'மூடத்தனம் என்ற நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே புத்தகங்கள்'

இந்தியாவில் 1968 முதல் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14 முதல் 20 வரை தேசிய நூலக வாரம் என ஐ.எல்.ஏ. எனப்படும் இந்திய நூலக சங்கத்தால் அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.
நூல் செல்வம்!
நூல் செல்வம்!

இந்தியாவில் 1968 முதல் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14 முதல் 20 வரை தேசிய நூலக வாரம் என ஐ.எல்.ஏ. எனப்படும் இந்திய நூலக சங்கத்தால் அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.

ஆந்திரப் பிரதேச நூலக சங்கத்தின் செயலாளர் அயன்கி வெங்கடரமணையா 1912 நவம்பர் 12 ஆம் தேதி சென்னையில் அகில இந்திய நூலகக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இந்த சந்திப்பு இந்திய நூலக சங்கம் (ஐ.எல்.ஏ.) உருவாக்க வழிவகுத்தது. பின்னர், ஐ.எல்.ஏ. நவம்பர் 12 கூட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நவம்பர் 14-ஐ தேசிய நூலக தினமாக அறிவித்தது. இது நமது முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளும்கூட. 1968 முதல், நவம்பர் 14 முதல் 20 வரை இந்தியா முழுவதும் தேசிய நூலக வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, “நான் மறைந்தபின் என் உடல் மீது மலர் மாலைகளை வைக்கவேண்டாம்; என் மடி மீது புத்தகங்களைப் பரப்புங்கள்” என்று கேட்டுக் கொண்டார்! இதன் மூலம் புத்தகங்களை அவர் எந்த அளவிற்கு நேசித்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதனால் குழந்தைகள் தின விழாவோடு குழந்தைகள் வாசிக்க நூலக வார விழாவையும் கொண்டாடுகிறோம். 

தேசிய நூலக வார விழாவின் மூலம், ‘நூலகர் - வாசகர்’ உறவு மேம்படுகிறது. நூலகத்தின் பணியைப் பொது மக்கள் உணர வாய்ப்பு ஏற்படுகிறது. 

புதிய வாசகர்கள் நூலகத்திற்குச் சேர்க்கப்படுகிறார்கள். புதிய உறுப்பினர் சேர்ப்பு நடைபெறுகிறது. நூலகத்தின் பயன்கள் பொது மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன. பொது மக்களிடமிருந்து நூலக வளர்ச்சிக்குப் பொருளுதவியும் பெற முடிகிறது. நூலகங்கள் தொடர் கல்விக்கு வாய்ப்பாக உள்ளன. படிக்கும் பழக்கத்தைப் பெரிதும் வளர்க்க உதவுகின்றன. இப்போது நூலக வார விழா கொண்டாடும் நேரத்தில் அதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவது அவசியமாகும். 

உலகின் பெரிய தலைவர்கள், மாமேதைகள், ஆளுமைமிக்க நிர்வாகிகள்  ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தபோது அவர்கள் அனைவருக்குள்ளும் ஓர் ஒற்றுமை இருந்தது, “புத்தகம் வாசிக்கும் பழக்கம்” தான் அது.

“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் கூறியது அனைவருக்கும் ஏற்ற உண்மை. இன்றைய நல்ல வாசகன்தான் நாளை நல்ல தலைவன் ஆக முடியும். 

இன்றைய நாளில் நூல்கள் வாசிப்பு என்பது மிகவும் குறைந்து உள்ளது. நமது ஓய்வுநேரங்களைப் பயனுள்ளதாக்கிக் கொண்டு அறிவை மேம்படுத்த நூல்களே மிகச் சிறந்த கருவியாக உள்ளன. ஒருவர் பயிலும் சிறந்த நூல்களே அவர்களின் வாழ்க்கையை உருவாக்குகிறது. 

இன்றைய உலகில் உங்களை வெற்றியாளர்களாக ஆக்கிக்கொள்ளச் சிறந்த வழி புத்தகங்கள் வாசிப்பதே. மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது நம்மைச் சரியான வழியில் நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளைப் போக்கி நம்மை முழுமையாக்கிக் கொள்ளவும் உதவும். 

நீங்கள் எந்தத் துறையில் வெற்றி பெற விரும்புகின்றீர்களோ அந்தத் துறையில் வெற்றியடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள். அவர்கள் சந்தித்த தடைகளையும் அதைக் கடந்து வரக் கடைப்பிடித்த அணுகு முறைகளையும் அறிந்து கொள்ளுங்கள். அவை எப்பொழுதோ நிகழ்ந்தாலும் இப்பொழுதும் நாம் வெற்றிக்கு வழிகாட்டும். இவற்றை அறிந்துகொள்ள உதவுவது புத்தகங்கள். அறிவியல் நூல்கள், மாமேதைகளின் சரித்திர நூல்கள், சமய நூல்கள் அனைத்தையும் தேடிப் படியுங்கள். 

