23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூட்டை பெரம்பூர் தொழிற்சாலை தயாரிப்பது பற்றி...
23.2.1976
23.2.1976
Updated on
1 min read

புதுடில்லி, பிப். 22 - சென்னை பெரம்பூரிலுள்ள இணைப்பு ரயில் பெட்டித் தொழிற்சாலை, இரு அடுக்கு ரயில் பெட்டிக்கான மேற்கூடு தயாரிப்பை முடித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் செய்து முடிக்கப்பட்ட இந்த மேற்கூட்டில், அத்தொழிற்சாலை இப்போது சாதன வசதிகளைப் பொருத்தி வருகிறது.

பெரம்பூர் இணைப்புப் பெட்டி தொழிற்சாலை, மேலும் 42 மேற்கூடுகளையும் செய்து முடித்துள்ளது. இவற்றில் பிராட்கேஜ் இரண்டாம் வகுப்புப் பெட்டிக்கானவை 10, பிராட்கேஜ் முதல் வகுப்புப் பெட்டிக்கானவை 13, மின்சார பலநோக்கு யூனிட்டுக்கானவை 5, மீட்டர்கேஜ் இரண்டாம் வகுப்புப் பெட்டிக்கானவை 10. டான்ஜானியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கான மேற்கூடுகள் - 4 ஆகும்.

1976 ஜனவரி மாதத்தின் குறியளவாகிய 32 மேற்கூடுகளுக்கு எதிராக இத்தொழிற்சாலை 43 மேற்கூடுகளைச் செய்து முடித்தது.

இத்தொழிற்சாலையின் சாதன வசதிகள் பொருத்தும் பிரிவு, ஜனவரி மாதத்தின் குறியளவாகிய 36 இணைப்புப் பெட்டிகளுக்கு எதிராக 54 இணைப்புப் பெட்டிகளுக்கு சாதன வசதிகளைப் பொருத்தியுள்ளது.

1976 ஜனவரி வரையில் நடப்பு நிதியாண்டில், இத்தொழிற்சாலை மொத்தம் 434 மேற்கூடுகளையும், அதே எண்ணிக்கையில் சாதன வசதி பொருத்தப்பட்ட பெட்டிகளையும் செய்து முடித்துள்ளது. அவற்றின் குறியளவுகள் முறையே 404, 406 ஆகும்.

இதைத் தவிர, இத்தொழிற்சாலை 115 மேற்கூடுகளைப் பழுது பார்த்தும், சரியான இடைவெளி காலங்களில் சீர்திருத்தியும் உள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜனவரி வரையில் 107 ரயில்பெட்டிகளின் பழுது பார்ப்பு வேலையையும் இது முடித்துள்ளது.

ஜனநாயக முறையை நீடிக்க பிரதமர் உறுதி - அரசியலமைப்பில் முழு மாறுதல் அவசியமில்லை எனக் கருத்து

பம்பாய், பிப். 22 - ஜனநாயகத்தை கடைப்பிடிப்பதை இந்தியா கைவிடவில்லை, அதை கைவிடப் போவதும் இல்லை என்று பிரதமர் இந்திரா காந்தி இன்று இங்கு கூறினார்.

இந்த நாட்டில் சட்டத்தின ஆட்சியை நாம் கைவிடும் உத்தேசம் இல்லை. ஆனால் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை பராமரிக்கும் நமது முயற்சியை தகர்க்க யாரும் அனுமதிக்கப்படமாட்டார் என்றார் அவர்.

பம்பாய் வந்ததும் முதல் நிகழ்ச்சியாக சண்முகானந்தா மண்டபத்தில் "ஒழுங்குமுறை கட்டுப்பாடுள்ள ஜனநாயகம்" என்பது பற்றிய இரு தின கருத்தரங்கை பிரதமர் துவக்கி வைத்தார்.

அரசியலமைப்பு மாறுதல்கள்

தற்போதைய தேவைகளைச் சமாளிப்பதற்கு அரசியலமைப்பு சாஸனத்தில் செய்ய வேண்டிய மாறுதல்கள் பற்றி குறிப்பிடுகையில் தற்போதுள்ள முறையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறினார். ஆனால் நமது அணுகுமுறைகளை திருத்தி, நமது வழிகளை சரி செய்வதற்கு திட்டவட்டமான தேவை உள்ளது என்றார். மண்டபம் நிறைந்திருந்தது.

தற்போதுள்ள முறை செயல்படுத்தக்கூடிய முறையாகும். அது சரிவர செயல்படவில்லை என்றால் அதன் தவறு நம்மிடமுள்ளது நமது அணுகுமுறைகளையும், முறைகளையும் திருந்த 'வேண்டிய காலம் வந்துவிட்டது என்று அவர் கூறினார்.

Summary

Double-decker train coach to be built at Perambur factory

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com