ஹரியாணா மாநிலத்தில் அனைத்து அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் முறையில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வருகைப் பதிவு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹரியாணா உயர் கல்வித் துறை செய்தித் தொடர்பாளர் சண்டீகரில் கூறியதாவது:
ஆதார் அடிப்படையிலான 10 பயோ மெட்ரிக் கருவிகளை ஒரு வாரத்துக்குள் வாங்குமாறு அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயோ மெட்ரிக் கருவிகளில் அங்கு பணிபுரிபவர்களின் தகவல்களை பதிவேற்றம் செய்ய மாவட்ட தகவல் மையம் அல்லது தேசியத் தகவல் மையத்தை கல்லூரிகளின் அதிகாரிகள் தொடர்பு கொள்ளலாம் என்று அந்தச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.