தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!

தமிழகத்தில் காற்றாலை மின் நிலையங்கள் தூத்துக்குடி (கயத்தாறு), கன்னியாகுமரி (ஆரல்வாய்மொழி, முப்பந்தல்), திருப்பூர் (தாராபுரம்), கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் அமைந்துள்ளன

News image
Updated On :8 மே 2026, 6:45 am IST

தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் அனைவரும் ஒரே நேரத்தில் குளிரூட்டும் பெட்டிகள் போன்ற மின்சாதனங்களைப் பயன்படுத்துவதால், உள்ளூர் மின்மாற்றிகள் அதிக மின்பளுவைச் சந்திக்கின்றன. இதனால் ஏற்படும் மின் தடையை அதிகபட்சம் 30 நிமிஷங்களுக்குள் சரிசெய்து மீண்டும் மின் விநியோகத்தைச் சீரமைக்க வேண்டும் என்று மின் பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2026, ஏப்ரல் 21 அன்று தமிழகத்தின் மின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டு 21,060 மெகாவாட்டாக இருந்தது. தமிழகத்தில் ஏற்கெனவே கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாகப் பதிவாகி வருகிறது. இதனால், வீடுகளிலும், அலுவலகங்களிலும் மின்சாரத்தின் தேவை அதிகமாகி வருகிறது.

நிகழாண்டு மே மாதம் முதல் மின் பற்றாக்குறை தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களில் அதிகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தென் மாநிலங்களின் தினசரி மின் தேவை 69,934 மெகாவாட்டில் இருந்து தற்போது 73,805 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் மின் தேவை 19,679 மெகாவாட்டில் இருந்து தற்போது 19,822 மெகாவாட்டாக அதிகரித்து,தென் மாநிலங்களிலேயே மின் தேவையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தற்போது தமிழகத்தில் தினசரி சராசரி மின் தேவை 16,000 மெகாவாட்டாக இருக்கும் நிலையில், இது கத்திரி வெயில் காலத்தில் (மே 4}மே 28) இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் பற்றாக்குறையை சமாளிக்க கூடுதல் மின்சாரத்தை கொள்முதல் செய்யவுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தி வரும் நம் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது.

நிலக்கரி, நீர், காற்று, அணுசக்தி, சூரிய ஒளி போன்ற பல்வேறு ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கான மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், கரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன. மொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள 20,000}க்கும் மேற்பட்ட காற்றாலைகளில் சுமார் 8,923 மெகா வாட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நாம் மின்சாரத்தைத் தயாரித்தால் மட்டும் போதாது; அதைத் திறமையாகவும் வீணாக்காமலும் பயன்படுத்த வேண்டும். அரசு திறமையான மின்பொறியாளர்கள் குழுவை அமைத்து ஒவ்வோர் வீட்டிலும் மின்சாரம் வீணாகும் சூழ்நிலைகளைக் கண்காணித்தால் வீணாகும் மின்சாரத்தின் அளவைக் குறைக்க முடியும். வீட்டில் மின்சாரத்தை வீணாக்காமல் பயன்படுத்தினால், நாம் சேமிப்பது மின்சாரத்தை மட்டுமல்ல, நமது பணத்தையும்தான் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். மின்சாரத்தைக் குறைவாக செலவு செய்வது சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.

வீடுகளில் எளிய வாழ்வியல் முறைகளைக் கொண்டு வந்தாலே மின்சாரத் தேவைகளைக் குறைக்க முடியும். மின்விளக்குகளின் பயன்பாட்டில் எல்இடி விளக்குகளை பயன்படுத்தலாம். சாதாரண குண்டு பல்புகள், குழல் (டியூப்) பல்புகளை இனி வரும் காலங்களில் தவிர்ப்பது நல்லது.

அரசுகள் அவற்றின் உற்பத்தியை நிறுத்துவதன்மூலம் சந்தையில் விற்பனைக்கு இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

மின்சார வாகனங்கள் தற்போது அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதைத் தவிர்த்து சாத்தியமானவர்கள் மிதிவண்டியின் பயன்பாட்டுக்கு மாறலாம்.

பகல் நேரங்களில் வீட்டு ஜன்னல்களைத் திறந்து வைப்பதன்மூலம் இயற்கையான சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்தலாம். வீடுகளைக் கட்டும் போதே இது சார்ந்த சரியான திட்டமிடுதல் தேவை. வீட்டில் பயன்பாட்டில் உள்ள மின்விசிறிகளின் இறக்கைகளையும், விளக்குகளையும் அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலமும் அவை திறம்படச் செயல்படும். அதனாலும் மின்சாரப் பயன்பாட்டில் சிக்கனத்தை நம்மால் கடைப்பிடிக்க முடியும்.

குளிர்சாதனப் பெட்டியில் அதிக அளவு பொருள்களை வைப்பதன் மூலம் குளிர்தன்மை நீண்ட நேரம் பாதுகாக்கப்பட்டு மின்சாரம் மிச்சமாகும். மேலும், சூடான உணவுகளை நேரடியாக குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. மின் அடுப்புகளில் சமைக்கும்போது அகலமான அடிப்பாகம் கொண்ட பாத்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சமையல் நேரத்தைக் குறைத்து மின்சாரத்தைச் சேமிக்கலாம்.

வீட்டு அறைகளில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்தும்போது அறையின் கதவுகளும் ஜன்னல்களும் சரியாக மூடப்பட்டிருப்பதை உறுதி செய்துக் கொள்வது நல்லது. வீட்டின் சுவர்களுக்கு அடர்த்தி குறைந்த வண்ணங்களைப் பூசுவதால் மின் விளக்குகளின் பயன்பாடு குறையும்.

தமிழகத்தில் காற்றாலை மின் நிலையங்கள் தூத்துக்குடி (கயத்தாறு), கன்னியாகுமரி (ஆரல்வாய்மொழி, முப்பந்தல்), திருப்பூர் (தாராபுரம்), கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் அமைந்துள்ளன. இந்தக் காற்றாலைகள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை அதிகபட்ச மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்தக் காற்றாலைகளின் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடலாம். அரசுச் சலுகையுடன் சூரிய சக்தி பேனல்களைப் பயன்படுத்துவதும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.