விபத்துக்குள்ளான கப்பல் மூழ்குகிறது!

மும்பை துறைமுகத்தில் இருந்து, 5 கடல் மைல் தொலைவில் காலிஜியா 3, எம்எஸ்சி சித்ரா ஆகிய இரு சரக்குக் கப்பல்கள் சனிக்கிழமை மோதின. இதில், எம்எஸ்சி சித்ரா கப்பலில் இருந்த எண்ணெய் கடலில்...
விபத்துக்குள்ளான கப்பல் மூழ்குகிறது!
Published on
Updated on
2 min read

மும்பை, ஆக. 9: மும்பை கடல் பகுதியில் விபத்துக்குள்ளான சித்ரா கப்பல் கடலில் மூழ்குகிறது.

 கடலில் கலந்துள்ள எண்ணெய் கசிவை அகற்றும் பணியில் கடலோர காவல் படையைச் சேர்ந்த 6 கப்பல்களும், ஹெலிகாப்டரும் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் எண்ணெய் கசிவை அகற்றும் பணி தாமதமாகி வருகிறது. காற்றின் வேகம் காரணமாக எண்ணெய் கசிவு கடற்கரை வரை பரவி வருகிறது.

மும்பை துறைமுகத்தில் இருந்து, 5 கடல் மைல் தொலைவில் காலிஜியா 3, எம்எஸ்சி சித்ரா ஆகிய இரு சரக்குக் கப்பல்கள் சனிக்கிழமை மோதின. இதில், எம்எஸ்சி சித்ரா கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கசிந்தது. மூன்றாவது நாளாக எண்ணெய் கசிவு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சுற்றுச்சுழல் துறை, தேசிய பேரிடர் மீட்பு பணிகள் துறை, மும்பை மாநகராட்சி, கப்பல் துறை, மும்பை துறைமுகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

÷கடலில் கலந்து வரும் எண்ணெய் கசிவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று விரிவான அறிக்கை

இந்த சம்பவம் தொடர்பாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது, இரு கப்பல்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மகாராஷ்டிர மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முதல் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை விரிவான அறிக்கை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மீன் விற்பனை பாதிப்பு

கடலில் எண்ணெய் கசிவு கலந்து வருவதன் காரணமாக மீன் விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என தேசிய மீனவர்கள் அமைப்பின் பொதுச் செயலர் ராம்பாபு பாட்டீல் தெரிவித்துள்ளார்.

÷கடல் உணவுகளின் விற்பனையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடல் உணவுகளின் விலை 30 முதல் 40 சதம் வரை அதிகரிக்கும் என்று தெரிகிறது.

பாபா அணு ஆராய்ச்சி மையம்

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள துருவா, சிரஸ் ஆகிய அணு உலைகளை குளிரூட்டுவதற்காக கடல் நீர் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடலில் எண்ணெய் கலந்ததை அடுத்த அணு உலைகளை குளிரூட்ட கடல் நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

÷கடல் நீரின் தன்மையை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பாபா அணு ஆராய்ச்சி மைய வட்டாரங்கள் தெரிவித்தன.

÷அலிபாக், மார்வா, செவ்ரீ, எலிபண்டா ஆகிய கடற்கரை பகுதிகள் வரை எண்ணெய் பரவியுள்ளது. மேலும் கடற்கரைகளில் காணப்படும் மாங்குரோவ்ஸ் காடுகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

காவலர் சாவு

சித்ரா கப்பல் அருகே மாநகர காவல் துறையின் கடல் பிரிவு போலீஸôர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பயணித்த படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ரமேஸ் துக்காராம் (47) என்ற காவலர் உயிரிழந்தார். மற்ற 3 பேரும் நீந்தித் தப்பித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com