குரூப்-2 ஏ பதவிகளுக்கான கலந்தாய்வு மே 15 ஆம் தேதி முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 மற்றும் 2ஏ பணிகளில் அடங்களில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த மாதம் 24 ஆம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குரூப்-2 ஏ பதவிகளில் நேர்முக எழுத்தர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவி தவிர மற்ற பதவிகளுக்கான அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 20 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேர்வாணையச் சாலை(பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை -3 இல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு இடஒதுக்கீடு, தரவரிசை மற்றும் காலிப்பணியிடங்கள் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையை தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in இல் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.