட அந்த அன்பின் உரையாடல்கள் மட்டும்தான். எனவே, பிம்பங்களைத் தேடுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் மனிதர்களைத் தேடத் தொடங்குவோம்.

அப்போதுதான் நம் பண்பாடு சிதையாமல் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com