உடல் எடையைக் குறைக்க வேண்டுமா! தினமும் ஒரு ஸ்பூன் இதை சாப்பிடுங்க!
By மாலதி சந்திரசேகரன் | Published On : 18th April 2018 10:54 AM | Last Updated : 18th April 2018 10:54 AM | அ+அ அ- |

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று ஒரு பழமொழி உண்டு என்பது நினைவிருக்கிறதா? உப்பு என்பது ருசிக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல அது, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, 'சோடியம் குளோரைடு’ என்று பெயர். ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், நாம் உணவில், ஊறுகாய், சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகளை வஞ்சனை இல்லாமல் சேர்த்துக் கொள்கிறோம். அதனால், ரத்தக் கொதிப்பு போன்றவை நம்மை அணுகி விடுகின்றன.
இனிப்பு என்றால், சர்க்கரைக்குப் பதில் வெல்லம் , கருப்பட்டி போன்றவைகளையும், காரம் என்றால்,மிளகாய்க்குப் பதிலாக மிளகு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், உப்பிற்கு பதிலாக வேறு எதையாவது உபயோகிக்க முடியுமா? உவர்ப்பு என்னும் சுவை உப்பின் மூலம் மட்டுமே கிடைக்கும். பொதுவாக கடல் நீரிலிருந்துதான் உப்பு பெறப்படுகிறது. ஆனால், பாறைகள் மூலமும் உப்பு பெறப்படுகிறது என்றால் ஆச்சர்யமாக இல்லை?
இமய மலைப் பகுதிகளிலிருந்தும், நேபாளப் பகுதியிலிருந்தும் ஒரு வகை உப்பு எடுக்கப்படுகிறது. ஆம். இவ்வகை உப்பிற்கு கருப்பு உப்பு [Black Salt] என்று பெயர். இதில் இருப்பதும் சோடியம் குளோரைடு தான். கருப்பு உப்பில், கடல் உப்பைவிட சோடியம் குறைவாகக் காணப்படுகிறது. வட இந்தியாவில் 'காலா நமக்’ என்று பெயர் கொண்ட கருப்பு உப்பையே அதிகம் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த வகை, சோடியம் குறைவான கருப்பு உப்பு, நமக்கு என்ன நன்மைகளைத் தருகிறது? மேலே படியுங்கள்.
- மூட்டு வலி, தசை பிடிப்பிற்கு, கருப்பு உப்பை வெறும் வாணலியில் நன்றாக வறுக்கவும். அதை, கொட்டி விடாதபடி ஒரு கெட்டியான துணியில் மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும். வலி இருக்கும் இடங்களில் உப்பு ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் தெரியும்.
- சாப்பிட்ட பின், வயிறு உப்புசம், போன்ற பிரச்னைகள் இருந்தால், சமையலில் கடல் உப்பிற்குப் பதிலாக கருப்பு உப்பைச் சேர்த்துக் கொள்ளவும். மருந்துக்கு கடைகளில் விற்கும் ஜீரண மாத்திரைகளில், கருப்பு உப்பு தான் சேர்க்கப்படுகிறது.
- ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ் தொந்திரவு, ஏன் சாதாரண ஜலதோஷத்திற்குக் கூட, மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். அந்த நேரங்களில், இன்ஹேலரில், கருப்பு உப்பினை பொடித்துப் போட்டு சுவாசித்தால், மூச்சுத்திணறல் இருக்காது.
- உடல் எடையைக் குறைக்க, உணவில் கருப்பு உப்பு மட்டுமே சேர்த்து சமைப்பது உசிதமானது. ஏனென்றால், உடல் எடை குறைவதை கண் கூடாகப் பார்க்கலாம்.
- மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்தாகவும் பயன்படுகிறது. சிறிது கருப்பு உப்பை நீரில் கரைத்துக் கொண்டு, அத்துடன், இஞ்சி, எலுமிச்சை சாறினை சேர்த்துப் பருகினால், மலம் இளகி வெளிப்பட்டுவிடும்.
- கெட்ட கொழுப்புத் தன்மையை மட்டுப்படுத்துகிறது. கருப்பு உப்பினை உணவில் சேர்த்துக் கொள்வதால், கொலாஸ்ட்ரல் அளவு அடிக்கடி வேறுபடாமல், ஆரோக்கியமான ஒரே நிலையில் பாதுகாக்கப் படுகிறது. சீரான ரத்த ஓட்டம் உடலுக்குக் கிடைக்கிறது.
