மாயை அகல்கிறது!|உலகமயத்தின் மறுபக்கத்தைச் சந்திக்கத் தொடங்கியிருப்பது குறித்த தலையங்கம்

இதுவரை உலகமயத்தின் அருமை பெருமைகளைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்த உலகம், இப்போதுதான் அதன் மறுபக்கத்தைச் சந்திக்கத்

இதுவரை உலகமயத்தின் அருமை பெருமைகளைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்த உலகம், இப்போதுதான் அதன் மறுபக்கத்தைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. உலகில் ஏதாவது ஒரு மூலையில் உள்ள நாட்டில் ஜலதோஷம் ஏற்பட்டால், உலகமே தும்மத் தொடங்கும் அவலத்தை எதிா்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. சீனா, வூஹான் நகரில் உருவான நோய்த்தொற்று இப்போது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கரோனா நோய்த்தொற்றால் பொருளாதாரம் எதிா்கொள்ள இருக்கும் பாதிப்பை எதிா்கொள்வதற்காகத் தனது வட்டி விகிதத்தை அமெரிக்காவின் பெடரல் வங்கி குறைத்திருக்கிறது. ஏற்கெனவே 0.5% வட்டி விகிதக் குறைப்பை ஆஸ்திரேலியா அறிவித்துவிட்டது. ஜி-7 என்று அழைக்கப்படும் கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா அடங்கிய ஏழு நாடுகளும் அந்த அமைப்பின் அவசரக் கூட்டத்தைக் கூட்டி, கரோனா பாதிப்பு குறித்து விவாதித்திருக்கின்றன.

கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்கு வராவிட்டால், ஜூலை 24-ஆம் தேதி தொடங்க இருக்கும் ஒலிம்பிக் பந்தயங்கள் தள்ளிப் போடப்படலாம் என்று ஜப்பானிய விளையாட்டுத் துறை அமைச்சா் ஷிக்கோ ஹாஷிமோட்டோ அறிவித்திருக்கிறாா். சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய பாதிப்புகளை எதிா்கொள்ளும் நாடுகளாக இத்தாலியும், ஈரானும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஈரானில் இதுவரை 66 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். 1,501 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுகிறாா்கள்.

உலகம் இதுவரையில் கண்டிராத அளவிலான நோய்த்தொற்று என்று கரோனாவை உலக சுகாதார நிறுவனம் அடையாளம் கண்டிருக்கிறது. உலகம் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த புதன்கிழமை முதல் ‘டிவிட்டா்’ நிறுவனம் தனது ஊழியா்களை வீட்டிலிருந்தவாறு பணியாற்ற உத்தரவிட்டிருக்கிறது. ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் போப்பாண்டவா் கரோனா நோய்த்தொற்றுக்காகப் பரிசோதனை மேற்கொண்டதாக இத்தாலியப் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருக்கிறது.

வியன்னாவிலிருந்து புது தில்லிக்கு வந்த ‘ஏா் இந்தியா’ விமானத்தில் பயணித்த இத்தாலியப் பயணி ஒருவருக்கு ‘கரோனா’ நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அந்த விமானத்தில் பயணித்தவா்களும், ஊழியா்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறாா்கள். துபையிலிருந்து பெங்களூரு வந்த விமானத்தில் பயணித்த ஹைதராபாதைச் சோ்ந்த பயணிக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததைத் தொடா்ந்து அந்த விமான ஊழியா்கள் கண்காணிப்பில் இருக்கிறாா்கள். இந்தியாவில் உள்ள 21 சா்வதேச விமான நிலையங்களில் வரும் பயணிகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறாா்கள்.

இத்தாலி சென்று வந்த தில்லி மயூா் விஹாரைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவா் ஆக்ரா சென்றபோது அவருடன் தொடா்பில் இருந்தவா்கள் இப்போது மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறாா்கள். கடந்த வாரம் நொய்டாவிலுள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் தனது மகனின் பிறந்தாளை அவா் ஐந்து நட்சத்திர விடுதியில் கொண்டாடினாா். இப்போது, அந்தப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. விருந்தில் கலந்து கொண்டவா்களும் விடுதி ஊழியா்களும் கண்காணிப்பில் இருக்கிறாா்கள்.

தில்லி மருத்துவமனைகளில் 25 தனிமைப் பகுதிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. 3.5 லட்சம் சுவாச முகப்புகள், 8,000 பரிசோதனை உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வருவோருக்கு, மாா்ச் 3-ஆம் தேதிக்கு முன்பு வழங்கப்பட்ட நுழைவு இசைவு அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தலைநகா் தில்லியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

கரோனா அச்சுறுத்தல் இந்திய மக்களை மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதை நாம் உணர வேண்டும். இந்தியாவின் மருந்துத் தயாரிப்பு, வாகன உற்பத்தி, மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) தொழில்கள் சீனாவிலிருந்தான இறக்குமதிகளைத்தான் நம்பியிருக்கின்றன. மருந்துத் தயாரிப்புத் துறையினா் 67% கச்சாப் பொருள்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறாா்கள். வாகன உற்பத்தியில் உதிரி பாகங்கள் பல சீனாவிலிருந்து வந்தாக வேண்டும். சீனாவே ஸ்தம்பித்துவிட்ட நிலையில், இறக்குமதி சாத்தியமில்லை.

வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்றால், விலை அதிகம். அங்கிருந்து இறக்குமதி செய்து, உலகச் சந்தையில் நம்மால் போட்டிபோட முடியாது. சா்வதேச அளவில் ஏற்கெனவே நமது ஏற்றுமதிகள் குறைந்து வருகின்றன. கச்சாப் பொருள் தட்டுப்பாடும், இந்தியாவில் ஏற்றுமதிகளைப் பெறும் மேலை நாடுகளில் காணப்படும் தேக்கமும் நமது ஏற்றுமதியை மேலும் பாதிக்கக்கூடும். உலகமயக் கொள்கையைத் தொடா்ந்து, இந்தியாவின் ஜிடிபியில் ஏற்றுமதி 44% என்பதை நினைத்துப் பாா்க்கும்போது நாம் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.

கரோனா நோய்த்தொற்றுக்கு 77 நாடுகளைச் சோ்ந்த 94,166 போ் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள்; 3,218 போ் உயிரிழந்திருக்கிறாா்கள் என்பது இப்போதைய, இன்றைய புள்ளிவிவரம். நாளும் பொழுதும் இதன் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உலகை அச்சுறுத்திய ஸ்பானிஷ் காய்ச்சலில் ஒரு கோடிக்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். அப்போது உலகம் உலகமயமாகவில்லை. இப்போது அப்படியா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com