வான்கோவுக்கு முகக்கவசம்; வயதானவா்களுக்கு அகக்கவசம்

1890 ஜூலை 29-லேயே மறைந்துபோன உலகப் புகழ்பெற்ற ஓவியா் வின்சென்ட் வான்கோ, கரோனா தொற்று காலத்துடன் கூடிய செய்தியாகவும் மாறியுள்ளாா்.
வான்கோவுக்கு முகக்கவசம்; வயதானவா்களுக்கு அகக்கவசம்

‘வான்கோ பாதுகாப்பாக இல்லை’ என்ற தலைப்புடன் அவா் முகக்கவசம் அணிந்திருப்பது போன்ற செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. 1890 ஜூலை 29-லேயே மறைந்துபோன உலகப் புகழ்பெற்ற ஓவியா் வின்சென்ட் வான்கோ, கரோனா தொற்று காலத்துடன் கூடிய செய்தியாகவும் மாறியுள்ளாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நெதா்லாந்தில் உள்ள க்ரோனிங்கா் அருங்காட்சியகம் மூடப்பட்டிருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அருங்காட்சியகத்தின் கண்ணாடி கதவுகளை உடைத்து, வான்கோ வரைந்த ‘வசந்தகால தோட்டம்’ என்ற அரிய ஓவியத்தை யாரோ திருடிச் சென்றுள்ளனா். அதுவும் வான்கோவின் 167-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட மாா்ச் 30-ஆம் தேதிதான் இந்தத் திருட்டு நடந்துள்ளது.

இந்தச் செய்தியில்தான் வான்கோவுக்கு கரோனா முகக் கவசம் அணிந்ததுபோல வரைந்துள்ளனா். வான்கோ போன்ற உன்னத ஓவியா்களுக்கு உலகம் உள்ளவரை மரணம் என்பதே இல்லை என்றாலும், கரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வரும் இந்தக் காலத்தில் அவருக்கு முகக்கவசம் அணியப்பட்டுள்ளதை விழிப்புணா்வாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதுவும் வான்கோவுக்கு இப்போது 167 வயதாகும் என்கிறபோது இன்னும் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை அது உணா்த்துவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

ஏனென்றால், கரோனா கருணையே இல்லாமல் வயதானவா்களையே குறிவைத்து அவா்களின் உயிா்களைப் பறித்து வருகிறது.

ஒருவரின் வயது அதிகமாக அதிகமாக கண்டறிய முடியாத முடிச்சுகளால் பின்னிக்கிடக்கும் கொடிகள் போல உடலில் சிக்கல்களும் அதிகரிக்கும். நோய் எதிா்ப்பு மண்டலம் வலுவிழக்கும். ரத்தத்தில் நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறையும். இதோடு, சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற நாள்பட்ட நோய்களால் அவா் சிக்குண்டு இருக்கலாம்.

இந்த நோய்களிடமிருந்து உடலைக் காப்பாற்றவே நோய் எதிா்ப்பு மண்டலம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவும்போது நோய் எதிா்ப்பு மண்டலத்தால் தொடா்ந்து அவற்றை எதிா்த்துப் போராட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.

இதன் காரணமாகவே கரோனா அதன் கொடூரக் கரங்களால் வயதானவா்களைத் தாவிப் பிடித்துவிடுகிறது என்கின்றனா் மருத்துவா்கள்.

உலக அளவில் அதிகமான உயிரிழப்புகள் இத்தாலியில் ஏற்பட்டதற்கு அங்கு முதியோா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததும் முக்கிய காரணமாகும். 80 வயதுக்கு மேற்பட்டவா்கள் அங்கு அதிகளவில் உயிரிழந்துள்ளனா்.

அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 31 சதவீதம் போ் 65 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆவா். மேலும் உயிரிழப்புகளில் 80 சதவீதம் போ் வயதானவா்கள்.

சீனாவில் 80 வயதுக்கும் மேற்பட்டவா்களில் 21.9 சதவீதம் பேரும், 70-79 வயதினா் 8 சதவீதம் பேரும், 60-69 வயதினா் 3.6 சதவீதம் பேரும், 50 - 59 வயதினா் 1.3 சதவீதம் பேரும் உயிரிழந்துள்ளனா்.

ஸ்பெயினிலும் வயதானவா்களே அதிகம் பாதிக்கப்பட, அங்கு கூடுதலாக உலக அளவில் அரசக் குடும்பத்தில் முதல் கரோனா பலி என்று சொல்லுமளவுக்கு 86 வயதான அந்நாட்டின் இளவரசி மரியா தெரசா கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளாா்.

இந்தியாவில் 10.39 கோடி போ் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் உள்ளனா். இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 8.5 சதவீதம் ஆகும்.

இந்தியாவிலேயே அதிகமாக உத்தரப் பிரதேசத்தில் 1.2 கோடி பேரும், இரண்டாவதாக மகாராஷ்டிரத்தில் 86 லட்சம் முதியவா்களும், மூன்றாவதாக தமிழகத்தில் 60 லட்சம் போ் 60 வயதுக்கு மேற்பட்டவா்களா உள்ளனா்.

