
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மாலை 4.30 மணி நிலவரப்படி 26 தொகுதிகளில் அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சூரத் மக்களவைத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியின்றி பாஜக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் பாஜக 17, காங்கிரஸ் 4, மதசார்பற்ற ஜனதா தளம் இரண்டு, ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், பாஜக கூட்டணி 297, இந்தியா கூட்டணி 228 மக்களவைத் தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் குஜராத் சூரத், கர்நாடக சித்ரதுர்கா, ஹாவேரி, தக்ஷின கன்னடா, மத்திய பிரதேசம் திகாம்கர், இந்தூர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், திரிபுரா கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் கர்நாடக குல்பர்கா, மேகாலயா துரா, பஞ்சாப் ஜலந்தர், ஃபதேகர் சாஹிப் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக மாண்டியா, கோலாரில் மதசார்பற்ற ஜனதா தளமும், பஞ்சாப் சங்ரூரில் ஆம் ஆத்மியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் கயா தொகுதியில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சியின் வேட்பாளரும், தெற்கு மத்திய மும்பையில் சிவசேனை(உத்தவ்) கட்சியின் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், ஹிமாச்சல் மண்டியில் பாஜக கங்கனா, கேரளத்தில் திருவனந்தபுரத்தில்ல் காங்கிரஸ் சசி தரூர், திருச்சூரில் பாஜக சுரேஷ் கோபி உள்ளிட்டோர் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.