'புத்தகமே சமூக மாற்றத்திற்கான திறவுகோல்' - ​உலக புத்தக நாள் இன்று!

கடந்த காலத்தின் வரலாறுகளை நாம் பதிவு செய்த வைத்த ஆவணமே புத்தகம். புத்தகம் என்பது ஒரு காலத்தின் வரலாறு.
'புத்தகமே சமூக மாற்றத்திற்கான திறவுகோல்' - ​உலக புத்தக நாள் இன்று!

"வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட, அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை."

-ஹென்றி வார்ட் பீச்சர். 

புத்தகமும் வாசிப்பும்

கடந்த காலத்தின் வரலாறுகளை நாம் பதிவு செய்து வைத்த ஆவணமே புத்தகம். புத்தகம் என்பது ஒரு காலத்தின் வரலாறு. வரலாறு என்பது எழுத்துக்கள் மூலமும் ஆதிகாலத்தில் குகைகளின் சுவர்கள், எலும்புகள், ஆட்டுத்தோல்கள், பாப்பிரஸ் பட்டைகள் இயற்கைப் பதிவுகள் என பல வகைகளில் பதிவு செய்யப்பட்டன. இந்த மாதிரி புத்தகப் பதிவுகளை சேமிக்கும் இடமே நூலகம்.

இன்றைய நவீன உலகில் வாசிப்புக்கு மின்னணு ஊடகங்கள் வந்துவிட்டன. வலைத்தளம், இணையவழி நூலகம், மின்னிதழ், மின் செய்தி என ஏராளமானவை உள்ளன. இருப்பினும் இ-புக்கைவிட காகிதத்தால் ஆன புத்தகங்களே என்றைக்கும் நம் உணர்வுகளை மீட்டும் வீணையாக உள்ளது.

புத்தகத்தை தொட்டு, அதன் மணத்தை ரசித்து, சுவாசித்து, பிரித்துப் படித்து, அதன் பக்கங்களைத் தடவிப் பார்த்து படிப்பது என்பது தனி சுவையும்கூட. இதற்கு இணை எதுவுமே இல்லை. புத்தக வாசிப்பு என்பதும் கூட ஓர் கருவூல அறைக்குள் நுழைந்து, அதனை ரசித்து அனுபவித்து முத்தெடுப்பதற்கு ஒத்ததாகும். ஆயினும்கூட புத்தக வாசிப்பை துவக்க/ ஊக்குவிக்க, சில சமயம் ஒரு சூழல்/ தூண்டுதல் தேவையாயிருக்கிறது. புத்தகத்தின் தேடலுக்கும் வாசிப்பின் ருசிக்கும் புத்தக அட்டை, வடிவமைப்பு, எழுத்தாளர், எழுத்து நடை, அதன் வடிவம் என ஏதோ ஒரு காரணி அதற்கு கிரியா ஊக்கியாக அமைகிறது.

உலக புத்தக தினம்

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23ம் நாள் உலக புத்தக தினம் கொண்டாடப் படுகிறது. ஏப்ரல் 23ல் கொண்டாடுவதற்கான காரணம் பெரும்பாலோருக்குத் தெரியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவான யுனெஸ்கோ 1995ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியை உலகப் புத்தகம் மற்றும் காப்புரிமை தினம் என்று அறிவித்தது. அப்படி ஏப்ரல் 23ம் தேதியை மட்டும் குறிப்பிட்டு அறிவித்ததற்கு சில காரணங்கள் உண்டு. யுனெஸ்கோ (UNESCO) என்ற உலக கல்வி நிறுவன அமைப்பும்கூட, மக்களிடையே புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கவும், அதற்காக அதிக புத்தகங்களை வெளியிடவும் முடிவு செய்தது.

