ஊழல் கண்காணிப்பகம் மற்றும் சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவு லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர பரிந்துரை

ஊழல் வழக்குகளை விசாரிக்கும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) மற்றும் சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு ஆகியவற்றை லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது
ஊழல் கண்காணிப்பகம் மற்றும் சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவு லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர பரிந்துரை
Updated on
1 min read

ஊழல் வழக்குகளை விசாரிக்கும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) மற்றும் சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு ஆகியவற்றை லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்த சட்டத் திருத்த மசோதாவை பரிசீலித்த காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நிலைக் குழு, தனது பரிந்துரைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று தாக்கல் செய்தது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:

லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்வு செய்யும் குழுவில், அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதபட்சத்தில், மக்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் தலைவர் இடம்பெறலாம்.

இதனால், பிரதமர் நரேந்திர மோடியைத் தலைவராகக் கொண்ட லோக்பால் தேர்வுக் குழுவில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவரை தேர்வு செய்வதிலும் இதே முறையைப் பின்பற்ற வேண்டும்.

லோக்பால் அமைப்புக்கு உச்சபட்ச அதிகாரமும், அதன் நேரடிக் கட்டுப்பாட்டில் சிவிசியும், சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

லோக்பால் அமைப்பின் தலைமை அலுவலகம், சிவிசி தலைமையகத்துக்குள் இடம்பெற வேண்டும்.

சொத்து விவரங்கள் வெளியிட தேவையில்லை:

அரசு ஊழியர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்பது தேவையற்றது. இது, ஆங்கிலேயர் கால நம்பிக்கையற்ற, சந்தேக புத்தியின் வெளியிப்பாடு ஆகும். இந்த விதி, முறைகேடுகளுக்கு எதிராக பாதுகாப்பதை விட, அரசு ஊழியர்களை துன்புறுத்துவதற்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

எனினும், ஓர் அரசு ஊழியர், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்திருக்கிறாரா? என்பதைக் கண்டறிய மின்னணு கண்காணிப்பு முறையை பின்பற்றலாம்.

அரசு நிர்வாகத்தில் முறைகேடு புகார்களை விசாரிப்பதற்கு மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பும் உருவாக்குவதற்கு லோக்பால் சட்டம் வழிவகை செய்கிறது. இந்தச் சட்டத்துக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com