மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று (ஜூன் 3) 12.30 மணியளவில் வெளியிடப்பட்டன.
சி.பி.எஸ்.இ., 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி முதல், ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வரை நடந்தது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சென்னை மண்டலத்தில் மட்டும் 1.78 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர்.
தேர்வு முடிவுகள், நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 2) வெளியாவதாக இருந்தன; ஆனால், மதிப்பெண் பட்டியல் இறுதி செய்வதில், தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று சனிக்கிழமை 12.30 மணியளவில் (ஜூன் 3) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை காண்பதற்காக மாணவர்கள் பலரும் சி.பி.எஸ்.இ-யின் இணையதளத்துக்கு சென்றதால், சி.பி.எஸ்.இ இணையதளம் முடங்கியது.
அலகாபாத், சென்னை, தில்லி, டேராடூன், திருவனந்தபுரம் உள்ளிட்ட மண்டலங்களுக்கான தேர்வு முடிவுகள் மட்டும்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மற்ற மண்டலத்துக்கான தேர்வு முடிவுகள், விரைவில் வெளியிடப்படும் என்று சி.பி.எஸ்.இ தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை, www.results.nic.in, www.cbseresults.nic.in, மற்றும் www.cbse.nic.in என்ற, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும், www.bing.com என்ற தேடல் தளம் மூலமும், CBSE Results என்ற ஆண்ட்ராய்டு ஆப்பிலும் தேர்வு முடிவை அறியலாம்.