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பாதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் 1995 முதல் ஏப்ரல் 23 உலக புத்தக தினம் என்று அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் உலக நாடுகள் அனைத்துமே உலக புத்தக தினமாக கொண்டாடுவதில்லை. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டினர் மட்டும் மார்ச் முதல் வாரத்தில் ஒரு நாளை புத்தக தினமாக கொண்டாடி வருகின்றனர். 1995ம் ஆண்டே யுனெஸ்கோ அறிவித்தாலும் இந்தியாவில் 2007ம் ஆண்டில் இருந்து தான் உலக புத்தக தினம் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது

முதல் புத்தக தினம்

முதலில் புத்தக தினம் தொடங்கப்பட்டபோது, லண்டனில் பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் ஒரு பவுண்ட் மதிப்புள்ள அடையாள வில்லை தந்தனர். அதனைக் கொண்டு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சிறுவர் புத்தகங்களை வாங்கலாம். நாமும் கூட அதைப் போல குறைந்த விலையில் குழந்தைகளுக்குகாக புத்தகம் அச்சிட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

உலக புத்தக தினம் உருவான பின்னணி

படிக்கத் தெரிந்த மனிதர்கள் அனைவரும் இந்நாளில் புத்தகத்தையும், உருவாக்கியவர்களையும் மிகுந்த மரியாதை செய்கின்றனர். உலகில் பல இலக்கியவாதிகள் இந்த தினத்தில் பிறந்தும் மறைந்தும் இருக்கின்றனர். முக்கியமாக, உலகின் தலைசிறந்த சோக காவியமான லியர் அரசன், காதல் காவியம் ரோமியோ ஜுலியட்' ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ, மாக்பெத் போன்றவைகளையும், மச் அடோ அபவுட் நத்திங்   (Much Ado About Nothing)  என்ற நகைச்சுவை நாடகத்தையும் எழுதியவர் தலைசிறந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர்.

இவர்  பிறந்ததும், உலகைவிட்டு மறைந்ததும் ஏப்ரல் 23ல்தான். அதுபோலவே, 1923 ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 23 ஆம் நாள் இறந்த பிகுல்டி செர்வேண்டிசின் நினைவாகவும் புத்தக தினம் கொண்டாடுவதாக சொல்லப்படுகிறது.

1616 ஏப்ரல் 23ம்  நாள் உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்களான ஷேக்ஸ்பியர், செர்வேண்டிஸ், இன்கா கார்கிலாசோ(William Shakespeare, Miguel de Cervantes, Inca Garcilaso de la Vega ) போன்றோர் இறந்தனர்.   

மாரிஸ் டிரியூன், ஹால்டோர் லேக்சனஸ், விளாதிமிர் நபொகோவ், ஜோசப் பிலா மற்றும் மானுவல் மெஜியா (Maurice Druon, Haldor K.Laxness, Vladimir Nabokov, Josep Pla and Manuel Mejía Vallejo) போன்ற எழுத்தாளர்கள் பிறந்த நாள் ஏப்ரல் 23. இவர்களை பெருமைப்படுத்தும் வகையில், ஒரு குறியீடாக ஏப்ரல் 23யை உலகப் புத்தக தினமாகக் கொண்டாட யுனெஸ்கோ அமைப்பு முடிவு செய்தது என்றும் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் வாசிப்பின் நேசிப்பையும், ருசியையும், இன்பத்தையும் கண்டறிய வேண்டியும், அதன் மூலம் சமூக, கலாசார முன்னேற்றம் மற்றும் மனித நேய உணர்வை வென்றெடுத்து, மரியாதை செய்ய வேண்டியும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க புத்தக தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 

வாழ்க்கைப் போராட்டத்தில் வென்ற இலக்கியவாதிகள்

வில்லியம் ஷேக்ஸ்பியரும், ஜான் மில்டனும் ஆங்கில இலக்கியத்தின் இரு கண்களாகப் போற்றப்படுகின்றனர். ஆனால், இவர்களின் இளமைக் காலத்தைப் புரட்டிப் பார்த்தால், கதை வேறு மாதிரி இருக்கிறது. கல்விக் கூடத்தில் சரியாகப் போதனை பெற முடியாமல், சமூக நீதிகளும், சமூக காரணங்களும், இவர்கள் இருவரையும் ஓட ஓட விரட்டி இருக்கின்றன.

"கல்வி அனைவருக்குமானது; புத்தகம்  பொதுவானது" என துண்டு பிரசுரம் கொடுத்ததற்காக மில்டன் சிறைச்சாலையை சந்திக்க நேரிட்டது. அவருக்கு இந்த வெளி உலகைக் காண முடியவில்லை. அக உலகின் கண்கள் மட்டுமே அவருக்கு திறந்திருந்தன. இந்த நிலையிலும், கல்வி மேல், மீளாக் காதல் கொண்டவர் மில்டன். எனவே, சிறைக் கம்பிகளுக்கிடையேயும், மற்றவர் வாசிக்க கேட்டு, மேதையானார். உலகப்  புகழ் பெற்ற கவிதையான, "பாரடைஸ் லாஸ்ட் (Paradise lost) என்ற அழியா நூலை உருவாக்கினார். இது போலவேதான், வில்லியம் ஷேக்ஸ்பியரும் அரச மொழி என்று போற்றப்பட்ட "லத்தீனை" எதிர்த்து, தனது தாய் மொழியான ஆங்கிலத்தை இலக்கியத்தில் நுழைப்பதற்காகவே, பல காவியங்கள் புனைந்தவர். வாசிப்பின் லயிப்பில் மனம் ஈடுபட்டு தூக்கத்தைத் துறந்தவர். 

