""வெளிநாடு வாழ் பிரதமராக நரேந்திர மோடி செயல்படுகிறார்'' என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: வெளிநாடு வாழ் பிரதமராக மோடி செயல்படுகிறார்.
மோடி அரசு விவசாயிகளுக்கும், சாதாரண மக்களுக்கும் வாக்குறுதிகளை அளித்திருந்தது. கடந்த ஓராண்டில் ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றப்படாததால் அந்த மக்கள் கோபம் அடைந்துள்ளனர். தற்போது, தொழிற்சாலைகள், தொழிலதிபர்கள் ஆகியவற்றைப் பற்றி மட்டுமே பாஜக அரசு பேசி வருகிறது. அரசின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள், வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தொழிலதிபர்களை மட்டுமே உடன் அழைத்துச் செல்கின்றனர்.
கூட்டுறவுத் துறையில் எந்த வித அரசியலும் இல்லாமல் இருந்தது. பாஜக அரசு அந்தத் துறையை அரசியல் மூலம் சிதைத்துவிட்டது என்றார் அகமது படேல்.