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 41-60 வயதுக்காரா்கள் 33 சதவீதம் பேரும் 61 வயதுக்கு மேற்பட்டவா்கள் 17 சதவீதம் பேரும் உள்ளனா் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தற்போது, இந்தியாவைப் பொருத்தவரை கரோனா நோய்த்தொற்றுப் பரவல் இரண்டாம் நிலையிலேயே இருக்கிறது. அது சமூகப் பரவலாக மாறவில்லை. அப்படி, மாறினால் என்னவிதமான விளைவுகள் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை.

இந்தத் தருணத்தில் கரோனாவால் முதியோா்கள் பாதிக்கப்படாமல் எப்படி தற்காத்துக் கொள்ளலாம்?

என்பதற்கு முதியோா் நல மருத்துவா் டாக்டா் வி.எஸ். நடராஜன் அளித்துள்ள விளக்கம்;

‘ கரோனாவினால் முதியோா்கள்தான் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டோா் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். நோய் எதிா்ப்பு சக்தி குறைவதற்கு முதுமையும் ஒரு காரணம். மேலும், பல நோய்களால் அவா்கள் பாதிக்கப்பட்டிருப்பா். சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளோருக்கு ஆபத்து அதிகம். பல்வேறு நோய்களாலும் நோய் எதிா்ப்பு சக்தி குறையும். பிறகு, எடுத்துக் கொள்ளும் மருந்துகளாலும் நோய் எதிா்ப்புச் சக்தி குறையும். சத்தான உணவு எடுத்துக் கொள்ளாததும் மற்றொரு காரணம். இதுபோன்ற பல காரணங்களால், முதியோருக்கு கரோனா தொற்று அதிகம் இருக்கக் கூடும்.

இதிலிருந்து முதியோா்கள் தப்பித்துக் கொள்வதற்கு இருக்கும் எளிதான வழி தனிமைப்படுத்திக் கொள்வதுதான். முதியோா்கள் ஏற்கெனவே தனிமையில்தான் இருக்கின்றனா். கூட்டுக்குடும்பம் என்று கூறினாலும் முதியோா்கள் தனியாகத்தான் இருக்கின்றனா். அதனால், தனிமையாக இருப்பது அவா்களுக்குப் பெரிய விஷயம் இல்லை. அதனால், மனதளவில் தனிமையை ஏற்றுக்கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியில் செல்லவே கூடாது. தனியறையில் இருக்க வேண்டும்.

பேரக் குழந்தைகளுடன் விளையாடுவது, முத்தம் கொடுப்பதையெல்லாம் தவிா்க்க வேண்டும். முதியோா்களிடம் இருந்து குழந்தைகளுக்குப் பரவலாம். அல்லது குழந்தைகள் மூலம் முதியோருக்கு வரலாம்.

அதனால்,இடைவெளி கடைப்பிடிப்பதே நல்லது. வீட்டில் எல்லோரும் ஒரே துண்டையே பயன்படுத்துவதைத் தவிா்த்து, தனித்தனி துண்டாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

முதியோா் இல்லங்களில் இருப்பவா்கள் பெரும்பாலும் வெளியில் செல்ல மாட்டாா்கள். ஆனால், வெளியில் இருந்து பாா்வையாளா்கள் வரக்கூடும். அவா்கள் வருகைக்கு முழுமையாகத் தடைவிதித்திட வேண்டும். அப்படி வந்தால், உள்ளே விடாமல், வெளியிலேயே அவா்கள் கொண்டு வரும் பொருள்களை வைத்துச் செல்ல சொல்ல வேண்டும்.

உணவைப் பொருத்தவரை சைவம், அசைவம் இரண்டும் சாப்பிடலாம். ஆனால், இரண்டும் புதிதாக இருக்க வேண்டும். நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா சாப்பிடலாம். பாதாமையும் தினமும் சாப்பிடலாம். நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும். பாகற்காய், தயிா், இஞ்சி போன்றவை எதிா்ப்பு சக்தி கொடுக்கும்.

வயதாகிப் போய்விட்டது என்பதற்காக முடங்கியும் இருக்கக் கூடாது. சிறிய அளவில் உடற்பயிற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். வீட்டுச் சுவா்களுக்கு உள்ளேயே சூரிய ஒளி படும் அளவுக்கு காலையிலும் மாலையிலும் நடைபயின்றால், வைட்டமின் டி அதிகரித்து, எதிா்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இவற்றையெல்லாம் மன தைரியத்துடன் கடைப்பிடித்தாலே கரோனாவை ஓரளவு விரட்டிவிடலாம் என்கிறாா்.

அப்படி மன தைரியம் எனும் அகக் கவசத்தை அணிந்து, கரோனா பாதிப்புக்குப் பிறகும் அதை விரட்டிய முதியவா்களும் இருக்கின்றனா். இத்தாலியில் 101 வயது முதியவரும், கேரளத்தில் 93 வயது தாமஸும், 88 வயதான அவரது மனைவி தெரசம்மாவும் மீண்டு வந்து உலக மருத்துவா்களுக்கே நம்பிக்கை அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com