குர்துக்கள் யார்? அவர்கள் மீது தாக்குதல் ஏன்? 

சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான் வழியாகவும் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், பதற்றம் நிலவுகிறது.
குர்துக்கள்
குர்துக்கள்


சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான் வழியாகவும் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், பதற்றம் நிலவுகிறது.

குர்துக்கள் (Kurds)
குர்து மக்கள் மத்திய ஆசியாவில் வசிக்கும் குர்தி மொழியைப் பேசும் ஒரு தொன்ம மக்கள் குழு. இவர்கள் வாழும் நிலப்பரப்பு குர்திஸ்தான் என்று அவர்களால் அழைக்கப்படுகிறது. குர்திஸ்தான் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் இருக்கும் தொடரான நிலப்பரப்பைக் குறிக்கின்றது. துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்துக்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் வாழும் நிலப்பரப்பை குர்திஸ்தான் என்று அவர்கள் அழைக்கின்றனர். இவர்கள் ஒரு இன சிறுபான்மை குழு, சுமார் இரண்டரை கோடியில் இருந்து 3 கோடி வரை  இருப்பார்கள்  பெரும்பாலானவர்கள் சன்னி முஸ்லிம்கள். அவர்கள் ஒரு தனித்துவமான இனம், கலாச்சாரம் மற்றும் மொழியால் ஒன்றுபட்டுள்ளனர்.

குர்துகள் எங்கு வாழ்கிறார்கள்
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், குர்திஸ்தான் என்று அழைக்கப்படும் தாயகத்தை உருவாக்குவதற்கு குர்துகள் பாடுபட்டு வருகிறார்கள். இப்போது உலகின் மிகப்பெரிய நாடற்ற நாடுகளில் குர்திஸ்தான் ஒன்றாகும்.

அரசு சாரா பிராந்தியமான மக்களுக்கு உத்தியோகபூர்வ தாயகமோ நாடோ இல்லை. இன்று, குர்திஸ்தான் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் மற்றும் ஆர்மீனியா ஆகிய ஐந்து வெவ்வேறு நாடுகளில் உள்ள நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.

துருக்கியில் குர்திஷ்கள் மிகப்பெரிய இன சிறுபான்மையினராக இருந்தாலும், சுமார் 20 சதவீத மக்கள் உள்ளனர், அவர்கள் துருக்கியில் ஒரு சிறுபான்மைக் குழுவாக அங்கீகரிக்கப்படவில்லை.

அவர்களுக்கு ஏன் அரசு இல்லை?
நீண்ட வரலாறு இருந்தபோதிலும், நிரந்தரமாக ஒரு நாடு எதையும் குர்து மக்களால் ஒருபோதும் அடைய முடியவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ``குர்திஸ்தான்'' என்று பொதுவாகக் குறிப்பிடும் - தாய் நாடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று குர்து மக்கள் பலரும் யோசித்தனர். முதலாவது உலகப் போருக்குப் பிறகு, ஓட்டோமன் சாம்ராஜ்யம் வீழ்ந்த பிறகு, வெற்றி பெற்ற மேற்கத்திய கூட்டுப் படையினர் 1920 ஆம் ஆண்டு பிரான்ஸில் செவ்ரெஸில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, குர்திஸ் அரசு உருவாக்குவதற்கு வழி வகுத்தனர்.

மூன்று ஆண்டுகள் கழித்து அந்த நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டன. நவீன துருக்கியின் எல்லைகளை வரையறுத்த லாவ்சன்னே ஒப்பந்தத்தின்படி, குர்திஸ் அரசுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை. தாங்கள் வாழும் நாடுகளில் குர்திஸ் மக்கள் சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்டனர். அடுத்த 80 ஆண்டுகளில், சுதந்திரமான அரசை உருவாக்க குர்துகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும், கடுமையாக அடக்கப்பட்டன.

குர்தீஷ் மக்கள் பாதுகாப்புப் படை  (People's Protection Units (YPG)
ஒய்.பி.ஜி. என அழைக்கப்படும் குர்தீஷ் மக்கள் பாதுகாப்புப் படை  தான்  குர்து மக்களை பாதுகாக்கிறது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் இந்த அமைப்பு பெரும் பங்கு வகித்தது.'

அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் சேர்ந்து கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டியது ஒய்.பி.ஜி., அமைப்பு. சிரியாவில் நிலைமை இப்படி இருக்க, துருக்கியில், குர்துக்களுக்கு பெரிய அளவில் மதிப்பு கிடையாது. மேலும் தனி தேசம் கேட்கும் குர்துக்கள் தங்கள் நாட்டிலும், தங்கள் நாட்டின் எல்லை அருகேயும் இருப்பதை துருக்கி விரும்பவில்லை.

