கோவா: தொழிலதிபர் விஜய்மல்லையாவின் கோவா கிங்பிஷர் பங்களா வீடு ரூ.73 கோடிக்கு ஏலத்தில் விறக்கப்பட்டது. மல்லையாவின் பங்காளா வீட்டை நடிகரும், பெரும் தொழிலதிபருமான சச்சின் ஜோஷி வாங்கியுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் ஏய்ப்பு செய்த மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் அவரது ’கிங் ஃபிஷர்' நிறுவனத்துக்குச் சொந்தமாக உள்ள சொத்துகளை ஏலத்தில் விற்று, அதன் மூலம் கடன் தொகையை ஈடு கட்ட வங்கிகள் முடிவு செய்தன.
அதன்படி, மும்பையில் உள்ள ’கிங் ஃபிஷர்' இல்லம், கோவாவில் உள்ள சொகுசு பங்களா ஆகியவற்றை ஏலத்துக்கு விடத் திட்டமிடப்பட்டது.
சுமார் 17,000 சதுர அடி பரப்பளவு கொண்ட மும்பை இல்லத்தின் அடிப்படை விலை ரூ.150 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகைக்கு ஏலம் எடுக்க எவரும் முன்வரவில்லை. இதனால் மூன்று முறை ஏல முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இதேபோன்று கோவாவில் உள்ள பங்களாவும் இருமுறை ஏலத்துக்கு வந்தது. அதனையும் ஏலம் கோர எவரும் முன்வரவில்லை.
இந்நிலையில், அந்த இரு சொத்துகளின் அடிப்படை விலை மேலும் 10 சதவீதம் குறைக்கப்பட்டு ஏலத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
மும்பை இல்லத்துக்கு ரூ.103.5 கோடியும், கோவா பங்களாவுக்கு ரூ.73 கோடியும் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு ஏலம் நடத்தப்பட்டது. இறுதியாக கிங்பிஷர் வில்லா விற்பனை செய்யப்பட்டதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
நடிகரும் இளம் தொழிலதிபர் ஜே.எம்.ஜே. குழும தலைவருமான சச்சின் ஜோஷி(33) கோவா கிங்பிஷர் பங்களா வீட்டை வாங்கியுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ளது.