எழுத்தாளர் தினம் புத்தக தின வரலாறு  

ஸ்பெயினின் காட்டலோனியா (Catalonia) என்ற ஊரில் ஏப்ரல் 23 ஆம் தேதி செயின்ட் ஜார்ஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அது ரோஜாவின் தினம் என்றும் சொல்லப்படுகிறது. அன்று தன் இதயம் கவர்ந்தவர்களுக்கும், விருப்பமானவர்களுக்கும், மரியாதைக்குரிய பெரியவர்களுக்கும் புத்தகத்துடன் ரோஜாவைப் பகிர்ந்து கொண்டனர். அன்றுதான் உலக இலக்கிய தினமாக கருதப்பட்டு, ஒவ்வொரு புத்தகம் விற்கும்போதும், அதனுடன் ஒரு ரோஜாப் பூவினை,  அன்பளிப்பாகத் தந்தனராம். அன்று எல்லோரும் புத்தகம் வாங்க வேண்டுமாம்.

இப்படித்தான் புத்தக தினத்துக்கான கரு, காட்டலோனியாவில் ஏப்ரல் 23ல் உருவானது. அதுபோல நாமும் புத்தக தினத்தில் அனைவரும் புத்தகம் வாங்க வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும்.  

உலக புத்தக தினம் &காப்புரிமை தினம் கொண்டாட வேண்டும் என்பதன் வெற்றி என்பது புத்தக எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், தனியார் மற்றும் பொது நிறுவனங்கள், மனித நேயமிக்க தன்னார்வல நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவர்களால்தான். இவர்கள் அனைவரும் யுனெஸ்கோ அமைப்பை அணுகி, கேட்டுக் கொண்டதற்காகவே இது உருவாக்கப்பட்டது. மிகுந்த வெற்றியுடன் உலகப் புத்தக தினமும், காப்புரிமை தினமும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதல் புத்தகம்: குகையும் எலும்புகளும்

இன்றைய நவீன அறிவியல் உலகில் வலைத்தளமும், கைபேசிகளும், மின்னஞ்சலும், மின் ஊடகங்களும் முக்கியமாக தொலைக் காட்சியும், மக்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தை பிடுங்கி புதைத்துவிட்டன. 

எழுத்துக்களின் முதல் பதிவு, குகைச் சுவர்களிலும், இஷாங்கோ (Ishango) எலும்புகளிலும் தான். இவை  சுமார் 37,000 ஆண்டுகளுக்கு முன்பே, நிகழ்ந்து விட்டன. பின்னர் களிமண் கலவைகளிலும், பாப்பிரஸ் மரப்பட்டைகளிலும், ஆட்டின் தோலிலும் எழுதப்பட்டன. அவை அனைத்துமே புத்தகங்கள்தான்; வரலாற்றுப் பதிவுகள்தான்.

"மனிதனின் கண்டுபிடிப்புகளில் ஆகச் சிறந்தது புத்தகமே" என 20 ம்  நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  கூறியுள்ளார். 

புத்தக  உருவாக்கம்

சக்கரம் சுழலத்  துவங்கிய பின்னர்தான், மனித தொழில் நுட்பத்தின் பரிணாமத்தின் முதல் அத்தியாயம் துவங்கியது. ஆனால் அதற்கும்  முன்பே, பலப் பல வடிவங்களில்  மனிதன் தன் கருத்துகளை, எண்ணங்களை பதிவு செய்யத் துவங்கிவிட்டான். இவை சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னால்தான்.

