
யோகம் என்ற சொல்லுக்கு லயம், ஐக்கியம் எனப் பொருள் கூறுவர். ஆன்மீகம், தத்துவ அடைப்படை நோக்கில் அனைத்து ஜீவன்களும், பரப் பிரம்மத்துடன் ஒன்றாக இணைந்து விடுவதையே குறிக்கும் சொல்லாகும் இது. கண்ணபிரான் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கும் கீதையில், கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகத்தையும் பற்றிக் கூறிவிட்டு, சுருக்கமாக, "சித்த அசித்தயோ: ஸமோ பூத்வா, ஸமத்வாம் யோகமுச்யதே...'' எனக் கூறி முடிக் கிறார். அதாவது, வெற்றி, தோல்வி இரண்டிலேயும் மனிதன் மனதை அலையவிடுவதை நீக்கி, இரண்டையும் சமநோக்குடன் பார்ப்பதுவே யோக மாகும் எனக் கூறியுள்ளார்.
பின்னர் சித்தயோகம், சகஜயோகம், ஹடயோகம் போன்ற யோக முறைகள் தோன்றின. யோக மார்க்கத்தை விஞ் ஞான அடிப்படையில் ஒரு தனிப் பெரும் நூலாக ஆக்கிய சிறப்பும் பெருமையும் மாமுனிவர் பதஞ்சலி யையே சாரும். இவர் இந்த நூலை சிறுசிறு வாக்கியங்கள் (சூத்திரங்கள்) மூலம் நன்கு விளக்கியுள்ளார். இதை ராஜயோகம் என்றும் அஷ்டாங்க யோகம் எனவும் அழைப்பர். இந்நூலில் எட்டு அங்கங்களான யமா, நியமா, ஆஸனா, பிராணாயாமா, பிரத்யாஹாரா, தாரணா, தியானா, சமாதி இவைகளை மோக்ஷத்துக்கு அழைத்துச் செல்லும் படிகளாக பதஞ்சலி கூறியுள்ளார். இவை பயிற்சி மார்ஓணகங்களேயாகும்.
யோகம் என்பது, மனது, உடல், கவனம், சங்கல்பம், உணர்ச்சி வசமாவது, வீண் பேராசை இவற்றில் செல்லும் மனத்தின் மீது ஆட்சி செலுத்து வதில் தான் அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆக மனதை அடக்குவதில் வெற்றி காண்பவனே யோகியாவான்.
பதஞ்சலி முனிவர் தன்னுடைய நூலில் தொடக்க சூத்திரமாக "யோக: சித்தவிருத்தி நிரோத:'' எனக் கூறியுள்ளார். அதாவது மன அலைகளைத் தடுத்து ஒரு வழியில் திருப்புவது தான் யோகமார்க்கம் என உபதேசிக்கிறார். மனதைத் தூய்மைப்படுத்த எழுந்ததே யோகசாதனை. இதில் எவ்வகை மர்மத்துக்கும் சந்தேகத்துக்கும் இடமில்லை.
(1) யமா என்றால் அஹிம்சை, பிறர்பால் நட்பு, குற்றம் புரியாமை, மனம், வாக்கு, செயல் இவற்றில் நேர்மை, ஒழுக்கம் முதலிய நற்குணங்களை வளர்த்து வாழ்வதே யாகும்.
(2) நியமம் என்றால் உடல் சுத்தி, ஆகாரக் கட்டுப்பாடு, இறை உணர்ச்சி, வழிபாடு, பெண் இச்சையிலிருந்து விலகல், தூய்மை உள்ளம் முதலியவைகளாகும்.
(3) ஆசனம். இதில் உடல் பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், சித்தாசனம் முதலான ஆசனப் பயிற்சிகளைக் கையாளுதலாகும். இவை பிராணாயாமத்துக்குப் பெரிதும் உதவும். மற்றும் ஹடயோகம், மூல பந்தம், உட்யாண பந்தம், ஜாலேந்திர பந்தம், நௌலி முதலியவற்றைப் போதிக்கும் ஒரு தனிக்கலையாகும்.
(4) பிராணாயாமம்: இதில் மிகுந்த எச்சரிக்கையும், நுண் ணறிவும் தேவை. ஒரு சிறந்த ஆசிரியரின் மூலம் இதைப் பயில வேண்டும். இடது நாசியால் மூச்சை இழுத்து, வலது நாசியால் விடுவது, பின் வலது நாசியால் மூச்சை இழுத்து இடது நாசியால் விடுவது பெரும் தீமை பயக்கும். மூச்சை இஷ்டப்படி அடக்குவதும் விபரீதமாகும். நாடி சுத்தத்துக்கு ஏற்பட்டதே இந்த பிராணாயாம மாகும்.
(5) பிரத்யாஹாரம். உலக விவகாரங்களான கேளிக்கை முதலியவற்றிலிருந்து மனதைத் திருப்புவதாகும்.
(6) தாரணா என்றால் மனதை ஒரு புனித உருவம் அல்லது, இருதய மத்தி, சிரசு மத்தி ஆகியவற்றில் நிலைத்து நிற்கச் செய்யும் சாதனையாகும்.
(7) தியானா என்றால் மனதை அலையவிடாமல் காத்து நீடித்து ஒரு நிலைப்படுத்துவதாகும்.
(8) சமாதி - இது தியானத்தின் முற்றின நிலையாகும். நீடித்த காலம் மனதை அசைவற்ற ஆத்ம அறிவில் லயிக்கச் செய்வதாகும். சமாதி நிலை அடைந்தவர்களுக்கு பல சித்திகள் கை கூடும். பதஞ்சலி முனிவர், எந்த ஒரு உயிரி னத்துக்கும் தீங்கு செய்வதில்லை என்ற முடிவில் ஒருவன் நிலைத்து நின்றால், எல்லா உயிர்களும் அவன் முன்னால் தங்கள் விரோதத்தை மறந்து நிற்கும் எனக் கூறியுள்ளார்.
பதஞ்சலி முனிவரின் யோகம் துறவி களுக்குத்தான் ஏற்பட்டது. மற்றவர்களுக்கு அல்ல என்று எண்ணுவது முற்றி லும் தவறாகும். நம் எல்லோருக்கும் இது பொருந்தும். மனதைத் தூய்மைப் படுத்துவதற்கும், அதை சாந்தப்படுத்து வதற்கும்தான் யோக சாதனை ஏற்பட் டுள்ளது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.