

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் சார்பில் படைப்பாற்றல் திறன் மிகுந்த பள்ளி மாணவருக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்படும் என்று வேந்தரும்,தமிழ்ப்பேராயத்தின் புரவலருமான டி.ஆர்.பாரிவேந்தர் கூறினார்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயத்தின் பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் சார்பில் கவிஞர் பாரதிதாசனின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் ’வேந்தர் நெறி' மாணவர் காலாண்டு இதழை வெளியிட்டு பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பாரிவேந்தர் பேசியதாவது: ஆண்டுதோறும் சிறந்த தமிழ்ப்பேரறிஞர், தமிழறிஞர்களைத் தேர்வு செய்து விருதுகள், பரிசுத் தொகை வழங்கி கெளரவித்து வரும் தமிழ்ப் பேராயம், ரூ22 லட்சம் செலவில் 12 வகையான விருதுகளை 14 பேருக்கு வழங்கி வருகிறது.
பன்மொழி சார்ந்த மாணவர்கள் பயிலும் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆர்வம் மிக்க மாணவர்களின் பேச்சாற்றல், எழுத்தாற்றல், படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, தாய்மொழி தமிழுக்குப் பெருமை சேர்த்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்ற உறுப்பினர்களின் கதை, கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகிய படைப்புகள் ’வேந்தர் நெறி' காலாண்டு இதழுக்குப் பெருமை சேர்த்துள்ளன. வருங்கால இளம் தலைமுறை பள்ளி மாணவர்களின் தமிழ் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்ப்பேராயம் சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக இந்த விழா ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளது என்றார் அவர்.
புதியதோர் உலகம் செய்வோம் என்ற தலைப்பில் மாணவர்கள் பங்கேற்ற கவியரங்கை ’முல்லைச்சரம்' இதழின் ஆசிரியர், கவிஞர் பொன்னடியான் தொடங்கி வைத்தார். விழாவில் வி.ஜி.சந்தோஷம், தமிழ்ப்பேராயம் தலைவர் டி.பி.கணேசன், எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி முதல்வர் ஏ.சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.