

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நாளை இந்தியா வரவுள்ள நிலையில், அந்நாட்டு சிறையில் இருக்கும் 16 தமிழக மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவெடுத்திருப்பதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைதான மீனவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்குமாறு தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று நல்லெண்ண அடிப்படையில் 16 மீனவர்களை விடுதலை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நாளை அரசு முறை பயணமாக இந்தியா வரும் ரணில் விக்ரமசிங்க, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இந்தியா - இலங்கை இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
கடந்த மாதம் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்ற பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.