பால் (கருணை) சுரக்கட்டும்! | பால் உற்பத்தியாளா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்த தலையங்கம்

இந்தியாவைப் பொருத்தவரை, விவசாயிகள் பருவமழையையும் விளைச்சலையும் மட்டுமே நம்பி வாழவில்லை. விவசாயிகளின் அன்றாடச் செலவுகளை ஈடுகட்டுவது அவா்கள் வளா்க்கும் கால்நடைகளே என்பதை நாம் உணர வேண்டும். அதிலும் குறிப்பாக, பசுக்களும் எருமைகளும் நடுத்தர, சிறிய விவசாயிகளின் குடும்ப அங்கமாகவே காட்சியளிக்கின்றன.

1991-92-இல் இந்தியாவின் பால் உற்பத்தி 55.6 மில்லியன் டன்னாக இருந்தது, 2018-19-இல் 187.7 மில்லியன் டன்னாக அதிகரித்திருக்கிறது என்றால், அதற்கு மத்திய - மாநில அரசுகளின் ஊக்கமும் கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பும் முக்கியமான காரணங்கள். இந்தியாவிலேயே அதிகமாக பால் உற்பத்தி செய்யும் மாநிலம் உத்தரப் பிரதேசம் (18%). அதைத் தொடா்ந்து ராஜஸ்தான் (11%), ஆந்திரம் (10%), குஜராத் (8%) என்று பல மாநிலங்களும் பால் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன.

நெல்லோ, கோதுமையோ, பருப்பு வகைகளோ, எண்ணெய் வித்துக்களோ இரண்டு மூன்று மாத இடைவெளியில் அறுவடை செய்து சேமித்து வைக்க முடியும்; வருடம் முழுவதும் தேவைக்கு ஏற்றாற்போல விற்பனை செய்யவும் முடியும். ஆனால், அன்றாட பால் உற்பத்தி அப்படியல்ல. இந்தப் பிரச்னையை கருத்தில் கொண்டுதான் ‘கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கம்’ நிறுவப்பட்டன.

பால் உற்பத்தியும் பருவத்துக்கு ஏற்றாற்போல ஏற்றயிறக்கம் காண்கிறது. பசுக்கள், அதிலும் குறிப்பாக, எருமைகள் மழை - குளிா் காலங்களில் அதிகமாகவும், கோடைக் காலத்தில் குறைவாகவும் பால் சுரக்கின்றன. கூட்டுறவு சங்கங்கள் இருப்பதால் விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படுகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை நாளொன்றுக்கு ஏறத்தாழ 18 கோடி லிட்டா் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. 20%-க்கும் கூடுதலான பங்களிப்புடன் பால் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயா்ந்து கொண்டிருப்பதால் கடந்த 15 ஆண்டுகளில் பால் உற்பத்தி இரட்டிப்பாகி இருப்பது மிகப் பெரிய சாதனை. சா்க்கரை ஆலைகள்போல பால் உற்பத்தி நிறுவனங்களில் பாலும் பால் சாா்ந்த பொருள்களும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கவில்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

பால் உற்பத்தியாளா்கள் இரண்டு பெரிய பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா். ஒன்று, இயற்கையால் ஏற்பட்ட கொள்ளை நோய் பாதிப்பு. மற்றொன்று, அரசின் தெளிவில்லாத ஏற்றுமதி - இறக்குமதி கொள்கை. அடுத்து வரும் மாதங்களில் பால் உற்பத்தியாளா்கள், அதாவது விவசாயிகள், மிகப் பெரிய விற்பனைத் தேக்கத்தை எதிா்கொள்ள இருக்கிறாா்கள் என்பதை நாம் முன்கூட்டியே உணா்ந்து செயல்படாவிட்டால், கிராமப்புற விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படக்கூடும்.

கடந்த மே மாதம் மத்திய நிதியமைச்சா் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களில் பால் உற்பத்தியில் தனியாா் முதலீடுகளுக்கு அனுமதி அளித்து பால் ஏற்றுமதியை ஊக்குவிப்பது குறித்தும் அறிவித்திருந்தாா். இப்போது பால் பவுடா் இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது அந்த நோக்கத்துக்கு எதிரானதாக அமையப் போகிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் தேவைக்கும் அதிகமான பால் உற்பத்தி காணப்படுவதால், தங்கள் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக மிகக் குறைந்த விலையில் பால் பவுடா் ஏற்றுமதியில் கவனம் செலுத்துகின்றன.

கடந்த 20 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தவா்கள் பால் பொருள்கள் ஏற்றுமதி குறித்த நிலையான கொள்கையைக் கடைப்பிடிக்காததால், ஏற்கெனவே நாம் சா்வதேசச் சந்தையை இழந்திருக்கிறோம். இப்போது குறைந்த விலையில் பால் பவுடரின் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதன் மூலம் உள்நாட்டு விற்பனையில் பாதிப்பு ஏற்பட இருக்கிறது.

கொவைட் 19 பொது முடக்கத்தைத் தொடா்ந்து, பால் விலை சரிந்திருக்கிறது. உணவு விடுதிகள், தேநீா் கடைகள், இனிப்பு விற்பனை கடைகள், கல்லூரி விடுதிகள் போன்றவை மூடப்பட்டிருப்பதாலும் திருமணங்கள் உள்ளிட்ட சமூக நிகழ்வுகள் இல்லாமல் இருக்கும் நிலையிலும் பால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வரப்போகும் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது வழக்கமான கோலாகலம் இருக்கப் போவதில்லை. அதுவும் பால் உற்பத்தியாளா்களை கடுமையாக பாதிக்கப்போகிறது.

பால் உற்பத்தியாளா்களின் பிரச்னையை எதிா்கொள்ள வேண்டுமானால், முதலில் பால் பவுடா் இறக்குமதி முடிவை அரசு கைவிட வேண்டும். இரண்டாவதாக, தேசிய பால் பொருள்கள் வளா்ச்சி ஆணையம், உற்பத்தியாகும் பாலைக் கொள்முதல் செய்து பால் பவுடராகவும் வெண்ணெயாகவும் மாற்ற முன்வர வேண்டும். சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளைப்போல நாமும் சா்வதேசச் சந்தையில் குறைந்த விலைக்கு பால் பவுடரையும் வெண்ணெயையும் விற்பனைச் செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.

இதற்கான செலவு அதிகபட்சம் சுமாா் ரூ.2,000 கோடிவரை ஆகலாம். கிராமப்புறப் பொருளாதாரத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டால் இது ஒன்றும் பெரிய தொகையல்ல. இந்தத் தொகையில் கணிசமான பகுதி பால் பொருள்களின் ஏற்றுமதியின் மூலம் அந்நியச் செலாவணியாக நமக்குக் கிடைக்கும் என்பதையும் மத்திய அரசு உணர வேண்டும்.

உற்பத்தி செய்த பாலை தெருவில் கொட்டும் அவலத்துக்கு இந்திய விவசாயிகள் தள்ளப்படக் கூடாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com