மவுண்டன் டர்க்ஸ்
துருக்கியில்  குர்துகள் தங்கள் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகின்றனர், பெரும்பாலும் துருக்கியில் இவர்கள் "மவுண்டன் டர்க்ஸ்" என்று அழைக்கப்படுகிறார்கள், அங்கு அவர்கள் பாரம்பரிய குர்திஷ் ஆடைகளை அணியவோ அல்லது அவர்களின் மொழியைப் பேசவோ தடை செய்யப்பட்டு உள்ளனர். 

குர்துக்களின் தனி தேசத்தை விரும்பாத துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் குர்துக்கள் போராளிகள் குழுவின் ஆதரவுடன் தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் செயல்பட்டு வரும் குர்திஸ்தான் வொர்க்கர்ஸ் கட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டவர்.

எல்லையோரம் உள்ள குர்து இனப் போராளிகளை தீர்த்துக் கட்ட தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த துருக்கி அதிபர் எர்டோகனுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தது.

தங்கள் நாட்டு படைகளை  சிரியாவில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்த டிரம்ப், அதே வேளையில், குர்து போராளிகளுக்கு எதிராக துருக்கி போர் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இருப்பினும் இதைப் பொருட்படுத்தாத துருக்கி அரசு, குர்து இனப் போராளிகளுக்கு எதிராக போரைத் தொடங்கியுள்ளது.

புதன்கிழமை இரவில் சிரியாவின் ரஸ் அல் அயின் நகரை நோக்கி, துருக்கி ராணுவம் வான் வழித்தாக்குதலைத் தொடங்கியது. டல் அப்யத் உள்பட 2  நகரங்களில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த நகரங்கள் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன.

உயிருக்கு அஞ்சி அங்கு வசிக்கும் 2 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். இதுவரை ஒய்.பி.ஜி. போராளிகள் குழுக்களின் (People's Protection Units )181 முகாம்கள்  மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக துருக்கி கூறியுள்ளது.

குர்திஷ் சிரிய ஜனநாயகப் படைகள் (Syrian Democratic Forces) வியாழக்கிழமை, தல் ஹலாஃப் மையத்திலும், வடகிழக்கு சிரியாவின் ஸ்லுக் நகரத்திலும் "துருக்கிய ஆக்கிரமிப்பு இராணுவம்" மேற்கொண்ட தரை ஊடுருவல் முயற்சியைத் தடுத்து விட்டதாக கூறி உள்ளது. 

ஐ.எஸ்.க்கு எதிரான போரில் குர்துகள் முன்னணியில் இருந்தனர்?
வடக்கு இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, இராக்கிய குர்திஸ்களான பெஷ்மெர்கா வீரர்கள் முன்னணியில் போரிட்டனர். 2013 ஆம் ஆண்டின் மத்தியில், தனது கட்டுப்பாட்டில் வடக்கு சிரியாவில் இருந்த எல்லைக்குள் மூன்று குர்திஸ் வாழ்பகுதிகளை ஐ.எஸ். ஜிகாதி குழுவினர் குறி வைத்தனர். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தினர். சிரிய குர்திஸ் ஜனநாயக ஐக்கிய கட்சியின் ஆயுதம் தாங்கிய மக்கள் பாதுகாப்புப் பிரிவுகளால் விரட்டப்படும் வரை அந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தன.

ஜூன் 2014ல் வடக்கு இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னேறியதும், அந்த நாட்டு குர்து மக்களைச் சர்ச்சைக்குள் இழுப்பதாக இருந்தது. இராக்கிய ராணுவத்தால் கைவிடப்பட்ட பகுதிகளுக்கு, தன்னாட்சி பெற்ற இராக்கில் குர்திஸ்தான் பிராந்தியத்தின் அரசாங்கம் தனது பெஷ்மெர்கா படைகளை அனுப்பியது.

ஆகஸ்ட் 2014-ல் ஜிகாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து பெஷ்மெர்கா படையினர் பல பகுதிகளிலிருந்து வாபஸ் ஆயினர். மத சிறுபான்மையினர் வசித்து வந்த பல நகரங்கள் வீழ்ந்துவிட்டன. குறிப்பாக சின்ஜரில், ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கான யசிடிகளை கொலை செய்தனர் அல்லது சிறை பிடித்தனர். கொபானேவுக்கான போரில் துருக்கிய ராணுவத்தினர் தலையிடவில்லை.

அதற்குப் பதிலடியாக அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் விமானத் தாக்குதலை வடக்கு இராக்கில் நடத்தி, பெஷ்மெர்காவினருக்கு உதவி செய்வதற்காக தங்களின் ராணுவ ஆலோசகர்களை அனுப்பியது. மக்கள் பாதுகாப்புப் பிரிவுகளும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியும் (பி.கே.கே.) குர்திஷ் தன்னாட்சிக்காகத் துருக்கியில் மூன்று தசாப்தங்களாகப் போராடி வந்தன. இராக்கில் தளம் அமைத்திருந்த அவர்களும், உதவிக்கு வந்தனர்.

