

புது டில்லி, பிப். 3 - தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி, பதவியிலிருந்து நீக்கப்பட்ட தி.மு.க. மந்திரி சபையிலிருந்த அவருடைய சக அமைச்சர்கள் சிலர் ஆகியோர் மீது கூறப்படுகின்ற ஊழல் புகார்கள், அதிகார துஷ்பிரயோகப் புகார்கள் பற்றி விசாரணை நடத்த ஒரு நபர் கமிஷனை மத்திய அரசு இன்று நியமித்தனர். சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆர். எஸ். சர்க்காரியா ஒரு நபர் கமிஷனாக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்தக் கமிஷன் 1977 பிப்ரவரிக்குள் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கும். கமிஷனின் தலைமைக் காரியாலயம் டில்லியில இருக்கும்.
இன்று லோக சபையில் உள்நாட்டிலாகா துணை அமைச்சர் ஓம் மேத்தா கமிஷன் நியமனம் பற்றி அறிவித்தார். விசாரணைக் கமிஷன் சட்ட மூன்றாவது பிரிவின் கீழ் இந்தக் கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு 27 புகார்கள், விசாரணைக் கமிஷனிடம் விடப்பட்டுள்ளன.
அறிக்கை விவரம்
துணை அமைச்சர் ஓம் மேத்தா வெளியிட்ட அறிக்கை விவரம்: இதுவரை பதவியிலிருந்த தமிழ்நாடு மந்திரி சபை மீது ஊழல் புரிந்ததாகவும், வேண்டியவர்களுக்குச் சலுகைகள் காட்டியதாகவும், நிர்வாக, நிதி விஷயங்களில் முறையின்றி நடந்து கொண்டதாகவும் புகார்கள் வந்துகொண்டிருந்தன என்பதை சபை அறியும். 1972 நவம்பரில் தமிழ்நாடு எம்.எல்.ஏ.யான எம்.ஜி. ராமச்சந்திரன் ராஷ்டிரபதியிடம் புகார்களடங்கிய மனு ஒன்றைக் கொடுத்தார். பின்னர் எம். கல்யாணசுந்தரம் எம்.பி.யும் மற்றும் சிலரும் ராஷ்டிரபதியிடம் இன்னொரு மனுவைக் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து கல்யாண சுந்தரத்திரத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. இந்த மனுக்களில் 5 புகார்கள் கூறப்பட்டிருந்தன. இந்த புகார்களில் 37. கருணாநிதி மீது கூறப்பட்டவையாகும். 13. மற்ற அமைச்சர்கள் மீது கூறப்பட்டவையாகும். பாக்கி 14 புகார்கள், மாநிலத்தில் தி.மு.க. கட்சியின் அதிகார துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட பொதுப்படையான தன்மை வாய்ந்தவையாகும். ...
... புகார்கள்
கமிஷனின் விசாரணைக்கு விடப்பட்டுள்ள புகார்களில் குற்றச்சாட்டுகள், கீழ்க்கண்டவை இடம் பெற்றுள்ளன.
(1) ஒரு படக் கம்பெனியிலிருந்து பாகஸ்தராக பதவி வகித்து விலகிய பிறகும் முன்னான் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு அதன் மீது தொடர்ந்து ஆதிக்கம் இருந்தது.
(2) முதலமைச்சரான பிறகும் சில நிறுவனங்களிடமிருந்து அவர் பணம் பெற்று வந்தார்.
(3) முன்னாள் முதலமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவருடைய அதிகார துஷ்பிரயோகம் காரணமாக வீடுகளையும் சொத்துக்களையும் சேர்த்தனர்.
(4) வீராணம் திட்டத்துக்கான செலவு சம்பந்தமாக முறைகேடுகள். ...
புது டில்லி, பிப். 3 - பார்லிமெண்ட் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்கு சட்டபூர்வமாக அளிக்கப்பட்ட பாதுகாப்பை ரத்து செய்யும் மசோதாவுக்கு பார்லிமெண்ட் அங்கீகாரம் அளித்துவிட்டது.
ஏற்கனவே லோக் சபையில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதா இன்று ராஜ்ய சபையிலும் நிறைவேறியது.
இம்மசோதா பற்றி எதிர்க்கட்சியினர் குறை கூறியதை நிராகரித்து தகவல் ஒலிபரப்பு மந்திரி வி.சி. சுக்லா ராஜ்யசபையில் பேசுகையில், இம்மசோதா பத்திரிகைகளின் சுதந்திரத்தையோ, பார்லிமெண்ட் உறுப்பினர்களின் சுதந்திரத்தையோ மட்டுப்படுத்தவில்லை என்றார். இம்மசோதா பார்லிமெண்ட் நடவடிக்கைகளிலும், பத்திரிகைத்துறையிலும் ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று அவர் சொன்னார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.