அமெரிக்காவில் புத்தகங்களை அதிகம் படிப்பவர்களே தலைசிறந்த வருவாய் ஈட்டுவோர்  என்று ஆய்வு கூறுகிறது. “நாளும் பொழுதும் என்னோடு நடமாடிக் கொண்டிருக்கிற என்னை எப்போதும் வீழ்த்திடாத நண்பர்கள் புத்தகங்களே” என்றார் கவிஞர் ராபர்ட் கதே.

வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்கிற பேராற்றலைப் புத்தகங்கள் நமக்குப் புகட்டுகின்றன என்பதால் “வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர்.  

“காட்டுமிராண்டித்தனமான நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களினால் ஆளப்படுகின்றன” என்றார் பேகன். 

“படிக்கத் தெரிந்த ஒருவன் புத்தகங்களைப் படிக்காமல் இருப்பது படிக்கத் தெரியாதவன் நிலையைவிட மோசமானது. வோர்ல்ட் வைட் வெப் (www) என்று விரல் நுனியில் அனைத்து தகவல்களும் உள்ளபோது படிப்பதைத் தவிர்த்தல் ஒரு தேசிய அவமானமாகும். அமெரிக்காவிலிருந்து கொண்டு அறியாமையில் இருப்பதற்கு மன்னிப்பே கிடையாது” என்கிறார் பர்க் ஹெட்ஜஸ் என்ற சிறந்த அமெரிக்க எழுத்தாளர். 

இலண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ்தான் பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.

பேரறிஞர் அண்ணா புற்றுநோயால் உயிருடன் போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளிவைக்கச் சொன்னாராம்.

ரஷிய நாடு இந்தியாவைச் சிறிதும் மதிக்காத காலத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத் ரஷியாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம். இந்தச் செயலே அப்போதைய ரஷியாவின் அதிபராக மட்டுமல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த ஸ்டாலினுடைய நன்மதிப்பை அவர் பெறக் காரணமாயிருந்தது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட ஸ்டாலின் இதயத்தையும் கவர்ந்தார் அவர்.

டாக்டர் அம்பேத்கர், ஆப்ரகாம் லிங்கன் ஆகியோரை உலகிற்கு தந்தது வாசிப்புப் பழக்கம்தான், அதன் மூலம் உலகத்திற்கு நல்ல மாற்றத்தையும் தந்தார்கள். ‘கற்றனைத்தூறும் அறிவு’ என்ற வள்ளுவர் குறளுக்கேற்ப நூல் பல படிக்கும் பழக்கமே அனைவரின் வாழ்க்கையும் உயர்த்தும். 

இளமையில்தான் மிகச்சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதிலிருந்து கற்றுக்கொள்வதைவிடப் பெற்றோர்கள் செய்வதைப் பார்த்து மிகுதியாக கற்றுக் கொள்கிறார்கள். எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதாவிலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்துகொண்டே இருக்கும்.

சீன நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்த யுவான் சுவாங் என்னும் அறிஞர் நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின் சில காலம் அங்கேயே பேராசிரியராகவும் இருந்தார். பின் தாயகம் திரும்பி, புத்தமதப் பிரசாரம் செய்ய விரும்பினார். அதற்காகச் சில அறநூல்களையும் தம்முடன் எடுத்துச் சென்றார். மாணவர்கள் பலர் வழியனுப்பச் சென்றனர். படகு சிந்து நதியின் நடுவில் சென்றுகொண்டிருந்தது. அப்போது புயல் வீசியது. படகு கவிழ்ந்து விடுமோ என்று அனைவரும் அஞ்சினர். யுவான் சுவாங் தாம் கற்றவையனைத்தும், கொண்டு செல்ல நினைத்தவையனைத்தும் பயனற்றதாகிவிடுமோ என்று முகம் வாடினார். 

அதைக் கண்ட மாணவர்கள் பாரம் குறைந்தால் படகு தப்பக்கூடும் என நினைந்து அறிவுச்செல்வத்தைவிட தம்முயிர் பெரிதல்ல என்பதனையும் நினைத்து ஆற்றில் குதித்து விட்டனர். யுவான் சுவாங்கும் அறிவு நூல்களோடு இந்திய மாணவர்களின் தியாக உணர்வையும் சுமந்து கொண்டு கரை சேர்ந்தார். அறிவு செல்வத்தைக் கொடுக்கும் புத்தகங்கள் வரலாற்றில் மகத்தான காரியங்களைச் செய்யும், அதைக் காக்க தங்கள் உயிரையும் தியாகம் செய்தனர். 