செப்டம்பர் 2014-ல் வடக்கு சிரியாவில் குர்திஷ்களின் கொபானே நகரின் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பல பத்தாயிரம் பேர் அருகில் உள்ள துருக்கிய எல்லைக்கு இடம் பெயர்ந்தனர். அருகிலேயே சண்டை நடந்தபோதிலும், ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தத் துருக்கி மறுத்துவிட்டது. தங்களைத் தற்காத்துக் கொள்ள எல்லை தாண்டிச் செல்ல துருக்கிய குர்திஷ்களுக்கும் அனுமதி தரவில்லை.

துருக்கிய அதிகாரிகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் கூட்டு சதியில் ஈடுபட்டுவிட்டனர் என்று சுருக்-கில் 2015ல் தற்கொலைப் படை தாக்குதல் நடந்த பிறகு, குர்திஷ் இனத்தவர்கள் குற்றஞ்சாட்டினர். ஜனவரி 2015ல் குறைந்தது 1,600 பேர் கொல்லப்பட்ட சண்டைக்குப் பிறகு, கொபானே நகரை குர்திஷ் படைகள் மீண்டும் வசப்படுத்தின.

சிரிய ஜனநாயகப் படைகள் (எஸ்.டி.எப்.) கூட்டணி என்ற பெயரில் வந்த பல உள்ளூர் அரபு ராணுவப் பிரிவினருடன் சேர்ந்து, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் விமானத் தாக்குதல்கள், ஆயுதம் மற்றும் ஆலோசனை உதவிகளுடன் - குர்து இனத்தவர்கள் போராடி வட கிழக்கு சிரியாவில் பல பத்தாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை விரட்டியடித்து, துருக்கியுடனான எல்லையில் பெரும் பகுதியில் கட்டுப்பாட்டை நிர்மாணித்தனர்.

அக்டோபர் 2017-ல் எஸ்.டி.எப். வீரர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையிடமாகக் கருதப்பட்ட ரக்கா -வை கைப்பற்றி, தென்கிழக்கு பகுதியில் முன்னேறினர். ஜிகாதிகளின் கடைசி முக்கிய தளமாக இருந்த சிரியாவின் டெயிர் அல்-ஜவுர் மாகாணத்தை நோக்கி அவர்கள் முன்னேறிச் சென்றனர்.

ஆபரேஷன் ' அமைதி வசந்தம் (Operation Peace Spring)
ஆபரேஷன் ' அமைதி வசந்தம் '   இரவில் விமானம் மற்றும் நிலம் மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் அடையப்பட்டன. திட்டமிட்டபடி செயல்பாடு வெற்றிகரமாக அமைந்தது என கூறியது.

துருக்கியின் இராணுவ நடவடிக்கையின் முதல் நாளில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.

சிரியாவின் எல்லையை ஒட்டிய அக்காக்கலே என்ற இடத்தில் ராணுவ டாங்குகள் குவிக்கப்பட்டுள்ளன. குர்து போராளிகள் குழுக்களுக்கு எதிராக துருக்கி தொடங்கியுள்ள இந்தப் போரால், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதம் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

துருக்கி நடவடிக்கையை பஹ்ரைன், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் கண்டித்துள்ளன. இங்கிலாந்து, ஈராக் போன்ற பல நாடுகள் "கடுமையான கவலையை" வெளிப்படுத்தியுள்ளன. 

நிலைமை குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இன்று காலை தனிப்பட்ட முறையில் கூடியது. ஆபரேஷன் ' அமைதி வசந்தம் '  என்ற பெயரில் குர்துக்கள் மீது துருக்கி நடத்தும் தாக்குதல் பற்றி ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்  கவலை தெரிவித்து உள்ளது.

சிரியா அரசுடன், குர்துகள் ஒப்பந்தம் 
ஐந்து நாட்களாக தாக்குதல் தொடரும் நிலையில், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக சிரியா அரசுடன் குர்துக்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

அதன்படி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மன்பீஜ் மற்றும் கோபேன் ஆகிய நகரங்களை சிரியாவிடம் ஒப்படைக்க குர்துக்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு பிரதிபலனாக எல்லைக்குப் படைகளை அனுப்பி, குர்துக்குள் மீது தாக்குதல் நடத்தும் துருக்கி ராணுவத்தை எதிர்கொள்ள சிரியா அரசு ஒப்புக் கொண்டுள்ளது. 

குர்து படைகள் மீதான துருக்கியின் ராணுவத் தாக்குதலுக்கு ஈரான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com