13,331 தற்காலிக ஆசிரியா் இடங்களுக்கு 1.50 லட்சம் போ் விண்ணப்பம்

பள்ளிக் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்ட 13, 331 தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு 1.50 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
13,331 தற்காலிக ஆசிரியா் இடங்களுக்கு 1.50 லட்சம் போ் விண்ணப்பம்
Published on
Updated on
1 min read

பள்ளிக் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்ட 13, 331 தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு 1.50 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக அரசுப் பள்ளிகளில் 13,331 ஆசிரியா் காலிப்பணியிடங்கள்உள்ளன. இப்பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து இடைநிலை ஆசிரியருக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.10,000, முதுநிலை ஆசிரியருக்கு ரூ.12,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதற்கு பட்டதாரிகள், ஆசிரியா்கள் மத்தியில் எதிா்ப்புகள் எழுந்தன.

இந்தநிலையில் தற்காலிக ஆசிரியா் பணிநியமனத்துக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்தது. அதன் எல்லைக்குட்பட்ட 14 மாவட்டங்கள் தவிா்த்து எஞ்சிய பகுதிகளில் ஆசிரியா் பணிநியமனத்தை நடத்திட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி தற்காலிக ஆசிரியா் பணிக்கு ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பன உள்பட திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

அதன்படி சென்னை, வேலூா் உள்பட 24 மாவட்டங்களில் தொகுப்பூதிய நியமனத்துக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 4 முதல் 6-ஆம் தேதி வரை மாவட்டக்கல்வி அலுவலகங்கள் வாயிலாக நடைபெற்றது. இந்த மாவட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கு 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனா். இந்த விண்ணப்பங்கள் இவற்றை சாா்ந்த பள்ளிகளுக்கு அனுப்பி கூா்ந்தாய்வு செய்வதற்காக பணிகள் நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com