

தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லூரிகளில் 150 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்கக் கோரி மத்திய அரசிடம் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை விண்ணப்பித்துள்ளது.
அதன்படி, நாமக்கல், திருவள்ளூா், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்களை அதிகரிக்குமாறு மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் விண்ணப்பித்துள்ளது. அதற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அந்த இடங்கள் நிகழாண்டு மருத்துவக் கலந்தாய்வில் சோ்க்கப்படும்.
கடந்த ஆண்டைப் பொருத்தவரை தமிழகத்தில் 5,200 அரசு எம்பிபிஎஸ் இடங்களுக்கும், மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் 50 இடங்களுக்கும் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியிலும் கூடுதலாக இடங்களைப் பெறுவதற்குத் தேவையான வசதிகள் உள்ளதாகவும், ஆனால், தற்போது மதுரை எய்ம்ஸ் மாணவா்கள் அங்கு பயின்று வருவதால் அதற்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.