உலகின் முதல் நூலகம்

இதுவரை கண்டறிந்ததில் உலகின் மிகப் பழமையான முதல் நூலகம் சிரியாவிலுள்ள எப்லா (Ebla) என்ற நகரில்தான் இருந்திருக்கிறது. அங்கு குயூநிபாரம் எழுத்துக்களால் எழுதப்பட்ட சுமார் 20,000 சுட்ட களிமண் பலகைகள் கிடைத்திருக்கின்றன. அவற்றின் வயது சுமார் கி.மு. 2250 ஆண்டுகள். அவை சுமேரிய எழுத்து வடிவத்தில் எப்லைட் மொழியில் (Eblaite language)செமிடிக் மற்றும் அக்காடியன் மொழியில் எழுதப்பட்டவை. இப்போது அவை சிரியாவின் அலெப்போ,டாமாஸ்கஸ் & இட்லிப் அருங்காட்சியகத்தில் உள்ளன.

முதல் புத்தகம்/முதல் பேப்பர் பணம்  

பேப்பர் பாரம்பரியமாக சீனாவில் காய்லூன் காலத்தில் கி.பி. 105 ல் உருவானது.  மல்பரி இலை மற்றும் வேறு சில சணல் கழிவுகளைக் கொண்டு பேப்பர் தயாரித்தனர். பின் கி.பி. 3ம் நூற்றாண்டில்தான் இது எழுத பயன்பட்டது. அங்குதான் முதன்முதலில் கி.பி. 1000ல் முதல் பேப்பர் பணத்தை சீன "சங்" வம்சம் அச்சடித்தது.  9ம் நூற்றாண்டில், டையமண்ட் சூத்திரங்கள்  என்ற 868  சூத்திரங்கள் அடங்கிய முதல் அச்சுப் புத்தகம் உருவாக்கப்பட்டது. ஆனால் இவைஎல்லாம் உருவாக்கப்படுவதற்கு முன், நம் மூதாதையர்கள் உலகில் நடந்த அனைத்தையும் பாரம்பரியமாக வாய் வழி மரபாகவே தன் சந்ததிகளுக்குக் கதையாகச் சொல்லி வந்தனர். நம் மூதாதையர்கள் சிறந்த கதை சொல்லிகள். அவர்களின் கலை, கலாசாரம், வாழ்நிலை என பல வரலாற்றுக் கதைகளைச் சுமந்த பதிவே புத்தக வாகனமும், சாதனமும்.   

உலகின் முதல் பதிவு 

குகைகளில் எழுதத் தொடங்கும் முன்பே, எலும்புகளில் முதல் எழுத்தை பதிவு செய்துவிட்டனர். முதன் முதலில் இதைச் செய்தது ஒரு பெண் என தற்போது தெரிய வந்துள்ளது. 

பபூன் குரங்கின் கால் எலும்பில்தான் அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. பெண்கள், மாதத்தின் நாட்களை குறியீடாக அந்த எலும்பில் தனது மாதவிடாயை/கருக்காலத்தைக் கணக்கில்கொள்ள வானில் நிலவு வந்து போகும் காலக்கெடுவுடன் தொடர்புடையதாக குறித்து வைத்துள்ளனர்.

ஆப்பிரிக்காவின் "லேபோம்பா" (Lebombaa) என்ற இடத்தில் குறியீடு செய்துள்ள எலும்பு லேபோம்பா எலும்பு என்றே அழைக்கப்பட்டது. 

அதன் வயது சுமார் 37,000 ஆண்டுகள். இந்த எலும்பில் 29 கோடுகள்/பட்டைகள் உள்ளன. அதுபோலவே இஷாங்கோ என்ற இடத்தில் கிடைத்த எலும்பின் பெயர்" இஷாங்கோ எலும்பு". எலும்பின் நுனியில் அதனை எழுதப் பயன்படுத்திய படிகக் குச்சியும் உள்ளது. இதுவும் ஆப்பிரிக்க எரிமலைப் படிவுகளில் கிடைத்ததுதான். இதன் வயது 20,000 - 25,000 ஆண்டுகள். இதில் 3 வரிசைகளில் எண்கள் பற்றி "டாலி" (Tally) குறியீட்டில் பதிவு செய்துள்ளனர் அக்கால பெண்கள். இதில் 6 மாத சந்திர காலண்டர் பொறிக்கப்பட்டுள்ளது. 

