மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் குடிமைப் பணி (ஐஏஎஸ்) தேர்வில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் இளைஞர் தமிழக அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் 21-ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ரோட்டடி தெருவைச் சேர்ந்தவர் விவசாயி முருகவனம். இவரது மனைவி முல்லைக்கொடி. இவர்களுக்கு பிரதாப் முருகன் (22), சிவராம போஸ் (20) என்று இரு மகன்கள் உள்ளனர்.
இதில் பிரதாப் முருகன் தற்போது ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் 21-ஆவது இடத்தையும் மாநில அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் 5-ம் வகுப்பு வரை வத்திராயிருப்பு ரெங்காராவ் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை திருநெல்வேலி ரோஸ் மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பை மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியிலும் படித்துள்ளார்.
சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக். கெமிக்கல் என்ஜினியரிங் முடித்த இவர், தில்லியில் உள்ள வஜ்ரம் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெற்று, தேர்வை எழுதினார்.
தற்போது வெளிவந்துள்ள குடிமைப் பணி தேர்வு முடிவில் பிரதாப் முருகன் தேசிய அளவில் 21-ஆவது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
இவரது சகோதரர் சிவராம போஸ், கோவையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
ஐஏஎஸ் தேர்வில் பிரதாப் முருகன் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளதை இப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பிரதாப் முருகன் தற்போது சென்னையில் உள்ளார்.