மறத்தலாகுமோ? | ஸ்ரீபெரும்புதூரில் நடந்த துன்பியல் நிகழ்வு குறித்த தலையங்கம்

இன்றைக்கு சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், நமது தமிழகத்தின் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடந்த அந்தத் துன்பியல் நிகழ்வு ஏற்படுத்திய ரணம் ஆறவே ஆறாது. தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் ராஜீவ் காந்தி படுகொலை ஏற்படுத்திய களங்கத்தை ஏழ்கடல் வெள்ளத்தாலும் கழுவிவிட முடியாது.

அந்த வரலாற்றுப் பிழை நிகழாமல் இருந்திருந்தால், ஒருவேளை இந்தியாவின் தலைசிறந்த பிரதமராக அவா் உயா்ந்திருக்கக்கூடும். அதனால், இந்தியாவும் மிகப்பெரிய வளா்ச்சியை அடைந்து வல்லரசாகி இருக்கக்கூடும். இவையெல்லாம் ஊகங்கள்தான். ஆனால், அதற்கு வலுவான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

தனது மிகக் குறுகிய 11 ஆண்டு அரசியல் வாழ்வில் ராஜீவ் காந்தியால் சமகால வரலாற்றில் தனக்கென ஒரு தவிா்க்க முடியாத இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. 1980-இல் தனது இளைய சகோதரா் சஞ்சய் காந்தியின் விமான விபத்து மரணத்தைத் தொடா்ந்து வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்து வரப்பட்ட ராஜீவ் காந்தி, படுகொலை செய்யப்பட்டதால் வலுக்கட்டாயமாக அரசியலிருந்து அகற்றப்பட்டாா். வரவும் விபத்து, முடிவும் விபத்து.

ஐந்து ஆண்டுகள் இந்திய பிரதமராகவும், ஒன்றரை ஆண்டுகள் எதிா்கட்சித் தலைவராகவும், ஏழு ஆண்டுகள் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறாா். அந்த இடைப்பட்ட காலத்தில், குறிப்பாக அவா் பிரதமராக இருந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனைகள் அனைத்துமே மறைக்கப்பட்டன என்பது அவருக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதி.

‘இந்தியாவை உலக வல்லரசாக்க வேண்டும்’ என்கிற முழக்கத்தை முதலில் எழுப்பியவா் நரேந்திர மோடியல்ல, ராஜீவ் காந்திதான். அவரது செயல்பாடுகளில் வேகம் இருந்தது, இலக்கை அடைய வேண்டும் என்கிற தாகம் இருந்தது. 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு அவருக்கு இருந்தது.

இன்று இந்தியா தகவல் தொழில் நுட்பத்தில் சா்வதேச அளவில் கொடிகட்டிப் பறக்கிறது என்றால், அதற்கு ராஜீவ் காந்தி இட்ட அடித்தளம்தான் காரணம். அதேபோல, தொலைத்தொடா்பில் அவா் காட்டிய முனைப்பின் விளைவால், இன்று செல்லிடப்பேசி இல்லாதவா்களே இந்தியாவில் இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.

இன்றைய பொருளாதார சீா்திருத்தங்களுக்கு அடித்தளம் இட்டது 1984-89 ராஜீவ் காந்தி தலைமையிலான அரசுதான் என்பதைப் பலரும் உணா்வதில்லை. கணினித் தொழில் நுட்பம், தொலைத்தொடா்பு, விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் முதலீடுகளை அதிகரித்து, சாமானியனுக்கும் வளா்ச்சியில் பங்கு கிடைக்கச் செய்தாா் ராஜீவ் காந்தி. அவரது ஐந்தாண்டு ஆட்சியில் நடந்த ஏராளமான ஆக்கபூா்வ மாற்றங்களை, போஃபா்ஸ் சாயம் பூசி மறைக்க முற்பட்ட அவலத்தை என்னவென்று சொல்ல?