காதிதமும் அச்சும்

காகிதத்தை கண்டறிந்தவர்கள் சீனர்கள். அதேபோல அச்சிடும் வழிமுறையை முதன் முதலில் கண்டறிந்தவர்களும் சீனர்களே. கி.பி 105 ஆம் ஆண்டு சீன நாட்டில் ஷீயான் ஸிங் என்ற பேரரசனின் ஆட்சியின்போது சாய்லன் என்பவரால் காகிதம் என்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தக் காகிதம் கோமகன் காகிதம் என்று அழைக்கப்பட்டது. 1320ம் ஆண்டில் அச்சுக்கலைக்குத் தாயகமாக விளங்கும் ஜெர்மனியின் மெயின்ஸ் நகரத்தில் காகிதம் தயாரிக்கும் ஆலைகள் முதன்முதலில் உருவானது. இந்தியாவில் முதன்முதலாகக் காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டது தமிழ்நாட்டில் மட்டுமே கி.பி. 1715ல் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை நகரமான தரங்கம்பாடிக்கு அருகே உள்ள பொறையாறு என்ற இடத்தில் பார்த்தலோமியா சீகன்பால்கு என்பவர் கையினால் செய்யப்படும் காகிதத் தொழிற்சாலையை நிறுவியுள்ளார்

புத்தகங்களை காக்க..

எலும்பில் எழுதிய மனிதன் மலையின் குகைகளில் எழுதினான். பிறகு பாப்பிரஸ் மரப்பட்டைகள், ஆடு மற்றும் கன்றுக்குட்டியின் தோல்கள், மரப்பட்டைகள், களிமண், மண் ஓடுகள் மற்றும் பேப்பர்கள் என எழுத்தின் பதிவு கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமம் பெற்றது. இன்று மின்னஞ்சலில், வலைதளத்தில் மாறியுள்ளது. இதன்மூலம் எழுத்துகள் பதித்த புத்தகம் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் நம்மிடையே பிறந்துள்ளது. புத்தகங்களின் சாம்ராஜ்யம் எல்லையும் காலமும் கடந்தது. உலகத்தினர் அனைவருக்கும் சொந்தமானது. 

நூலகப் பிறப்பு

அலெக்சாண்டிரியா நூலகமும்தாலமியும்

எகிப்தின் அலெக்சாண்டிரியாவில், கி.மு. 247ல் உலகின் மிகப் பெரிய நூலகம் இருந்தது. சுமார் 7,00,000க்கும் மேற்பட்ட ஆட்டுத்தோல் புத்தகங்கள் அங்கு  இருந்தன. 5,000 மாணவர்கள் படித்தனர்.

இந்தியாவில் கி.பி. 2 ம் நூற்றாண்டில் ஆந்திராவில் நாகர்ஜுன அரசன் உருவாக்கிய நூலகம் "நாகார்ஜுன வித்யா பீடம்". இந்த நூலகத்தில் பல விலங்குகளின் வடிவில் 5 மாடிகளும், 1500 அறைகளும் இருந்தன. கி.பி. 7ம் நூற்றாண்டில் 68,700 பனை ஓலை நூல்களும், 36,058 பாப்பிரஸ் சுருள் புத்தகங்களும் இருந்தன. 

நாம் பயன்படுத்தும் காகிதத்தை சீனர்கள் கண்டுபிடித்தாலும், புத்தக புரட்சியை செய்தவர்கள் அரேபியர்கள்தான். முகம்மதியர்களிடமிருந்தே பேப்பர் புத்தக பரிமாணம் துவங்கியது. 8ம் நூற்றாண்டில் மொராக்கோவில் 100 புத்தகக் கடைகள் இருந்தன.

இந்தியாவின் முதல் புத்தகம் - முதல் பத்திரிக்கை

1556ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து கடல் வழியாக கப்பல்களில் அச்சு இயந்திரங்கள் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு சென்றனர் போர்ச்சுக்கீசியர்கள். அப்போது ஏற்பட்ட இயற்கை சீற்றம் காரணமாக கப்பல்கள் வழிமாறி இந்தியாவின் மேற்கு கடற்கரை நகரமான கோவாவிற்கு வந்து சேர்ந்துள்ளன.

