21.2.1976: சென்னைக்கு கிருஷ்ணா ஜலம்: ஆந்திராவுடன் பேச தமிழக அதிகாரிகள் செல்வர்

சென்னைக்கு கிருஷ்ணா நதி தண்ணீர் கொண்டு வருவது பற்றி...
21.2.1976
21.2.1976
Updated on
1 min read

சென்னை, பிப்: 20 - சென்னைக்கு கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் கொண்டு வருவது பற்றி பேசி முடிவு செய்து திட்ட வடிவம் கொடுப்பதற்காக தமிழக அதிகாரிகள் குழு ஆந்திர மாநிலத் தலைநகரான ஹைதராபாத் செல்ல இருக்கிறது. அடுத்த ஒரு வார காலத்திற்குள் இந்தக் குழுவை ஆந்திராவுக்கு அனுப்பி வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பணித்துறை செயலாளர், பாசனத்துறை பிரதம பொறியாளர், பாசனத்துறையைச் சேர்ந்த இதர அதிகாரிகள் இக்குழுவில் அடங்கி இருப்பார்கள் என்று அறியப்படுகிறது. நீர்வரத்துக் கால்வாய் அமைப்பு உள்ளிட்ட விஷயங்கள் ஆந்திராவில் விவாதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக ஆந்திர மாநில அரசுடன் தான் பேச வேண்டி இருக்கும். அதற்குப் பிறகுதான் கர்நாடக, மராத்திய மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறும். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிர ஆகிய மூன்று மாநில அரசுகளும் தலா 500 கோடி கன அடி தண்ணீரை தமிழ்நாட்டுக்குக் கொடுக்க இசைவு தெரிவித்துள்ளதை ஞாயிறன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் இந்ரா அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.

50 ஆண்டுகளுக்குப் போதும்

வீராணம் திட்டம் நிறைவேறினால் முதல் கட்டமாக சென்னை நகருக்கு நாள் ஒன்றிற்கு நாற்பது மில்லியன் காலன் தண்ணீர்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வீராணம் திட்டத்தை விட கிருஷ்ணாவிலிருந்து தண்ணீர் கொண்டு வருவது பல மடங்கு பலனளிக்கத்தக்கது ஆகும். கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வரும் திட்டம் நிறைவேறினால் நகருக்கு நாளொன்றிற்கு கூடுதலாக 275 மில்லியன் காலன் தண்ணீர் கிடைக்கும். இவ்விரு திட்டங்களும் நிறைவேறி முடிந்தால் வளர்ந்து வரும் சென்னை மாநகரின் தண்ணீர்த் தேவையை ஐம்பது ஆண்டுகளுக்கு தட்டுப்பாடு ஏதுமின்றி சமாளிக்க முடியும் என்று கருதப்படுகிறது.

நெல்லூர் - கடப்பை மாநில எல்லைப் பகுதியிலிருந்து சோமசீலா நீர்த்தேக்கத்திலிருந்து சென்னை நகருக்குக் குடிநீர் கொண்டு வருவதுதான் எளிதானது என்று கூறப்படுகிறது. கிருஷ்ணவிலிருந்து பெண்ணாற்றுக்குத் தண்ணீர் விடுவது இலகுவான திட்டம் என்று பாசனப் பொறியாளர்கள் கருதுகிறார்கள். இப்போதைய திட்டப்படி மூன்றாண்டு காலத்திற்குள் கிருஷ்ணா நீரை சென்னைக்குக் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்றி முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Summary

21.2.1976: Krishna water to Chennai: Tamil Nadu officials go to talk to Andhra Pradesh

21.2.1976
20.2.1976: அவசரநிலை அமல் பற்றி பிரதமர் பேட்டி - “நிலைமை சீர்திருந்தியதால் படிப்படியாக தளர்த்தப்படுகிறது”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com