ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்
'யெஸ் பேங்க்' நிறுவனர் ராணா கபூர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு, 550 கோடி ரூபாய் கடன் அளித்து, பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் சுமார் 46 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, நரேஷ் கோயல் மீதும், அவரது மனைவி அனிதா மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.
இந்த நிலையில் மும்பையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நரேஷ் கோயலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக, கடந்த, 18ம் தேதி விசாரணைக்கு வருமாறு, நரேஷ் கோயலுக்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பியிருந்தது. ஆனால், 'உடல் நலம் சரியில்லை' என கூறி நரேஷ் கோயல் ஆஜராகவில்லை.
இதையடுத்து, அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில், நரேஷ் கோயல் சனிக்கிழமை ஆஜரானார். அவரிடம், ராணா கபூருக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.