இதைத்தொடர்ந்து கேரளத்தின் கொல்லம், அம்பழக்காடு, புன்னைக்காயல் ஆகிய நகரங்களில் அச்சகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. கொல்லத்தில் இந்திய மொழிகளுக்காக உருவாக்கப்பட்ட அச்சு எழுத்துக்களைப் பயன்படுத்தி கிறிஸ்துவ வேத நூலான பைபிள் முதன்முதலாக அச்சிடப்பட்டது. அவற்றில் 'தம்பிரான் வணக்கம்' என்ற தலைப்பில் தமிழ் மொழியில் கிடைத்துள்ள புத்தகத்தின் மூலம் அதுவே இந்திய மொழிகளில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம் ஆகும். இந்தியாவின் முதல் பத்திரிக்கையான 'பெங்கால் கெஸட்' என்பது 1780ம் ஆண்டு கொல்கத்தாவில் வார இதழாக ஆங்கில மொழியில் வெளியானது.

கருத்துக்களின் விதை நூலகம்

தமிழ்நாட்டு நூலக வரலாற்றின் பிதாமன் இராமாமிர்தம் ரங்கநாதன். இவர்தான் "சென்னை மாநிலத்தின் நூலகத் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். 1928 ஜனவரியில் சென்னை நூலக சங்கம் ரங்கநாதனால் உருவாக்கப்பட்டது. 1931ல், அக்டோபர் 21 ம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார்குடிக்கு அருகிலுள்ள மேலவாசலில் நடமாடும் நூலக வண்டிப் பயணம் தொடங்கியது. 72 கிராமங்களில் 275 பயணங்கள் இந்த வண்டி மூலம் நடத்தப்பட்டது. 3,782 புத்தகங்கள், 20,000 தடவைகளுக்கு மேல், மக்களுக்குக் கொடுத்து திரும்பப் பெறப்பட்டன. ஆனால் இன்று அரசுப் பள்ளிகளில் கூட நூலகம் இல்லாத நிலைமை.

அறிவொளி நூலக இயக்கம்

1990களில்  இந்தியா முழுவதும் அறிவொளி இயக்கம் என்ற மாபெரும் கல்வி இயக்கம் வந்தது. கிராமத்து மக்களைப் படிக்க வைக்க, அறிவொளித் தொண்டர்கள் மாட்டுவண்டிகளிலும், சைக்கிளிலும் ஊர் ஊராக  புத்தகம் எடுத்துச் சென்று விற்பனை செய்தனர். ஊர்க்கூட்டம் போட்டு புத்தகம் வாசிக்க கற்றுக் கொடுத்தனர். இப்போதும் கூட அறிவியல் இயக்க உறுப்பினர்கள் உலக புத்தக வாரத்தின்போது, ஊர் ஊராக சைக்கிளில் தெருமுனைகளில் புத்தகம் எடுத்துச் சென்று புத்தக விற்பனை செய்கின்றனர். வாசிப்பின் நேசிப்பை உணர, ஊர்களில் வாசிப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து, புத்தக வாசிப்பும்  செய்கின்றனர்.

மனித நாகரிக வளர்ச்சியின் பதிவு நூலகமே

"புத்தகங்கள் வெறும் உயிரற்ற காகிதங்களின் குவியல் அல்ல. அவை அலமாரியில் இருந்து நம்மை வழி நடத்தும் உயிரோடு இருக்கும் மனிதங்கள்" என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் கில்பர் ஹையாத். மனிதன் வரலாற்றுக்குரியவன். நேற்று, இன்று, நாளை என்ற மூன்றும் மனிதனுக்குரியவை. சமூகத்தில் நிலவும் கருத்தாக்கங்கள், நம்பிக்கைகள், சந்தோஷங்கள், சவால்கள், மதிப்பீடுகள், நுணுக்கமான கருத்துக்கள் அனைத்தும் கல்விப் பொருளாக, புத்தகங்களாக மாற வேண்டும். காலத்தின் நிகழ்வுகள், சரியான முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். அத்தகைய உள்ளடக்கம் கொண்ட கல்விதான் மக்களை விடுதலை செய்யும்.

