தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுள் திருமயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில் மிகவும் முக்கியமானது. சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம் இதுவே.
பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்று பெயர் பெற்றது.
திருவமிகு சிவலிங்க திருமேனியோடு மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார் கபாலீஸ்வரர்.
கபாலீஸ்வரர் சந்நிதிக்கு வலப்புறத்தில் தெற்கு நோக்கிய தனிக்கோயிலில் கற்பகவல்லி தாய் வீற்றிருக்கிறார்.
திருக்கோயிலின் கிழக்குப்பகுதியில் உள்ள இராஜகோபுரம் 20 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் உடைய பரப்பில் ஏழுதளங்களும், ஒன்பது கலசங்களும் கொண்டுள்ளது.
திருக்கோயில் மேற்கு நோக்கி இருக்கிறது. வாயிலின் முன்புறம் நடுமண்டபத்தோடு கூடிய பெரிய திருக்குளம் பேரழகுடையதாய்க் காணப்படுகிறது. இதுவே, கபாலீ தீர்த்தம் எனப்படுகிறது.
மேற்கு கோபுரத்திற்கு நேர் எதிரில் கபாலீஸ்வரரை நோக்கிய வண்ணம் நந்தி அமைந்துள்ளது. நந்தியையொட்டி கொடிமரமும், பலிபீடமும் அமைந்துள்ளது.
முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம்.