இதற்கொரு முடிவே கிடையாதா?

மேற்கு வங்கத்தில் கீதாஞ்சலி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏழை - எளியவர்களுக்கு இலவசமாக வீடுகள் வழங்கப்படுகின்றன

மேற்கு வங்கத்தில் கீதாஞ்சலி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏழை - எளியவர்களுக்கு இலவசமாக வீடுகள் வழங்கப்படுகின்றன. அந்த மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் இதற்காக விண்ணப்பித்திருந்த பெண்மணி ஒருவரிடமிருந்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் வீடு ஒதுக்கீடு செய்வதாகக் கூறி ரூ.7,000 கையூட்டு பெற்றிருந்தார். தனக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், தான் கொடுத்த பணத்தை அந்த அடித்தட்டுப் பெண்மணி திருப்பிக் கேட்க முற்பட்டபோது ஆத்திரமடைந்த பஞ்சாயத்து உறுப்பினரும், அவரது அடியாட்களும் அந்தப் பெண்மணியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.
 இந்தச் சம்பவம் தேசிய மகளிர் நல ஆணையம் வரையில் எடுத்துச் செல்லப்பட்டு மேற்கு வங்கக் காவல்துறை தலைவர் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது. மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை, கையூட்டுப் பெறுவதும், பணத்தைத் திருப்பிக் கேட்டால் மிரட்டுவதும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் புதிதொன்றுமல்ல. இந்த கையூட்டு "கட் மணி' என்று பரவலாகவே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
 ஒவ்வொரு திட்டத்திற்கும் அதற்கான கையூட்டுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. திட்டங்களைப் பொருத்து ரூ.200 முதல் ரூ.25,000 வரை திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களால் "கட் மணி' வசூலிக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அதீத வளர்ச்சிக்கு பொதுமக்கள் சார்பில் இந்தப் பிரச்னையை அவர்கள் முன்னெடுத்ததுதான் காரணம்.
 மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் "கட் மணி' பிரச்னை பாஜகவால் கையிலெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சித் தொண்டர்கள் உடனடியாக அவர்கள் வாங்கியிருக்கும் கையூட்டுப் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருக்கிறார். அடுத்த ஆண்டில் உள்ளாட்சித் தேர்தலும், 2021-இல் சட்டப்பேரவைக்கான தேர்தலும் வர இருக்கும் நிலையில் "கட் மணி' பிரச்னை திரிணமூல் காங்கிரûஸ அச்சுறுத்தியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
 ஜல்பைகுரி மாவட்டத்தில் நடந்திருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் "கட் மணி' பிரச்னையை மட்டுமல்லாமல், சாதாரண குடிமகனின் உரிமை, அரசியல்வாதிகளின் அத்துமீறல், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலைமை என்று பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. அரசியல் காரணங்களுக்காக அந்தப் பெண்மணிக்கு நீதி கிடைக்காமல் போனால், மேற்கு வங்க முதல்வராக பெண்மணி ஒருவர் இருப்பதில் அர்த்தமேயில்லை.
 மேற்கு வங்கத்தில் காணப்படும் "கட் மணி' பிரச்னை, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும் பிரச்னை என்பதுதான் நிஜம். வளர்ச்சிப் பணிகளில் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதில் இருந்து கையூட்டு பெறாமல் எந்தவொரு பணியும், எந்தவொரு மாநிலத்திலும் நடைபெறுவதில்லை. எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் ஒருசிலரின் ஆதாயத்துக்காக நிர்வாக வழிமுறைகள் திருத்தப்பட்டு கையூட்டு உறுதிப்படுத்தப்படுகிறது. அரசியல் கட்சிகள் ஆட்சி அமைக்க விரும்புவதே கையூட்டால் பயன் பெறலாம் என்பதற்காகத்தான்.
 மக்கள் நலத் திட்டங்களில் பயனாளிகளை அடையாளம் காண்பதிலிருந்து அதற்கான பொருள்களை வாங்குவது, விநியோகம் செய்வது என்று எல்லா தளத்திலும் "கட் மணி' என்பது வெவ்வேறு விதத்தில் இல்லாமல் இல்லை.
 நூறு நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பது, விழலுக்கு இறைத்த நீராக மக்களின் வரிப் பணம் வீணாகும் திட்டம். பெயர்தான் நூறு நாள்களே தவிர, இந்தியப் பொருளாதார வளர்ச்சி இதழின் ஆய்வின்படி, ஆண்டொன்றுக்கு சராசரியாக 20.23 நாள்கள்தான் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 21.29% அடித்தட்டு விவசாயக் குடும்பங்கள் இதனால் எந்தப் பயனும் அடைவதில்லை.
 நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பயனாளிகளான எழுதப் படிக்கத் தெரியாத அடித்தட்டு மக்கள் ரூ.20 முதல் ரூ.60 வரை பதிவு செய்வதற்கு கையூட்டுத் தர வேண்டியிருக்கிறது. 40.83% பயனாளிகளின் வேலை அட்டையை பஞ்சாயத்து உறுப்பினர்களும், அவர்களின் உதவியாளர்களும்தான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அட்டைகளேகூட பெரும் விவசாயிகளின் பெயர்களில் பதிவு செய்வதாகக் கூறப்படுகிறது.
 தெலங்கானாவில் வருவாய் அதிகாரி ஒருவர் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது வீட்டில் ரூ.93.5 லட்சம் ரொக்கமும், 400 கிராம் தங்கமும் கண்டெடுக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநிலத்தின் சிறந்த வட்டாட்சியர் என்று கெளரவிக்கப்பட்ட அந்தப் பெண் அதிகாரியின் காலில் விழுந்து வேண்டிக்கொண்டால்தான் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான வேலை அட்டை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த அதிகாரி குறித்த விடியோ காட்சிகள் கட்செவி அஞ்சலில் பரவலாகவே காணப்படுகின்றன.
 அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கையூட்டு என்பது எந்த ஒரு மாநிலத்துக்கோ, கட்சிக்கோ மட்டுமேயானதாக இல்லை. வரிப் பணத்தில் பெரும் பகுதி அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கும், அரசு நிர்வாகத்தை நடத்துவதற்கும் செலவு செய்யப்படுகிறது என்றால், வளர்ச்சிப் பணிகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் எஞ்சிய தொகையின் கணிசமான பகுதி கையூட்டாக மடைமாற்றம் செய்யப்பட்டு விடுகிறது. இதனால் அரசின் நிதிச்சுமை அதிகரித்து, திட்ட மதிப்பீடு அதிகரித்து, மொத்தத்தில் வளர்ச்சி தடைபடுகிறது.
 கையூட்டின் ராட்சஸப் பிடியிலிருந்து இந்தியாவுக்கு விடிவு காலம்தான் எப்போது?
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com