இன்று யாரும் உயிர்த் தியாகம் செய்ய அவசியம் இல்லை. தொழில்நுட்பம் பெருகிவிட்டது, அச்சக வளர்ச்சி எல்லோர் கைக்கும் புத்தகங்களைக் கொடுத்து விட்டது. முன்பு எப்போதும் இல்லாததைவிட அனைத்துத் துறை சார்ந்த புத்தகங்கள் நவீனமாக வந்துவிட்டன. புத்தகங்கள் குறைவாகக் கிடைத்த காலங்களில் பல அறிஞர்கள் உருவாகினர். ஆனால் இன்று புத்தகங்கள் எல்லோருக்கும் இருந்தாலும் வாசிப்பதற்கு யாரும் தயாராக இல்லை என்ற கசப்பான நிலை. பல பள்ளிகள், கல்லூரிகளில் பாடப் புத்தகங்களைத் தவிர நூலகத்தைப் பெரும்பாலும் பயன்படுத்தாமலே இருப்பது வேதனைக்குரியது. மாணவர்கள் மன அழுத்தமின்றி மன நலத்தோடு விளங்கப் பாட நூல்களைத் தாண்டிய நூலக வசிப்பு அவசியம். 

“அறியாமையைவிட மிகப் பெரிய நோய் இந்த உலகத்தில் வேறு கிடையாது”.- என்றார் இங்கர்சால். ஒரு நாட்டின் வளமை, அதன் இயற்கைச் செழிப்பால், அதன்  மூலதனத்தால், அதன் நிலப்பரப்பால் சாத்தியமாகும் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால், அண்மைக் கால நிலைமை வேறு; “அறிவு ஒன்று இருந்தால் போதுமானது; வெற்றி வந்து சேரும் என்பது இந்த 21-ஆம் நூற்றாண்டுக் கோட்பாடாக  ஆகிவிட்டது!

“புத்தகங்கள் மருந்துகளைப் போன்றவை; மூடத்தனம் என்கிற நோயை முற்றாக விரட்டும் மூலிகை மருந்துகள் அவை”- என்பது சீனப் பழமொழி!

தோரேவின் ’சட்ட மறுப்பு’ நூல்தான் காந்தியடிகளுக்குப் புதிய போராட்ட வியூகத்துக்குப் படியமைத்துத் தந்தது. மற்றவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் படித்தபோது, காந்தி அடிகள், பின்பற்றுவதற்காகப் படித்தார்! அதனால்தான் அவர் மகாத்மாவானார்! 

வாழ்க்கை முழுவதும் கல்வி கற்பதன் நோக்கம், ஜான் ரஸ்கினின் கருத்துப்படி, மனித ஆன்மாவை மிகச் சிறந்த நிலைக்கு அழைத்துச் செல்வதாகும். மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே மகிழ்ச்சியாக இருக்கவும், மற்றவர்களுக்குச் சேவை செய்கின்ற மனப்பான்மையினை ஏற்படுத்தவும், வாழ்நாள் முழுவதும் நூல்களைப் படிப்பது அவசியமாகிறது.             

ஒருவர் ஒரு நாள் 10 பக்கங்கள் படிக்க முடியும் என்றால் 30 நிமிடங்கள் ஒரு நாளைக்கு ஒதுக்க முடியும் என்றால் ஒரு வருடத்திற்குள் 20 புத்தகங்கள் உங்களால் படிக்க முடியும். பத்து ஆண்டுகளில் 200 புத்தகங்கள் படித்திருப்பீர்கள். மிக உயர்ந்த நிலைக்குச் சென்றிருப்பீர்கள். நேர நிர்வாக நூல் உங்களைச் சிறந்த நிர்வாகியாக்கும். சுய முன்னேற்ற நூல்கள் உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். மொழி நூல்கள் மூலம் ஆங்கிலம் அல்லது பிற மொழி வார்த்தைகள் தினமும் ஐந்து கற்றுக்கொண்டால் உங்கள் வாழ்வை வலிமையாக்கும். நல்ல பெற்றோருக்கான புத்தகம் நல்ல பிள்ளைகளை வளர்க்க உதவும், நல்ல சந்ததிகள் உருவாகும். 

பொருளாதார வர்த்தக நூல்கள் அறியாமையைப் போக்கி பணத்தைப் பெருக்கும், விவசாயம் சிறக்கவும், வேளாண்மை வளரவும்கூட இன்றைய நவீன நூல்கள் உதவுகின்றன. இன்றைய காலத்தில் ஒரு புத்தன் உருவாகினாலும் அதற்குப் புத்தகமே காரணமாக இருக்க முடியும். மனிதனை அறிவுள்ளவனாக பூரணத்துவம் பெற்றவனாக மாற்றுவதில் நூல்கள் சிறந்த வழிகாட்டியாகவும், ஆசிரியராகவும் திகழ்கிறது. எனவே ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்ற ஔவையின் முதுமொழிக்கேற்ப தினமும் வாசிப்போம் வாழ்வை மேம்படுத்துவோம். 

[கட்டுரையாளர் - நூலகர் மற்றும்

நூலக அறிவியல் துறைத் தலைவர்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com