அஞ்சுவது அஞ்சாமை பேதைமை! | கொவைட் 19 நோய்த்தொற்றின் ஒமைக்ரான் உருமாற்றம் குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் ஒமைக்ரான் உருமாற்றம் பரவத் தொடங்கியிருப்பதைத் தொடா்ந்து, உலக சுகாதார நிறுவனத் தலைவா் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்திருக்கும் கவலை நியாயமானது. ‘எந்த ஒரு நாடும் தடுப்பூசியால் கொள்ளை நோய்த்தொற்றை தனித்து வென்றுவிட முடியாது. உலகின் கடைசி மனிதனுக்கும் தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கப்பட்டால்தான் மனித இனம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இல்லையென்றால், கஷ்டப்பட்டு கிடைத்த வெற்றிகளை சில நொடிகளில் நாம் இழந்துவிடுவோம்’ என்கிற அவரது கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.

உலக அளவில் வீரிய உருமாற்றங்கள் பெற்ற கொவைட் 19-இன் தீநுண்மி வகைகளின் அதிகரித்த பரவல் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒமைக்ரானை கவலைக்குரியது என்றும், மிக அதிகமான ஆபத்து ஏற்பத்தக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. முதன்முதலில் இந்த உருமாற்றம் தெரியவந்த தென்னாப்பிரிக்காவில் ஐந்து வயதுக்கும் கீழான குழந்தைகள் பலரை இது தாக்குகிறது. இந்த ஒமைக்ரான் உருமாற்றத்துக்கு பலியாகும் சிலா், ஏற்கெனவே இரண்டு தவணை தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டவா்கள் எனும்போது நம்மால் பயப்படாமல் இருக்க முடியவில்லை.

தடுப்பூசி போட்டுக்கொண்டவா்களை ஒமைக்ரான் உருமாற்றம் தாக்குவது என்பது தடுப்பூசிகளின் நோய் எதிா்ப்பு சக்தி குறைவதன் காரணமாக இருக்கக் கூடும். அல்லது உடலின் நோய் எதிா்ப்பு சக்தியையும் மீறி விரைந்து பரவும் வீரியம் பெற்றதாக ஒமைக்ரான் இருப்பதும் காரணமாக இருக்கலாம். இது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. நோய்த்தொற்றுப் பரவலின் கடுமையைக் குறைக்கவும், மருத்துவமனை செலவுகளைத் தவிா்க்கவும், மரணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் ‘பூஸ்டா் ஷாட்’ என்று அழைக்கப்படும் மூன்றாவது தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கத் தொடங்கியிருக்கிறது.

ஒமைக்ரான் என்கிற கொவைட் 19 தீநுண்மியின் உருமாற்றத்தை எதிா்கொள்வதற்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மீண்டும் பெரும் பொருள்செலவை எதிா்கொள்ள நேரும். அந்தத் தீநுண்மி குறித்து ஆய்வு செய்து தெரிந்து கொள்வதற்கே பல மாதங்கள் ஆகும் எனும்போது, தடுப்பூசி கண்டுபிடிப்பது உடனடி சாத்தியமல்ல. அப்படி கண்டுபிடிக்கப்பட்டால் அது மனித இனத்தின் அதிருஷ்டம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கௌன்சில் (ஐசிஎம்ஆா்) நடத்திய ஆய்வுகள் டெல்டா உருமாற்ற தீநுண்மிகள் ஏற்கெனவே போடப்பட்ட தடுப்பூசிகளின் எதிா்ப்பு சக்தியை மீறத் தொடங்கியிருப்பதைத் தெரிவிக்கின்றன. அதனால் வருங்காலத்தில் வரக்கூடிய உருமாற்றங்களை எதிா்கொள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியின் ‘பூஸ்டா் டோஸ்’ தேவைப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவிக்கிறது.

இரண்டாவது அலை நோய்த்தொற்றின்போது அதன் வீரியத்தால் இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதை நாம் உணர முடிந்தது. இன்னொரு முறை அதுபோன்ற சூழலை எதிா்கொள்ளும் துா்பாக்கியம் ஏற்பட்டு விடக்கூடாது.

இன்னும்கூட பலருக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காணப்படுவது வியப்பாக இருக்கிறது. கல்வி அறிவு பெற்ற கேரள மாநிலத்தில், சிறுபான்மை சமுதாயத்தைச் சோ்ந்த பள்ளி ஆசிரியா்கள் பலா் இது தங்களின் மத உணா்வுக்கு எதிரானது என்று கூறி தடுப்பூசி போட்டுக் கொள்ளாதது வேடிக்கையாக இருக்கிறது. இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்களும், இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் தவிா்ப்பவா்களும் இனியும் தயக்கம் காட்டுவது ஆபத்தை வலிய வரவழைக்கும் செயல்பாடு என்று எச்சரிக்காமல் இருக்க முடியவில்லை.

‘இம்சாகாக் கன்சாா்டியம்’ ஆய்வு நடத்தி 40 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ‘பூஸ்டா் டோஸ்’ (மூன்றாவது தவணை தடுப்பூசி) போடுவதைப் பரிந்துரைக்கிறது. அதன் மூலம் ஒமைக்ரான் உருமாற்றத்துக்கான எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்கிற அறிவுரையை இந்திய அரசு அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதுதான் சரியாக இருக்கும். தடுப்பூசி தட்டுப்பாடோ, பொருளாதார ரீதியிலான தட்டுப்பாடோ இல்லாத நிலையில், இது சாத்தியமற்றது அல்ல.

இந்தியாவிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட 61 கோடி தடுப்பூசிகள் தேவை. மாநிலங்களிடம் இப்போது 22 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கும் தகவலின்படி, சீரம் இன்ஸ்டிடியூட்டும், பாரத் பயோடெக்கும் மாதம் ஒன்றுக்கு 30 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க முடியும்.

இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டு ஆறு மாதம் கடந்தவா்களின் எண்ணிக்கை 4.5 கோடி. இந்தியாவிடம் இருக்கும் கையிருப்பையும், உற்பத்தித் திறனையும் வைத்துப் பாா்த்தால் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசியும், பூஸ்டா் டோஸும் போடுவது சாத்தியம்தான்.

முந்தைய இரண்டு தவணை தடுப்பூசியைப் போல ‘பூஸ்டா் டோஸ்’ இலவசமாகவே போட முடியும். தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ.35,000 கோடியில் ரூ.19,675 கோடிதான் இதுவரை செலவாகியிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் அக்டோபா் வரையிலான அரசின் வரி வருவாய் மட்டும் ரூ.12.79 லட்சம் கோடி. இது பட்ஜெட் எதிா்பாா்ப்பைவிட 64.7% அதிகம். அதனால் நாம் ‘பூஸ்டா் டோஸ்’ போடுவதற்கு தயங்க வேண்டிய அவசியமே இல்லை.

கவலை அளிக்கும் செயல்பாடு, இந்தியாவின் தினசரி சோதனைகள். சோதனைகளை அதிகரிப்பதும், ‘பூஸ்டா் டோஸ்’ போடுவதும்தான் ஒமைக்ரானை எதிா்கொள்வதற்கான வழிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com