புத்தகங்கள் அறிவின் தூதுவர்கள்

  • ஹுமாயூன் உல்லாசபுரியாக இருந்த ஷேர் மண்டல் மாளிகையை அரிய நூல்களைக் கொண்ட நூலகமாக மாற்றினார். 
  • இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடி  தனது 23 வது வயதில் தூக்கிலிடப்பட்ட மாவீரன் பகத் சிங் தூக்குக்கயிறு கழுத்தில் அரங்கேறும் வரை படித்துக்கொண்டே இருந்தான். 
  • ஒரு புத்தகத்தைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குத் தருபவனே  மனித குலத்தின் உண்மையான விடிவெள்ளி  -ஜான்  மில்டன் . 
  • ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்குச் சமம் - சர் ஐசக் நியூட்டன். 
  • துப்பாக்கிகளைவிட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள் -மார்ட்டின் லூதர் கிங். 
  • ஆட்சி அதிகாரத்தையே உலுக்கிவிடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு. 
  • மனிதன் இருப்பு மௌனத்தால் கட்டப் படவில்லை. ! அவன் வார்த்தகளால், செயல்களால், எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கை களால் கட்டமைக்கப் படுகின்றான்-பாவ்லோ பிரையர்      
  • உலக நாயகனான சார்லி சாப்ளின், ஒவ்வொரு புதிய படம் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதும், அதன் முன்பணத்தில் முதல் 100 டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்.
  • ஒரு புத்தகத்தை திறக்கும்போது, உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம்- தோழர் சிங்காரவேலர்.
  • வேறு எங்கோ ஒரு அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காக கண்டுபிடிக்கப்பட்டது புத்தகம் மட்டுமே -மார்க் ட்வைன் 
  • ஒரு நல்ல வாசகனைக் கொண்டே, ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காட்டப் படுகிறது - ஜார்ஜ் பெர்னாட்ஷா 
  • ஒருவர் மூளைக்கும் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை  மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள்தான் புத்தகம் -ஜேம்ஸ் ரஸ்ஸல்    
  • ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள்; அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள் - அரேபியப் பழமொழி
  • என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள், இங்கே ஒரு புத்தகம் உறங்குகிறது என்று - பெட்ரண்ட்  ரஸ்ஸல் 
  • புத்தகங்களும், நூலகங்களும் இல்லாத நாடு சிறைச் சாலைக்கு ஒப்பாகும் -நெப்போலியன் 
  • மொத்த இறந்த காலத்தின் ஆன்மாவும் வசிக்குமிடம் புத்தகம் -தாமஸ் கார்லைல்.
  • வாசிப்பின் வாசங்களை குழந்தைகளுக்குத் திறந்து கொடுக்கத் தெரிந்த பெற்றோரே வரம் பெற்றோர்
  • ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது - பைபிள் 

எனவே, அனைவரும் மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள். குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் ,மற்றும்  உறவினர்கள் அனைவருக்கும் இன்று புத்தகங்கள் பரிசளியுங்கள்.  

உளவியல் வல்லுனர்கள் குழந்தைகளுக்குப் பேசத் தெரியாவிட்டாலும்கூட புத்தகம் படித்துக் கட்ட வேண்டும் என்று கூறுகின்றனர். அதனால் அவர்களின் மூளை வளர்ச்சியும், அறிவுத்திறனும், முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

வாசிப்பின் பயன்கள்

  • மூளை இணைப்பை மேம்படுத்துகிறது.
  • உங்கள் சொல்லகராதி மற்றும் புரிதலை அதிகரிக்கிறது.
  • மற்றவர்களுடன் பரிவு கொள்ள உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
  • தூக்கத்தின் தயார் நிலைக்கு உதவுகிறது.
  • மன அழுத்தத்தைக் குறைக்கிறது. 
  • ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு குறைகிறது.
  • மனச்சோர்வு அறிகுறிகளுடன் போராடுகிறது.
  • உங்கள் வயதில் அறிவாற்றல் வீழ்ச்சியைத் தடுக்கிறது.
  • நீண்ட ஆயுளுக்கு பங்களிக்கிறது.

நாம் உலகப் புத்தக தினத்தன்று குழந்தைகளையும், பெரியவர்களையும் ஒன்றாகக் கூடி புத்தகம் படிக்க ஏற்பாடு செய்வோம்.  

"புத்தகம்தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்.!"

புத்தகம் பேசுது, புத்தகம் பேசுது,
புத்தகம் பேசுது..
உலகை, மனிதரை,
இன்பத்தை, துன்பத்தை  
அழகியமலரை, அணுகுண்டை,
வெற்றியை, தோல்வியை
தேசத்தை, நாசத்தை..
புத்தகம் பேசுது,புத்தகம் பேசுது,
புத்தகம் பேசுது.. (அறிவியல் இயக்கப் பாடல்)

2021க்கான உலக புத்தக தின கரு.. "கதைகளைப் பகிர்வோம்"

 [கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்

மேனாள் மாநிலத் தலைவர்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com