வங்கதேசத்துடனான உறவுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் நாடாளுமன்றங்கள் ஒன்றியத்தின் (ஐபியூ) 136-ஆவது கூட்டத்தில் பங்கேற்க மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையிலான இந்திய நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது. இக்குழுவினர் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினாவை டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறியதாவது:
வங்கதேத்துடனான உறவுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஸ்திரமான, நிலையான, வளமான நாடாக வங்கதேசம் திகழ வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நோக்கம். இரு நாட்டு மக்களின் பரஸ்பரம் நன்மை, ஒட்டுமொத்த பிராந்தியத்தின் கூட்டு முன்னேற்றம் ஆகியவற்றுக்காவும், தோழமை, நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலும் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது.
மேலும், வங்கதேசத்தின் பொருளாதார மேம்பாட்டிலும் ஒரு கூட்டாளியாக இருக்க இந்தியா விரும்புகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள வங்கதேசத்தின் கொள்கைக்கு இந்தியா தனது முழு ஆதரவை அளிக்கும் என்றார் சுமித்ரா மகாஜன்.
"வங்கதேசம் வரலாற்று ரீதியாக இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இனி வரும் காலங்களில் இருதரப்பு உறவுகளுக்கு இந்தியாவின் வழிகாட்டுதல் தொடரும்' என்று பிரதமர் ஷேக் ஹசினா நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, நாடாளுமன்றங்கள் ஒன்றியத்தின் 136-ஆவது கூட்டத்தில் "ஏற்றத்தாழ்வுக்கு தீர்வும், அனைவருக்கும் நலன், கண்ணியம் வழங்குதலும்' எனும் தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் பங்கேற்று உரையாற்றினார்.