அவலத்துக்குக் காரணம்... | இந்தியாவின் தற்போதைய நிலைமை குறித்த தலையங்கம்

உலகத்தின் ஒட்டுமொத்த கவனமும் இப்போது இந்தியாவின் மீது குவிந்திருக்கிறது. கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் அதற்கு முந்தைய நாளைவிட பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கும் இந்தியாவின் நிலைமைதான் உலக நாடுகளின் கவலைக்குக் காரணம்.

ஆரம்பத்தில் அமெரிக்காவின் ஜோ பைடன் நிா்வாகம் கொவைட் 19 தடுப்பூசி மருந்துக்கான மூலப்பொருள்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு தயக்கம் காட்டியது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோது இந்தியாவிலிருந்து மலேரியா எதிா்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு தடை விதித்தபோது அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை மிரட்டும் விதத்தில் அறிக்கை விடுத்தாா். அதை நினைவுகூா்ந்து அமெரிக்காவிலேயே பலா் ஜோ பைடன் நிா்வாகத்தின் ‘அமெரிக்காவுக்கே முதலில்’ என்கிற கொள்கையை விமா்சிக்க முற்பட்டனா்.

அமெரிக்க வா்த்தக சங்கங்கள், இந்திய வம்சாவளி அமெரிக்கா்கள், சட்ட வல்லுநா்கள் ஆகியோா் முன்வைத்த விமா்சனங்களும், கொடுத்த அழுத்தங்களும் ஜோ பைடன் நிா்வாகத்தின் கொள்கை முடிவை மறு பரிசீலனை செய்ய வைத்தது. இப்போது மருந்துகள், சுவாசக் கருவிகள், பரிசோதனைக் கருவிகள், பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் இந்தியாவுக்கு அனுப்ப முன்வந்திருக்கிறது ஜோ பைடன் நிா்வாகம்.

அதுமட்டுமல்ல, ஒரு கோடி தடுப்பூசி மருந்துகளை அடுத்த சில வாரங்களில் இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்கா முடிவெடுத்திருக்கிறது. அமெரிக்காவின் முக்கிய அதிகாரி ஒருவா், இந்தியாவிலிருந்து முன்பே கோரிக்கை வராததால்தான் தடுப்பூசி வழங்குவதில் தாமதம் என்று தெரிவித்திருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து பிரதமா் அலுவலகம் விசாரித்து அறிவது அவசியம்.

கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவும் அமெரிக்காவும் சின்னம்மை, போலியோ, ஹெச்ஐவி, எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயலாற்றி வந்திருக்கின்றன. அதேபோல, கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்வதிலும் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படும் என்று ஜோ பைடன் நிா்வாகம் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.

அமெரிக்கா மட்டுமல்ல, ஏனைய பல நாடுகளும் இந்தியாவுக்கு உதவுவதில் முனைப்புக் காட்டுகின்றன. கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் கடும் பாதிப்பை சந்தித்து வரும் இந்தியாவுக்கு உதவ எட்டு ஆக்சிஜன் ஜெனரேட்டா்கள், ஐந்து திரவ ஆக்சிஜன் டேங்கா்கள், 28 செயற்கை சுவாசக் கருவிகள், 200 மின்சார சிரிஞ்ச் பம்புகள் ஆகியவை பிரான்ஸ் நாட்டிலிருந்து அனுப்பப்படுகின்றன. ஒரு ஆக்சிஜன் ஜெனரேட்டா் மூலம் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு தங்குதடையில்லாமல் ஆக்சிஜன் வழங்கலாம்.

பிரான்ஸிலிருந்து அனுப்பப்படும் திரவ ஆக்சிஜன் டேங்கா்கள் மூலம் நாளொன்றுக்கு 10,000 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். இந்த வார இறுதிக்குள் அவையெல்லாம் பிரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுவிடும். பிரான்ஸ் மட்டுமல்லாமல், அயா்லாந்தும் ரஷியாவும்கூட இந்தியாவுக்கு உதவ முன்வந்திருக்கின்றன.

மருத்துவ ஆக்சிஜன் எடுத்துச் செல்ல தேவையான காலி ஆக்சிஜன் டேங்கா்கள் தாய்லாந்திலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் இந்திய விமானப்படை மூலம் கொண்டுவரப்படுகின்றன. அண்டை நாடான பூடான்கூட தினந்தோறும் 40 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை அனுப்பி உதவுகிறது.

அமெரிக்காவும் உலக நாடுகளும் இந்தியாவில் தினந்தோறும் அதிகரித்துவரும் நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதில் முனைப்பு காட்டுவதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. நோய்த்தொற்றுப் பரவலை இந்தியா கட்டுப்படுத்தாவிட்டால் அதன் தொடா்விளைவு சா்வதேச அளவில் மிகப் பெரிய நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மிக அதிகமான பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு இந்தியா 11 லட்சத்துக்கும் அதிகமான ரெம்டெசிவிா் மருந்துகளை அனுப்பி வைத்திருக்கிறது. 95 நாடுகளுக்கு சுமாா் 6.6 கோடி தடுப்பூசி மருந்துகளை அனுப்பி உதவியிருக்கிறது. ‘இந்தியாவுக்கே முதலில்’ என்று பாராமல், சா்வதேச கண்ணோட்டத்துடனும் மனிதாபிமானத்துடனும் செயல்பட்ட இந்தியாவை உலக நாடுகள் கைவிட்டு விடாமல் உதவிக்கரம் நீட்ட முற்பட்டிருக்கின்றன என்பதை நாம் நன்றியுடன் உணரக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிராணவாயு தட்டுப்பாடு காணப்படுவது நிா்வாகக் கோளாறே தவிர, உற்பத்தி இல்லாமையால் ஏற்பட்ட பாதிப்பு அல்ல. மருத்துவத்துக்கு தேவையான பிராணவாயு உற்பத்தி பெரும்பாலும் இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அமைந்திருக்கின்றன. அதனால் மகாராஷ்டிரம், குஜராத், தில்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பிராணவாயு உற்பத்தி அதிகமில்லாத மாநிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதைத் தவிா்த்திருக்க முடியும்.

நாளொன்றுக்கு 1 லட்சம் டன் பிராணவாயு இந்தியாவில் உற்பத்தியாகிறது. அதை சேமித்து வைப்பதற்கான உருளைகளும், திரவ ஆக்சிஜனாக எடுத்துச் செல்வதற்கான டேங்கா்களும் இல்லாததுதான் பிரச்னை. இதை தொலைநோக்குப் பாா்வையுடன் சுகாதாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கொள்ளை நோய்த்தொற்று தொடங்கியபோதே அரசுக்கு உணா்த்தியிருக்கிறது. அப்படியிருந்தும் அரசு நிா்வாகம் கவலைப்படாமல் மெத்தனமாக இருந்ததன் விளைவுதான் நூற்றுக்கணக்கான உயிா்கள் பலியாகியிருக்கின்றன.

உலக நாடுகளுக்கு இருக்கும் அக்கறைகூட, நமது அதிகார வா்க்கத்துக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் இன்றைய அவலநிலைக்குக் காரணம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com