

தில்லி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிபிஐ சோதனை விவகாரத்தில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் கேஜரிவால் ஊழல் அதிகாரிகளைப் பாதுகாக்கிறார் என பாரதீய ஜனதா கட்சி குற்றம்சாட்டியது.
தில்லியில் நேற்று நடைபெற்ற சிபிஐ சோதனை குறித்து இன்று கருத்து தெரிவித்திருந்த கேஜரிவால், ராஜேந்திர குமார் வழக்குக்கு தொடர்பில்லாத ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், தில்லி கிரிக்கெட் சங்கம் தொடர்பான கோப்புகளையும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர் என்றார்.
இதை கண்டித்த தில்லி மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத்யா, ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் கேஜரிவால் கரைபடிந்துள்ள தமது கட்சி எம்.எல்.ஏ.க்களையும், அதிகாரிகளையும் பாதுகாக்க போராடி வருகிறார். இதனால் அவருக்கு இந்த ஆண்டின் சிறந்த 'யூ-டர்ன்' (தனது கருத்தை மாற்றி கொள்ளுதல்) விருது வழங்கலாம் என்றார்.
தில்லி முதன்மை செயலர் ராஜேந்திர குமார் மீது கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே சிபிஐ அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தியது. இதற்கு ஏன் கேஜரிவால் குழப்பமடைகிறார்.
அவரது செயல்பாடுகளும், பேச்சுகளும் அவர் குழம்பிய நிலையில் இருப்பதையே காட்டுகிறது என்றார்.
அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ள கருத்துகள் கண்டிக்கத்தக்கவை என்ற அமைச்சர் ஜித்தேந்திர சிங், அவை வெட்கக்கேடானது என்றார்.
சிபிஐ என்பது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை என்ற அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஆம் ஆத்மி கட்சியினர் கவலைப்படவேண்டாம். சிபிஐ தனது கடமையை தொடர்ந்து செய்யும் என்றார்.
ராஜேந்திரகுமார் மீது ஆம் ஆத்மி உறுப்பினரே புகார் அளித்துள்ள நிலையில், தற்போது அக்கட்சியினர் என்ன செய்ய போகின்றனர் என்றார் நாயுடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.