
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும், மத்திய அரசுடன் இணைந்து தங்களுக்கு கிடைக்கும் புலனாய்வு தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த இயலாது என்று டில்லியில் இன்று நடைபெற்ற மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய மாநில அரசுளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த 'மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கடைசியாக இந்த அமைப்பின் கூட்டம் க டந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து இந்த அமைப்பின் கூட்டம் இன்று புதுடில்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு, மத்திய மாநில அரசுகளுக்கு இடையயேயான உறவு குறித்த புன்ச்சி கமிஷன் பரிந்துரைகள், ஆதார் அட்டை மற்றும் நேரடி மானியத் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். தமிழகத்தின் சார்பாக மாநில நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்த கூட்ட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை விபரம் வருமாறு:
நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால் புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், விசாரணை அமைப்புகளுக்கிடையே சிறப்பான ஒத்துழைப்பு மற்றும் நமது காவல்துறைக்கு நவீன வசதிகள் மற்றும் உபகரணங்கள் ஆகிய விஷயங்களில் போதிய கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் நம்மால் இதை சாதிக்க முடியாது.
பல்வேறு விஷயங்களில் நாம் வெகுவாக வளர்ச்சி அடைந்துள்ளோம். இருந்த போதிலும் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப நமது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து எப்பொழுதும் கவனமாக இருப்பதுடன் நம்மை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டால்தான் வளர்ச்சி அடைய முடியும் . அவ்வாறு இணைந்து செயல்படுவதற் கான சரியான தளத்தை இந்த மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் நமக்கு .அளிக்கிறது. இங்கு நாம் ஒருங்கிணைந்து வளர்ச்சிக்கான கொள்கைகளை விவாதிக்கலாம்.
எந்த ஒரு மாநில அரசும் தனித்து நின்று திட்டங்களை நிறைவேற்ற முடியாது. திட்டங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதை போல அதை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரமும் முக்கியம். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செய்லபடும் தருணங்கள் மிக குறைவாகவே நிகழ்ந்திருக்கிறது.
மக்களின் நலனுக்காக , அவர்களது பிரச்சினைகளை அடையாளம் கண்டு அது குறித்து பேசுவதற்காக, சேர்ந்து முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பை இந்த கவுன்சில் வழங்குகிறது. இதன் மூலம் ஒருங்கிணைந்த கூட்டாட்சி தத்துவம் வலுப்பெறும். நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் கண்ட கனவை இது அடையாளப்படுத்துகிறது.
6-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதன் மூலம், மத்திய வரி வருவாயில் மாநிலங்களின் பங்கு 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தங்களுடைய திட்டங்களை நிறைவேற்றுவதற்கான மாநிலங்களின் நிதி ஆதாரம் கணிசமாக உயர்ந்துள்ளது.
2015-16 ஆம் ஆண்டில் மத்திய வரி வருவாயில் மாநிலங்கள் பெற்றுள்ள தொகையானது அதற்கு முந்தைய 2014-15 ஆம் ஆண்டில் பெற்றுள்ள தொகையை விட 21 சதவீதம் அதிகமாகும். அதேபோல் பஞ்சாயத்துக்கள் மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புக்கள் பெற்றுள்ள நிதியின் அளவு ரூ 2.87 லட்சம் கோடியாகும். இதுவும் கடந்த நிதியாண்டை விட அதிகமாகும்.
மேலும் மோடி கல்வி குறித்தும் பேசினார். கல்வி என்பது குழந்தைகளிடையே கற்றுக் கொள்ளும் ஆவலைத் தூண்டுவதாகவும், அதன்மூலம் அறிவை பெற்று அதை மேம்படுத்தும் விதத்தைக் கற்றுத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தங்கள் வாழக்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருப்பதற்கான உத்வேகத்தை குழந்தைகளுக்கு அது அளிக்கிறது என்றும் மோடி குறிப்பிட்டார்.
நாம் நமது இளைய சமுதாயத்தை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் திறன் கொண்டவர்களாக உருவாக்கி, அவர்களை படைப்பாற்றல் உள்ளவர்களாக மிளிரச் செய்ய வேண்டும்.
இவ்வாறு மோடி தனது உரையில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.