விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் செயல்படும் களத்தொகுப்புகளில் பணியாற்ற மகளிர் குழு கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்களிடமிருந்து சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மகளிர் திட்ட அலுவலர் பிச்சை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இம்மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மற்றும் காரியாபட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 15 களத்தொகுப்புகளில் தலா 4 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்களை வீதம் 60 பேரை நியமனம் செய்வதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்பணிக்கு மகளிர் கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினர்களாக இருந்து குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியமாகும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த குழு உறுப்பினராகவும், மக்கள் நிலை ஆய்வில் கண்டறியப்பட்டராகவும் இருக்க வேண்டும். மலைப்பகுதியில் ஆதிவாசிகள் குடியிருப்புகளில் மேற்கூறிய உறுப்பினர் இல்லாத பட்சத்தில் ஆண் உறுப்பினரை ஆட்சியரின் ஒப்புதலுடன் தேர்வு செய்யலாம். மேலும், அனைத்து பிரிவினருக்கும் 35 வயதுக்குள்ளும், பிளஸ்2 தேர்ச்சி பெற்று நன்றாக எழுதவும், கணக்கிடவும் திறன் உடையவராகவும் இருத்தல் அவசியம். பழங்குடியினர் பகுதியில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் இல்லாத நிலையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரை தேர்வு செய்யலாம். நல்ல தகவல் தொடர்பு திறமையோடு அருகில் உள்ள வங்கிகளுக்கும் சென்று வரவும், கைபேசி உள்ளராகவும் அதை இயக்கி குறுந்தகவல் அனுப்பவும், கணினி திறன் உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மதிப்பூதியமாக ரூ.2 ஆயிரம் மகளிர் கூட்டமைப்பு மூலம் மாதந்தோறும் வழங்கப்படும்.
எனவே மேற்குறிப்பிட்ட தகுதியுள்ளோர், அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் தங்களது விண்ணப்பங்களை ஜன.9ம் தேதிக்குள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கேட்டு்க கொண்டுள்ளார்.