

புது தில்லி, ஜூன் 2: வழக்கறிஞர் பட்டம் பெற்ற பிறகு அகில இந்திய தேர்வில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே வழக்கறிஞராக பணியாற்ற முடியும். இப்புதிய முறை வரும் கல்வியாண்டிலிருந்து அமல்படுத்தப்படுகிறது.
வழக்கறிஞராகப் பதிவு செய்வோர் அதற்கு முன்னதாக இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இத்தேர்வை அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும். இத்தேர்வில் வழக்கறிஞரின் தகுதி, வழக்கறிஞர் தொழிலுக்கேற்ற தகுதி உள்ளிட்டவை சோதிக்கப்படும். இத்தகவலை சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் தெரிவித்தார். இந்தத் தேர்வுகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும்.
இத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம். இந்தத் தேர்வில் கிரேடிங் முறை கிடையாது. தேர்ச்சி அல்லது தோல்வி ஆகியன மட்டுமே தெரிவிக்கப்படும்.
சட்ட ஆலோசனை நிறுவனம் ரெயின்மேக்கர், இந்தத் தேர்வு நடத்துவது, அதற்கான கேள்விகள் தயாரிப்பதில் பார் கவுன்சிலுக்கு உதவும். 2009-10-ம் கல்வி ஆண்டில் தங்களை வழக்கறிஞராகப் பதிவு செய்து கொள்வோருக்கு இத்தேர்வு நடத்தப்படும்.
தேர்வுகள் ஹிந்தி, ஆங்கிலம் உள்பட 9 மொழிகளில் நடத்தப்படும். இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 15ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை விநியோகிக்கப்படும்.மொத்தம் 11 லட்சம் வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். ஆண்டுதோறும் 11 கல்வி மையங்களில் இருந்து 60 ஆயிரம் சட்டக் கல்வி மாணவர்கள் படிப்பை முடித்து வெளிவருகின்றனர்.
பார் கவுன்சில் நடத்தும் தேர்வுக்கான கட்டணம் ரூ. 1,300. இத்தேர்வுக்கான வினாத்தாள்களை தேர்வு செய்யும் நிபுணர் குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எம்.ஜி.கே. மேனன், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.