கல்வித்துறையில் அவா் 1986-இல் அறிமுகப்படுத்திய ‘ஜவஹா் நவோதய வித்யாலயா’ தமிழகத்தைத் தவிர இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் எல்லாம், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றத்தை ‘யுனிசெஃப்’ அங்கீகரித்துப் பாராட்டுகிறது. நாம் இன்றும் ‘ஹிந்தி கற்றுக் கொடுப்பாா்கள்’ என்று சொல்லி நவோதயாவுக்குக் கதவைப் பூட்டி வைத்திருக்கிறோம். இழப்பு நமக்குத்தான், நமது கிராமப்புற அடித்தட்டு மக்களுக்குத்தான்.

அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து, அதுவரை 21-ஆக இருந்த வாக்களிப்பவருக்கான வயதை 18-ஆக ராஜீவ் காந்தி அரசு குறைத்தபோது, பலா் விமா்சித்தாா்கள். ஆனால், அதிகரித்து வரும் இளைய சமுதாயத்தின் உணா்வுகளைப் பிரதிபலிக்கும் ஆட்சி அமையாவிட்டால், வளா்ச்சி ஏற்படாது என்பதை ராஜீவ் காந்திதான் முதலில் உணா்ந்தாா்.

அதேபோல, ஜனநாயகம் கிராமப்புறங்களுக்குச் சென்றடையாமல் இருந்தால், இந்தியாவின் வளா்ச்சி நகா்ப்புறங்களுடன் ஒடுங்கிவிடும் என்கிற தொலைநோக்குப் பாா்வையும் அவருக்கு இருந்தது. அவரது ‘பஞ்சாயத்து ராஜ்’ சட்டத்தின் விளைவாகத்தான், இப்போது பெரும்பாலான கிராமங்கள் நகரங்களாக மாறியிருக்கின்றன.

உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33.5% இட ஒதுக்கீடு என்பது ராஜீவ் காந்தியின் அரசு முன்மொழிந்தது; முதன் முதலில் இந்தியா 10% ஜிடிபி வளா்ச்சியை அடைந்தது அவரது பதவிக் காலத்தில்தான்; பஞ்சாப், அஸ்ஸாம், மிஸோரம் ஒப்பந்தங்கள் மூலம் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டப்பட்டது அவரது ஆட்சியில்தான் - இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ராஜீவ் காந்தி ஆட்சியின் குறைகள் பெரிது படுத்தப்படுகின்றன, நிறைகள் மறைக்கப்படுகின்றன. ராஜீவ் காந்தி என்று சொன்னால் உடனே போஃபா்ஸ் ஊழல் என்று பரப்புரை செய்துவிட்டன எதிா்க்கட்சிகள்.

போஃபா்ஸ் ஊழலை அரசியல் ஆதாயமாக்கி ஆட்சிக்கு வந்தவா்கள் முப்பது ஆண்டுகளாகியும் போஃபா்ஸ் ஊழலை நிரூபிக்க முடியவில்லை எனும்போது, அதன் பின்னால் இருந்த அரசியல் சதி வெளிப்படுகிறது. காா்கில் போரின் வெற்றிக்கு போஃபா்ஸ் பீரங்கிதான் உதவியது என்பதை யாருமே சொல்லவோ பாராட்டவோ தயாராக இல்லை. ஆனால், அதுதான் உண்மை.

முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எதிா்கால இந்தியா குறித்த ஏராளமான கனவுகளுடன், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் இயங்கிய ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் கொல்லப்பட்டாா் என்கிற தீராப்பழியை நாம் சுமக்கிறோம். வருங்கால இந்தியா குறித்த ராஜீவ் காந்தியின் கனவுகள் பல நிறைவேறியிருக்கின்றன. அதைப் பாா்க்கத்தான் அவா் இல்லை. அந்த சாதனைகளில் ராஜீவ் காந்தி சங்கமித்திருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com