
தமிழகத்தில் நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு டெட் தாள் -1, பட்டதாரி ஆசிரியர்களுக்கு டெட் தாள்-2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நவ.1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தோ்வு வாரியம் கடந்த ஆக.11-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாளன்று ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- 1 நவ.15-ஆம் தேதியும், தாள்- 2 நவ.16-ஆம் தேதியும் நடைபெறும் என திருத்திய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் டெட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று(செப். 8) மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், செப். 10 ஆம் தேதி மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடைசி நாளான இன்று, ஒரே நேரத்தில் பலரும் விண்ணப்பப் பதிவு செய்ததால் இணையதளம் முடங்கிய நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தமிழக டிஜிபி விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.