- நெஞ்செரிச்சல் நீங்குகிறது. வயிற்றில் அமிலத்தன்மை கூடுவதால்தான் நெஞ்சரிச்சல் உண்டாகிறது. கருப்பு உப்பில், ஆல்கலைன் நிரம்பி இருப்பதால், அதற்கு அமிலத் தன்மையைக் கட்டுப் படுத்தும் தன்மை உண்டு.
- ஆகாரம் உண்டவுடன், ஜீரணம் ஆகாமல், மேலுக்கு உணவு எதிர்த்து வரும் சங்கடம் சிலருக்கு இருக்கும். அந்த அவஸ்தையில் இருந்து விடுபட, ஒரு தாமிரப் பாத்திரத்தில் சிறிது கருப்பு உப்பைப் போட்டு, மிதமான தீயில் வைக்கவும். உப்பு நிறம் மாறியவுடன், தீயிலிருந்து நீக்கி, அந்த உப்பினை சிறிது எடுத்து, நீரில் கரைத்துக் குடித்தால், உணவு மேலே வருவது நிற்கும்.
- தூக்கமின்மையா? கவலை வேண்டாம். மனோதத்துவ நிபுணர்கள், அதற்கும் உபாயம் கூறி இருக்கிறார்கள். கருப்பு உப்பை உட்கொள்வதால், உறக்கத்தினைத் தரும் செரோடினின், மெலோடினின் ஆகிய இரு ஹார்மோன்களையும் பாதுகாப்பான நிலையில் வைத்துக் கொள்ளும் சக்தி அந்த உப்பிற்கு இருக்கிறதாம்.
- நீரிழிவு நோய்காரர்களை இன்சுலின் போட்டுக் கொள்வதிலிருந்து விடுவிக்கிறது. கருப்பு உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகப்படுத்தப்படாமல், பாதுகாப்பு வளையத்திற்கு உள்ளேயே வைத்திருக்கிறது.
- இவை மட்டுமல்ல முடி கொட்டுகிறதா? முடியின் நுனியில் வெடிப்பு உண்டாகிறதா? கருப்பு உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால், நல்ல கருமை நிறம் முடிக்கு கிடைப்பதோடு, வெடிப்பும் நின்று போகும்.
- தினமும், தக்காளி ஜூஸில், கருப்பு உப்பு கலந்து குடித்து வந்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம்.
- குளிக்கும் நீரில் கருப்பு உப்பைக் கலந்து குளித்தால், சருமத்தில் வெடிப்புகள் விழாமல், வழவழப்பாக இருக்கும்.
- கால் பாதங்கள் வீங்கி, வெடிப்புக்கள் இருந்தால், சிறிது கருப்பு உப்பை, வெந்நீரில் கலந்து, பாத்திரத்தில் நிரப்பி, பாதத்தினை நீருக்குள் மூழ்கினாற்போல் வைத்திருந்தால், வீக்கமும் குறையும். வெடிப்புக்களும் மறையும்.
- கருப்பு உப்பில் இத்தனை நன்மைகள் இருந்தாலும் தென் இந்தியாவில் இதன் உபயோகம் மிகமிகக் குறைவு என்றே சொல்லலாம்.
- ஏனென்றால், இந்த உப்பில் முட்டையின் மணம் இருப்பதால், சைவ விரும்பிகள் இந்த உப்பை உட்கொள்வதில்லை. மணம் மட்டுமல்ல, முட்டையின் குணங்கள் அனைத்தும் இந்த உப்பிற்கு உண்டு. ஆரோக்கியத்திற்கு ஏற்ற உப்பு என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள் என்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.
- இவ்வளவு நன்மைகள் கொண்ட கருப்பு உப்பினை சாட் ஐட்டம், ரெய்த்தா, மோர் இவற்றிலாவது சிறிது சேர்த்துக் கொண்டு பழக்கிக் கொள்ளலாம். பழங்களின் மேல் தூவி சாப்பிடலாம்.
ஆரோக்கியம் காப்போம், அவதிகளைத் தவிர்ப்போம்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...