சிமி இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், மூன்று பேருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் (சிமி) இயக்கத்தினர் கேரள மாநிலத்தில் ரகசியக் கூட்டம் நடத்திய 5 பேர் குற்றவாளிகள் என்று தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 11 பேர் விடுவிக்கப்பட்டனர்.
கேரள மாநிலம், பண்ணைகுளத்தில் 2011-ஆம் ஆண்டு டிசம்பரில், சிமி இயக்கத்தினர் ரகசியக் கூட்டம் நடத்தியுள்ளனர். அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் உள்ள கருத்துகள் அடங்கிய புத்தகங்களையும், துண்டுப் பிரசுரங்களையும் அவர்கள் பறிமாறிக் கொண்டனர். மேலும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தவும் அவர்கள் சதித் திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டது.
கேரள மாநிலத்தின் இடுக்கி, கோட்டயம், திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் இருந்து மொத்தம் 17 பேர் இந்த சதிக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் 18 வயதுக்குள்பட்டவர்.
இந்த வழக்கை முதலில் மாநில போலீஸார் விசாரித்தனர். பிறகு, என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.
அதில், தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் கூட்டத்தை நடத்திய இருவர் மீதான குற்றச்சாட்டும், குற்றச்சதியில் ஈடுபட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியது. இதே வழக்கில் தொடர்புடைய மேலும் 11 மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.