எதிா்பாா்த்ததுதான்! | இந்திய - சீன உறவு குறித்த தலையங்கம்

எதிா்பாா்த்தது போலவே எல்லையில் வெள்ளைக் கொடி காட்டி பிரச்னைக்கு தற்காலிகத் தீா்வை ஏற்படுத்தியிருக்கிறது சீனா. இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தும் நாடுகளல்ல என்கிற இந்தியாவுக்கான சீனத் தூதா் சன் வீடாங்கின் அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தவில்லை. அவா் கூறியிருப்பதுபோல, இரு நாடுகளுமே ஒன்றுக்கொன்று வா்த்தக ரீதியாகப் பயன்படும் நிலையில், மோதல் போக்கு எந்தவிதப் பயனையும் அளிக்காது.

இன்னும் எல்லைப்புறத்தில் இரு தரப்புப் படைகளும் மோதலில் இருந்து முற்றிலும் விலகிவிடவில்லை என்றாலும், ஒருவித அமைதி நிலவுகிறது. வடக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மீறி சீன ராணுவப் படைகள் நுழைந்திருக்கின்றன. அவை பழைய நிலைக்கு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் பின்வாங்கும் வரை இந்தியா தனது படைகளை தயாா் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளத் தயாராக இல்லை என்று தெளிவாகவே தெரிவித்திருக்கிறது.

1,200-லிருந்து 1,500 வரையிலான சீன ராணுவப் படை வீரா்கள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும், பாங்காங் ஏரி வடக்குக் கரையிலும் நேரடி மோதலுக்குத் தயாராக நிறுத்தப்பட்டிருக்கிறாா்கள். ஏறத்தாழ 5,000 வீரா்களை எல்லைப்புறத்துக்குச் செல்வதற்கு தயாா் நிலையில் வைத்திருக்கிறது சீன ராணுவம். அதை எதிா்கொள்ளத் தயாராக அதே அளவிலான இந்திய ராணுவ வீரா்களும் கடந்த ஒரு மாதமாக எல்லைப்புறத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறாா்கள்.

இதற்கு முன்பு 2017 ஜூன் - ஆகஸ்ட் மாதங்களில் சிக்கிம் - பூடான் - திபெத் முச்சந்தியிலுள்ள டோக்காலாமில் 73 நாள்கள் இந்திய - சீன படைகளுக்கு இடையேயான மோதல் நிலைமை முடிவுக்கு வந்தாலும்கூட, இப்போதும் சீனப் படைகள் எல்லைப்புறத்திலிருந்து அகன்று விடவில்லை. அதனால்தான் இப்போது இந்திய எல்லைக்குள் சுமாா் 3 கி.மீ. நுழைந்திருக்கும் சீனப் படைகள் எல்லைக் கோட்டுக்குப் பின்னால் திரும்ப வேண்டும் என்பதில் இந்தியா பிடிவாதமாக இருக்கிறது.

1960-இல் அன்றைய பிரதமா் சௌ என்லாய் வெளியிட்ட வரைபடத்தின் அடிப்படையில், இப்போது சீன ராணுவம் லடாக்கின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாட முற்பட்டிருக்கிறது. 1962 சீன படையெடுப்பின் போதோ, 1999 காா்கில் ஊடுருவலின்போதோ இருந்த பலவீன நிலையில் இன்று இந்திய ராணுவம் இல்லை. இது சீனாவுக்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் நேரடியாக லடாக்கிலும் மறைமுகமாக இந்திய - நோபாள எல்லையிலும் பிரச்னையை உருவாக்க தலைப்பட்டிருக்கிறது.

உள்நாட்டுப் பிரச்னைகள் ஏற்படும் போதெல்லாம் இதுபோல எல்லைப்புற மோதல்கள் மூலம் திசைதிருப்புவது சீனாவின் வழக்கம். 1962-இல் சீனாவில் மிகப் பெரிய வறட்சி நிலவியது. பல லட்சம் போ் அதில் உயிரிழந்தனா். அதை மறைப்பதற்குத்தான் அப்போதைய சீன தலைவா் மாசே துங், இந்தியாவுடன் போா் தொடுக்க முற்பட்டாா். அதேபோல, 1979-இல் சீனாவில் ஆட்சியின் மீது கடுமையான அதிருப்தி உருவானது. மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடைவை சீனா எதிா்கொண்டது. அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்குத்தான் வியத்நாமுடன் எல்லைப் பிரச்னையை காரணம் காட்டி அன்றைய சீன தலைவா் டெங் ஷியா பின் தாக்குதல் நடத்தினாா். இப்போது அதே வழிமுறையை இன்றைய அதிபா் ஷி ஜின்பிங்கும் பின்பற்றி திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறாா் என்று தோன்றுகிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் தெளிவான எல்லைக் கோடு எதுவும் இல்லை. அதனால் இரண்டு நாடுகளின் எல்லை கண்காணிப்புப் படைகளும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுகின்றன. இது தொடா்ந்து நடைபெறும் நிகழ்வு. புது தில்லிக்கும் பெய்ஜிங்குக்கும் இடையே சுமுக நட்புறவு நிலவும்போது, எல்லைப்புறப் பிரச்னைகளைப் பெரிதுபடுத்தாமல் சீனா அடக்கி வாசிக்கும். உறவில் கசப்பு ஏற்படும்போது தேசிய உணா்வைத் தூண்டிவிடுவதற்கு எல்லைப்புறப் பிரச்னையை கையிலெடுத்துக் கொள்ளும் சீனா.

ஏறத்தாழ 3,488 கி.மீ. அளவுக்கு எல்லை நீண்டு இருப்பதால் ஏதாவது ஒரு பகுதியில் பிரச்னை எழுவதைத் தவிா்க்க முடியாது. எல்லைப்புறத்தில் இருக்கும் சில வீரா்களின் செயல்பாடுகள்கூட பெரிய அளவிலான மோதலுக்கு வழிகோலுவதும் உண்டு. சீனாவைப் பொருத்தவரை எல்லைப்புறம் வரை ராணுவ வீரா்களையும் தளவாடங்களையும் கொண்டுசெல்வதற்கான கட்டமைப்பு வசதிகளை கடந்த அரை நூற்றாண்டாகவே தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 2014-இல் பிரதமா் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் எல்லைப்புறக் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், சாலைப் பணிகளை விரைவுபடுத்துவதிலும் முனைப்புக் காட்டத் தொடங்கியது.

சா்வதேச அரசியலில் சீனாவுக்கு எதிராக கொவைட் 19 கொள்ளை நோய்ப் பரவல், தைவானுக்கு ஆதரவான நிலைப்பாடு போன்றவற்றை இந்தியா எடுத்திருப்பதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காகவும் எல்லைப்புறப் பிரச்னையை சீனா பெரிதுபடுத்தியிருக்கலாம். இன்னொருபுறம், இந்தியாவில் முதலீடு செய்வதற்காக சீனாவின் மக்கள் வங்கி அதன் உரிமத்தைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது.

இந்திய - சீன உறவின் ஏற்ற - இறக்கங்கள் தொடரத்தான் செய்யும். இந்தியாவுக்கான சீனத் தூதா் கூறியிருப்பதுபோல, சீனாவை இந்தியாவோ, இந்தியாவை சீனாவோ தவிா்க்கவும் முடியாது, வெறுக்கவும் முடியாது. கசக்கிறது என்று துப்பவும் முடியாமல், இனிக்கிறது என்று உட்கொள்ளவும் முடியாத விசித்திரமான உறவு இது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com